Tuesday, December 24, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 24

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் சிம்மாசனம் அடைந்த கதை - 3

போட்டி நாளன்று யாருமறியாமல் இரண்டு பூச்செண்டுகளை உருவாக்கினான் விக்கிரமாதித்தன். ஒவ்வொரு பூச்செண்டிலும்  சில வண்டுகளையும் வைத்து அந்தப் பூச்செண்டுகளைக் கட்டினான்.

தேவர்களின் சபையில் ஆடுவதற்கு ஆயத்தமாக ரம்பையும் ஊர்வசியும் நின்றிருந்தனர். தேவேந்திரன் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். மற்ற தேவர்களும் அங்கே அவர்களுக்கென்று உள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். விக்கிரமாதித்தனை வரவேற்றான் இந்திரன். விக்கிரமாதித்தனும் அவனுக்கு வணக்கத்தைக் கூறினான். விக்கிரமாதித்தன் அந்த அப்ஸர கன்னிகளிடம் ஆளுக்கு ஒன்றைக் கொடுத்து, “நீங்கள் இருவரும் இப்பூச்செண்டுகளையும் கையில் வைத்துக்கொண்டு நடனமாடினால் சிறப்பாக இருக்கும்!” என்றான்.

ஆர்வத்துடன் அவர்கள் இருவரும் பூச்செண்டு வாங்கிக்கொண்டு நாட்டியமாடத் தொடங்கினர்.

இருவரும் பாடகர்களுடனும் தாள வாத்தியங்களுடனும் நளினமாக ஆடிக்கொண்டிருந்தனர். இருவருள் ரம்பை சற்றே உணர்வுவயப்பட்டவளாய் பூச்செண்டை அழுத்தினாள். உள்ளிருந்த வண்டு அழுத்தம் தாளாமல் வெளிவந்து அவளைக் கடித்தன. பூச்செண்டை உதறி வீசிவிட்டாள்! அதனால் அவளது நடனத்தில் தாளம் தவறியது. ஆனாலும் அவளது அனுபவத்தால் அதனைச் சமாளித்து ஆடலானாள். ஊர்வசி அந்தப் பூச்செண்டை மென்மையாகப் பிடித்திருந்ததால் அவளது ஆட்டத்தில் எந்தவிதத் தடுமாற்றமும் ஏற்படவில்லை.

இவற்றை தேவர்கள் யாரும் அறிந்துகொள்ளவில்லை. விக்கிரமாதித்தன் உன்னிப்பாக கவனித்து அறிந்தான்.

நடனம் முடிந்தது. விக்கிரமாதித்தன் எழுந்தான். தன் தீர்ப்பைச் சொன்னன்.

“ஊர்வசிதான் நடனப் போட்டியில் வென்றாள். அவளது நடனமே சிறந்தது.”

அனைவரும் விக்கிரமாதித்தனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். நம்மால் அனுமானிக்க முடியாததை மானுடன் எவ்வாறு அறிந்தான் என்ற வியப்பு!

இந்திரன் ஆரவம் மேலிடக் கேட்டான்.

“விக்கிரமாதித்தா எப்படி ஊர்வசிதான் வென்றதாகத் தீர்மானித்தா?”

விக்கிரமாதித்தன் இந்திரனைப் பார்த்து முறுவலித்தான். நடன மங்கையரிடம், “ உக்ன்கள் பூச்செண்டுகளை என்னிடம் தாருங்கள்” என்றான்.

ஊர்வசி கையில் வைத்திருந்த பூச்செண்டைக் கொடுத்தாள். ரம்பை வீசி எறிந்த இடத்தைத் தேடிக்கொண்டிருந்தாள்.
“எங்கே வீசி எறிந்தோம்?”

விக்கிரமாதித்தன் சொன்னான்,”பூச்செண்டைத் தேடவேண்டாம். விட்டுவிடுங்கள்.”

“தேவேந்திரா. பூச்செண்டிற்குள் வண்டுகளை வைத்திருந்தேன். அப்பூச்செண்டை மென்மையாகப் பிடித்திருந்ததால், ஊர்வசியை வண்டுகள் கொட்டவில்லை. அவளும் லயம் தப்பாமல் ஆடினாள். ரம்பையோ உணர்ச்சிவசப்பட்டுப் பூச்செண்டை அழுத்தினாள். வண்டுகள் வெளிப்பட்டு அவளைக் கடித்துவிட்டன. அவளது நடனத்தில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. எனவே ஊர்வசிதான் வென்றவள்”

விக்கிரமாதித்தன் விளக்கினான்.

தேவேந்திரன் மேலும் கேட்டான், “ விக்கிரமாதித்தா, இருவரும் நடனக் கலையில் சிறந்த தேர்ச்சி உடையவர்கள். ஊர்வசி மென்மையாகப் பிடித்திருந்தாள் என்பதை வைத்து நீ சொல்லும் முடிவு எப்படிச் சரியாக இருக்கும்? ரம்பையை வண்டு கடித்தது நடனம் தொடங்கி  இரண்டு நாழிகை நேரம் கழித்துத்தான். முதல் இரண்டு நாழிகை நேரத்தில் இருவரது நடனத்தை ஒப்பிட்டுக் கூறு.” என்றான்.



No comments:

Post a Comment