Tuesday, December 17, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 20

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்கக் கதைகள் - 1

விக்கிரமாதித்தன் கன்னியாபுரிக்குத் தலைநகர் அமைத்த கதை - 1

அண்ணன் பத்ருஹரி துறவறம் பூண்டு கானகம் சென்று விட்டான். அடுத்த தம்பி விக்கிரமாதித்தன் கன்னியாபுரி அரசனானான்.
தன் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தானம் செய்தான். அனைவரிடமும் இனிமையாகப் பேசினான். அரசாங்க அலுவலர்கள் அனைவரிடமும் இனிமையாகவும் கண்ணியமாகவும் பேசி அனைவரின் ஒத்துழைப்பையும் பெற்றான்.

அவனுடைய தம்பி பட்டி, அந்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தான். ஒரு நாள் அவனை அழைத்து, “ நம் நாடு எல்லையளவில் மிகச்சிறியது. எனக்கு ஓர் ஆசை உண்டு. பரந்த இவ்வுலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நம் பெயர் புகழப்படவேண்டும். ஒரு காத தூரம் நீளமும் ஒருகாத தூரம் அகலமும் கொண்ட தலைநகரம் நமக்கு வேண்டும். அந்நகரில் ஓர் ஆறு பாயவேண்டும். அதன் கரையில் கோவில் இருக்கவேண்டும். அப்படித் தலைநகரம் அமைக்கத் தகுதியான இடம் பார்த்து வரவேண்டும்.நீ அந்தக் காரியத்தைச் செய்வாய்.”

“ஆகட்டும் அண்ணா.” பட்டி புறப்பட்டான்.

பல இடங்கள் அலைந்து திரிந்தான். வசனகிரி என்ற மலையடிவாரத்துக்கு வந்தான். மலையின் அடிவாரத்தில் குணவதி என்னும் ஆறு ஓடிகொண்டிருந்தது. அதன் கரையில் பரந்த இடம் காணப்பட்டது. விக்கிரமாதித்தன் கேட்டாற்போல் அதன் நீள அகலங்கள் ஒரு காத தூரம் கொண்டு அமைந்திருந்தது. மனித நடமாட்டம் இல்லாத இடம்.. சிறியதொரு தடாகமும் அதன் கரையில் பத்திரகாளி அம்மன் கோவில் காணப்பட்டது. அந்தத் தடாகத்தின் கரையில் உள்ள ஆலமரத்தின் கிளையில் ஏழு உரிகள் சக்கர வளையத்தில் காணப்பட்டன. அந்தத் தடாகத்தின் நடுவில் கூர்மையான வேல் ஒன்று நடப்பட்டிருந்தது.

பட்டி அதன் காரணத்தை அறிய ஆவலுற்றான். அந்தத் தடாகத்தில் இறங்கிக் களைப்புத் தீரக் குளித்தான். குளித்தபின் பக்தி சிரத்தையுடன் கோவிலுக்குள் நுழைந்தான். பத்திர காளி அம்மனின் முன்னால் உள்ள ஒரு குத்துக்கல்லில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தான்…

No comments:

Post a Comment