Monday, November 18, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் – 9

நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 6

"அமைச்சரே! என் மகன் ஜெயபாலன் வேட்டைக்குக் கிளம்புகையில் துர்நிமித்தங்கள் தோன்றின. அதைப் பொருட்படுத்தாது வேட்டைக்குச் சென்றான். அவனுடன் சென்றவர்கள் அனைவரும் வந்துவிட்டாலும் ஜெயபாலனைக் காணவில்லை. அவனைத் தேட ஏற்பாடு செய்யுங்கள்." என்றான் நந்த மன்னன்.

பஹூசுருதனும் அவரது மகன் புத்திசாகரனும் மற்றவர்களும் காட்டில் இளவரசனைத் தேடினர். அங்கே ஜெயபாலன் "ஸஸேமிரா, ஸஸேமிரா " என்று கூறியவாறே பிரமை பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை அப்படியே அழைத்து வந்து மன்னன் முன் நிறுத்தினர்.

அவனது நிலையைக் கண்டு கவலைப்பட்ட மன்னன் நாடெங்கிலும் உள்ள வைத்தியர்களையும் நிபுணர்களையும் மந்திரவாதிகளையும் வரவழைத்து மகனுக்கு சிகிச்சை அளித்தான். யாராலும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை.

முதன் முறையாக மன்னன் தனது இராஜகுருவை எண்ணிக் கவலை கொண்டான்.

" என் சந்தேக புத்தியால் இராஜகுரு சாரதாநந்தனர் மறைந்துவிட்டார். அவர் மட்டும் இருந்தால் என் மகனைக் குணப்படுத்தியிருப்பார். தீர ஆராயாமல் செய்யும் செயல் யாவும் கெடுதலில் முடியும். நான் இப்போது என்ன செய்வேன்?"

" மன்னா, எல்லாம் விதிப்படி நடக்கிறது. அவரவர் விதிப்படியே எண்ணங்களும் நிலை தடுமாறுகின்றன. நடக்க வேண்டியவை நடந்தே தீரும். தூய பக்தியும் இறையருளும் மட்டுமே வினைப்பயனை மாற்றக் கூடியவை."

"சரி. என் மகனைக் குணப்படுத்த என்னாலான முயற்சியாக நான் என்ன செய்ய வேண்டும்? குணப்படுத்துபவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுப்பதாக அறிவிக்கட்டுமா?"

"வேண்டாம் அரசே. எனக்கு இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்."

பஹூசுருதன் யோசனையுடன் வீடு திரும்பினார். யாருமறியாமல் மறைவறையில் இருந்த இராஜகுரு சாரதாநந்தனரைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினார்.

"நாளை அரசரிடம் சென்று நான் சொல்லும் செய்தியைச் சொல்லுங்கள்."

"சொல்லுங்கள் இராஜகுரு"

"என் வீட்டில் சாஸ்திரமும் கலைகளும் பயின்ற அழகிய பெண்ணொருத்தி இருக்கிறாள். அவளிடம் ஜெயபாலனைக் கொண்டு காண்பிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவளால் நிச்சயம் இளவரசனைக் குணப்படுத்த முடியும் என்று மன்னனிடம் சொல்லுங்கள்."

No comments:

Post a Comment