Thursday, December 5, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 16*

*முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1*

*சந்திரவர்ணன் கதை - 4*

சந்திரவரணன் சிறந்த முறையில் அரசாண்டு முதுமைக் காலத்தை அடைந்தான். அவனது கடைசிக் காலத்தை அடைந்தான். இறுதி நேரத்தில் அவனது நான்கு பிள்ளைகளும் அவனைச் சுற்றி நின்றிருந்தனர். பத்ருஹரியைப் பார்த்துக் கவலையுடன் அழுதான். தந்தையைப் போலவே சாஸ்திரம் அறிந்த பத்ருஹரி,” கவலைகொள்ளாதீர்கள் தந்தையே! எனக்குத் திருமணம் நடந்து என்மூலம் உங்கள் சந்ததி விருத்தியானால் உங்களுக்கு நற்கதி கிட்டாது  என்றுதானே அச்சப்படுகிறீர்கள்? என் மனைவிமூலம் உங்களுக்குச் சந்ததி உருவாகாது என்று வாக்களிக்கிறேன்.” என்றான்.

பிறகு மற்ற பிள்ளைகளிடம், “ மகன்களே, பத்ருஹரியின் அம்மா தாசியினத்தைச் சேர்ந்தவள். அவளால்தான் உங்கள் தாய்களை மனைவிகளானார்கள். பத்ருஹரியையே எனக்குப் பிறகு அரசனாக நியமிக்கிறேன். அவனுக்கு உறுதுணையாகா நீங்கள் மூவரும் இருக்கவேண்டும்.” என்று கூறினான்.

சந்திரவர்ணனின் மறைவுக்குப் பின் பத்ருஹரி அரசனான்.

சந்திரவர்ணனின் அந்தணகுல மனைவியான கல்யாணியின் மகனான வல்லபரிஷி எல்லோரையும்விட மூத்தவன். அவன் மூவரையும் வாழ்த்திவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு காட்டுக்குச் சென்றான். அங்கு இறைவனை நோக்கித் தவம் செய்து தன் பிறவிக் கடனைக் கழிக்கலானன்.

உலகத்தின்மீது பற்றை ஒருவன் வெறுத்தாலும், அதை ஒருவன் அனுபவித்தால் மட்டுமே தீரும்; சேரக்கூடாத பெண்ணைச் சேர்ந்தாலும் மதச் சடங்குகள் அவளுக்குப் பிறந்த வாரிசு அரியணை ஏறத் தடை செய்யும் என்பவற்றை சந்திரவர்ணனின் வாழ்வு இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டியது. அரசனானவன் தன் வாரிசுகள்மீது கவனம் கொள்ளாமல் மக்கள்மீதே கவனம் கொள்ளவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியது பத்ருஹரி அரியணை ஏறிய விதம். அந்தணனுக்கு அரசாளும் உரிமை இருந்தாலும் அவன் தவம் இயற்றுவதே சிறப்பு என்பதை வல்லபரிஷி காட்டிற்குச் சென்று தவம் இயற்றியது காட்டியது.

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

*பத்ருஹரி தன் மணிமுடி துறந்த கதை - 1*

பத்ருஹரி அரசன் மிகச் சிறந்த மன்னனாக விளங்கினான். கன்னியாபுரி நகரம் அவனது ஆட்சியில் பொன்பொலிந்து விளங்கிற்று. அவனது இரு தம்பிகளான விக்கிரமாதித்தனும் பட்டியும் அவன் மனமறிந்து உறுதுணையாக இருந்தனர். கலைமனம் கொண்ட அரசன் பத்ருஹரிக்குப் பெண்ணாசையும் அதிகமிருந்தது. 360 அழகிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாச வாழ்க்கையை வாழலானன். எவ்வாறாயினும் தனது தந்தைக்குக் கொடுத்தவாறு தனக்கு வாரிசு மட்டும் உண்டாகாத்வாறு பார்த்துக்கொண்டான்.

அவனுடைய அந்தப்புர நாயகியருள் அரம்பையைப் போன்ற அழகுடன் உள்ள அனங்கசேனையே அவனுக்கு மிகவும் பிரியமானவள். அவளையே பட்டத்து அரசியாக்கினான்.

இவ்வாறு நாள்கள் கழிகையில் அவனது நகரத்தில் வாழ்ந்து வந்த வயதான அந்தணன் ஒருவன் பூமாதேவியை நோக்கித் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த பூமாதேவி அந்தணனுக்குக் காட்சி அளித்தாள். வேண்டும் வரத்தையும் கேட்டாள்.

“தாயே! எனக்கு இளமை வரம் வேண்டும். இளமை கிடைத்தால் எனக்கு வேண்டியவற்றை நானே பெற்றுக்கொள்ள முடியும்.”

பூமாதேவி மாதுளங்கனியொன்றை அவனிடம் கொடுத்தாள்.

“இந்தப் பழத்தை உண்டால் நீ விரும்பிய இளமை கிடைக்கும்.”

No comments:

Post a Comment