Thursday, November 7, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் – 1* 7/11/2019 வியாழன்

*விக்கிரமாதித்தன் கதைகள் – 1*


ஒரு காலத்தில் உஜ்ஜயினி நகரம் உலகப் பிரசித்தம். இந்தியாவின் சிறந்த நகரங்களுள் ஒன்று. ஆனால் இந்தியாதான் தனித் தனி நாடுகளாகப் பிரிந்து கிடந்ததே. ஐம்பத்தாறு தேசம் என்று சொல்வார்கள்.

சரி உஜ்ஜயினி நகரத்துக்கு வருவோம்.

இந்நகரம் இந்தியாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மால்வா பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். தமிழில் பெருங்கதை என்ற நூலில் உஞ்சை என்ற பெயருடன் இந்நகரம் அழைக்கப்படுகிறது. பிரச்சோதனன் என்ற அரசன் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாகப் பெருங்கதை கூறுகிறது.

இன்றைய நாளில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டமே அக்காலத்தில் உஜ்ஜயினி நகரமாக விளங்கியது. ஷிப்ரா நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.

மஹாபாரதத்தில் அவந்தி நாட்டின் தலைநகரமாக விளங்கிய நகரம் உஜ்ஜயினி.

இந்துக்களின் புனித நகரங்கள் ஏழனுள் இதுவும் ஒன்று.  முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று.
உஜ்ஜயினியில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது.

மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் சிவனுடைய பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று – இந்நகரத்தில் அமைந்துள்ளது.

இந்த உஜ்ஜயினி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு புராண காலத்தில் வாழ்ந்த விக்கிரமாதித்தனின் கதையைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

குப்தப் பேரரசின் சந்திரகுப்த விக்கிரமாதித்தனுக்கும் புராண கால விக்கிரமாதித்தனுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை!

இந்தக் கதையில் இன்னொரு பாத்திரத்தையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர் – போஜராஜன்!
அவரைப் பற்றிய கதை ஒன்று உண்டு. முஞ்சன் என்ற சிறிய தந்தையால் வளர்க்கப்பட்ட சிறுவன் போஜன். அச்சிறுவனை அழித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று எண்ணினான். சில கொலையாளிகளிடம் அச்சிறுவனைக் காட்டில் கொண்டுபோய்க் கொல்லும்படி உத்தரவிட்டான்.
கொலையாளிகள் காட்டுக்குப் போய்ச் சிறுவனுடன் காட்டுக்குப் போனார்கள். அவனைக் கொல்வதற்குக் கத்தியைத் தீட்டினர்.

“உனக்கு அச்சமாக இல்லையா?”

“எதற்கு அச்சப்படவேண்டும்? யாரும் இங்கு நிரந்தரமில்லை. ஸ்ரீராமனும், கிருஷ்ணனும் கூட இங்கிருந்து போகும்போது அவர்கள் ஆண்ட பகுதிகளைக் கொண்டுபோகவில்லை.

சிற்றப்பாவையாவது பூமியிலிருந்து போகும்போது அவர் ஆண்ட பகுதியைக் கையோடு எடுத்துச் செல்லும்படி சொல்லுங்கள்!” என்று பதில் சொன்னான் போஜன்.

அச்சிறுவன்மீது இரக்கப்பட்டுக் கொல்லாமல் விட்ட கொலையாளிகள், முஞ்சனிடம் சென்று கொன்றுவிட்டதாகப் பொய் சொன்னார்கள்.

“சாகும்போது அந்தப் பையன் ஏதாவது சொன்னானா?”

உடனே அந்தக் கொலையாளிகள் அவன் சொன்னதைச் சொன்னார்கள்.

முஞ்சன் கலங்கிவிட்டான்.

“சிறுவனுக்கு என்ன ஒரு ஞானம்! ஐயோ! அவனைக் கொலை செய்யச் சொல்லிவிட்டேனே! அவன் உயிரோடு இருக்கக் கூடாதா!” என்று புலம்பினான்.

கொலையாளிகளுக்குத்தான் இரக்க சுபாவமாயிற்றே! சிறுவன் உயிரோடு இருப்பதைச் சொல்லிவிட்டார்கள்!

சிறுவனை முஞ்சன் காட்டிலிருந்து அழைத்துவரச் செய்தான். அவனைச் சிறப்பாக வளர்த்தான். நாட்டை அவனிடம் ஒப்படைத்து நற்கதி அடைந்தான். அவனுடைய அவையில்தான் காளிதாசன் என்ற மகாகவிஞன் இருந்து இந்தியாவின் சிறந்த காவியங்களைப் படைத்தான்.
இந்த போஜராஜனுக்கும் புராண கால விக்கிரமாதித்தனுக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை!

ஆனால், விக்கிரமாதித்தன் என்ற மன்னனின் கதையில் போஜராஜன் பற்றிய குறிப்பு வருகிறது!
விக்கிரமாதித்தன் கதையும் போஜராஜனிடம்தான் தொடங்குகிறது….

இந்தியாவின் புகழ்பெற்ற அந்த விக்கிரமாதித்தன் கதை…

No comments:

Post a Comment