Saturday, November 30, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 13

முதலில் நிற்கும் வினோத ரஞ்சிதப் பதுமை சொன்ன விக்கிரமாதித்தனின் தொடக்க காலக் கதைகள் - 1

சந்திரவர்ணன் கதை - 1
அந்தக் காலத்தில் நந்தியாபுரம் என்ற நகரம் இருந்தது. அங்கு கல்வியில் சிறந்த சந்திர வர்ணன் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். மேலும் கலைகளிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெறும் பொருட்டு அந்த நகரத்தை விட்டுக் கிளம்பினான். சிறந்த குரு கிடைப்பதற்காகப் பல இடங்களில் அலைந்து திரிந்தான்.

அவ்விதம் சந்திரவர்ணன் வேறு இடம் நோக்கிச் செல்கையில், குளம் ஒன்றின் அருகில் இளைப்பாறினான். அக்குளத்தில் இறங்கி நீர் அருந்திவிட்டுக் கரையில் உள்ள அரச மரத்தடியில் இளைப்பாறினான்.

அம்மரத்தில் தேவலோகத்தைச் சேர்ந்த ஒருவன் சாபத்தினால் பிரம்ம ராக்ஷசனாக மாறி வசித்து வந்தான். சந்திரவர்ணனிடம் பேச விரும்பிக் குரல் கொடுத்தான்.

"நான் இந்த மரத்தில் வசிக்கும் பிரம்ம ராக்ஷசன். அந்தணனே, இக்கொடிய காட்டின் வழி எங்கே செல்கிறாய்?"

குரலின் திசையில் தலையை உயர்த்தினான் சந்திரவர்ணன். மரத்தின் மேலொரு கோர  உருவம் அமர்ந்திருந்தது. அச்சம் கொள்ளாமல் பதில் அளித்தான்.

"நந்தியாபுரத்தைச் சேர்ந்த அந்தணன் நான். பெயர் சந்திரவர்ணன். ஓரளவு வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி அடைந்துள்ளேன். மேற்கொன்டு அவற்றை அறிய நல்ல குருவை நாடி வந்துள்ளேன்."

"நான் தேவலோகவாசி. சாபம் ஒன்றின் காரணமாக பிரம்ம ராக்ஷசனாக இங்கு இருக்கிறேன். நானும் நால்வகை வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவன்தான். நான் சொல்வதைக் கேட்பாயெனில் அவற்றை உனக்குச் சொல்லித் தருகிறேன். "

சற்றும் தயங்கவில்லை.
"நான் என்ன செய்ய வேண்டும்?"

"இன்றிலிருந்து ஆறு மாத காலம் உனக்குக் கற்பிக்கிறேன். பாடங்களை இங்குள்ள அரச  இலைகளில் எழுதிக் கீழே போடுவேன். அவற்றை எடுத்துப் படி. அவற்றில் கூறியபடி பயிற்சி செய். இந்த ஆறு மாத காலத்திற்கு உனக்குப் பசி, தூக்கம் ஏற்படாமலிருக்க மந்திரம் ஒன்றை உபதேசம் செய்கிறேன். கவனமாகக் கேள்."

அன்று முதல் பகலிரவு பாராமல், உணவு உட்கொள்ளாமல், உறங்காமல் பிரம்ம ராக்ஷசன் போடும் அரச இலைகளைச் சேமித்து, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டான்.

ஆறு மாத காலத்தில் சந்திர வர்ணன் முழுவதையும் கற்றுத் தெளிந்தான்.

ஒரு நாள் பிரம்ம ராக்ஷசனின் சாபம் நீங்கியது. தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் புஷ்பக விமானத்தை அனுப்பினான். தேவரூபம் பெற்ற பிரம்ம ரக்ஷசன், "சந்திர வர்ணா, என்னிடமிருந்து வித்தைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டாய். உன் நாடு திரும்பு. நல்ல பெண்ணை மணந்து வாழ்வாங்கு வாழ்வாய். மங்களம் உனக்கு உண்டாகட்டும்." என்று கூறிப் புறப்பட்டான்.

சந்திரவர்ணன் மகழ்ச்சியுடன் புறப்பட்டான். ஊர் திரும்பும் வழியில் கன்னியாபுரி என்ற நகரத்தை அடைந்தான்.

Monday, November 25, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 12*

*விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் உள்ள பதுமைகள் சிரித்த கதை – 2*

" அழகுப் பதுமைகளே! நான் படிகளின் மேலேற முயலும் போது நீங்கள் உயிர் பெற்றுச் சிரித்ததன் காரணம் என்ன?"

போஜ மன்னன் கேட்டான்.

பதுமை ஒன்று சொன்னது, "மகாராஜனே! தீரமும் வீரமும் தைரியமும் கொடையும் தவமும் ஆகியன கொண்டு ஆட்சி செய்த எங்கள் அரசனைப் போல் உனக்கும் சிறந்த குணங்கள் இருப்பின் நீ இந்த சிம்மாசனத்தின் மீது ஏறலாம்."

"பதுமைகளே, நீங்கள் புகழும் குணங்கள் எனக்கு இருப்பதாகக் கருதுகிறேன். என்னை அண்டியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்கி வருகிறேன்.

சிரித்தது அந்தப் பதுமை… “அரசே! என் பெயர் விநோதரஞ்சிதம்.”

மேலும் சொல்லத் தொடங்கியது!

“அரசனே! மேலும் கேள். நீ செய்திருப்பதை உன் வாயாலேயே கூறுகிறாய்! இதுவே உன் தகிதியின்மையைக் காட்டுகிறது. பிறருடைய குறைகளையும் தன்னுடைய நிறைகளையும் கூறுபவன் நல்ல குணம் வாய்ந்தவன் அல்லன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவனுடைய வயது, சொத்து, வீட்டுச் சுவற்றிலுள்ள பிளவு, ஆற்றல், மருந்து, பெண்களுடன் உள்ள தொடர்பு, கொடை, சுயமதிப்பு, தாழ்ந்த தன்மை ஆகியவற்றை வெளியே சொல்லுதல் ஆகாது என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.”

“உண்மைதான்” என்று ஒத்துக்கொண்டான் போஜராஜன்.

“மாற்றரசர்களெல்லாம் தம்மிடம் கப்பம் கட்டும்படி இந்த தேசத்தை ஆண்ட, இந்திரனை ஒத்த எங்கள் மஹாராஜா அகிலம் போற்றும் விக்கிரமாதித்தரை அறிவாயா? அவருடைய மதியூக அமைச்சர் பார் போற்றும் பட்டியைப் பற்றி அறிவாயா? அவரைப் போன்று செயற்கரிய செய்கை செய்தவர் அன்றோ இந்தச் சிம்மாசனம் ஏற வேண்டும்?”

“வினோதரஞ்சிதப் பதுமையே! முதலாவது படியில் நின்றிருக்கும் நீ மஹாராஜா விக்கிரமாதித்தனின் வரலாற்றைச் சொல்.” என்று பெருவிருப்பமுடன் கேட்டான் போஜராஜன்.

வினோதரஞ்சிதப் பதுமை கூறத் தொடங்கியது….

போஜராஜன் உட்பட அனைவரும் அமர்ந்து கேட்கத் தொடங்கினர்.

Wednesday, November 20, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் – 11*
 
*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை – 8*

இராஜகுரு சாரதாநந்தனர் அடுத்த சுலோகத்தைக் கூறத் தொடங்கினார். அது மி என்ற எழுத்தில் தொடங்கும் சுலோகம். மித்திரன் என்று தொடங்குவது. அதன் பொருளையும் விளக்கினார்.

“நட்புக்கு துரோகம் செய்பவன், நன்றி கொன்றவன், நம்பிக்கை வைத்தவர்களுக்கு துரோகம் செய்பவன் இவற்றைச் செய்பவர்கள் வானில் ஆதவனும் நிலவும் இருக்கும்வரையில் நரகத்தில் கிடந்து தவிப்பார்கள்.”

இதைக் கேட்டதுதான் தாமதம்! ஜெயபாலன் தான் சொல்லிக்கொண்டிருந்த மிரா என்னும் சொல்லில் மி-ஐ விட்டுவிட்டு ரா என்று மட்டும் சொல்லத் தொடங்கினான்.
ரா ரா ரா ரா....

இறுதியாக ரா என்று தொடங்கும் சுலோகத்தையும் சொல்லி அதன் பொருளையும் கூறினார் இராஜகுரு.

“அரசன் என்ற ராஜனே! உனது மகனின் நலத்தை விரும்புவாயெனில் உன்னைச் சுற்றியுள்ள சான்றோர்களை அரவணைத்துச் செல்க. அவர்களை உன்னுடன் தக்கவைத்துக் கொள்க.”

என்ன ஆச்சரியம்!

இளவரசன் தனது சித்த பிரமை நீங்கி மீண்டும் முந்தைய நிலையை அடைந்தான். தந்தையிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். பஹுசுருதன் மகன் புத்திசாகரன் தன்னைத் தடுத்ததையும், அதனையும் மீறிச் சென்றதையும், அதன் பிறகு நடந்ததையும் கூறினான்.

நந்த மன்னனும் அவனது மகன் ஜெயபாலனும் திரைக்குப் பின் இருக்கும் பெண்ணுக்கு நன்றி கூற விரும்பினார்கள்.
 
நந்தமன்னனுக்கு ஒரே வியப்பு!

“பெண்ணே! காட்டில் புலி, கரடி ஆகிய விலங்குகளால் ஏற்பட்ட துன்பம் உனக்கு எப்படித் தெரியும்?”

“மன்னா! சரஸ்வதி தேவி என் நாவில் குடியிருக்கிறாள். இறையருளால் நான் எப்படி உன் மனைவி பானுமதியின் மச்சத்தை அறிந்துகொண்டேனோ, அதே போல அவளருளால் கானகத்தில் நடந்ததையும் அறிந்துகொண்டேன்.” 

நந்தமன்னனுக்குத் திகைப்பு. அப்படியானால் இதுவரை என்னுடன் பெண்குரலில் பேசியவர் யார்?

திரைச் சீலையைப் பிடித்து இழுத்தான். அங்கு இராஜகுருவைப் பார்த்தான். அவரது பாதங்களில் அனைவரும் வணங்கினார்கள். என்ன நடந்தது என்பதை அமைச்சர் பஹுசுருதன் விளக்கினார். 

“அமைச்சரே! உமது அறிவாற்றலினால் நான் பிழைத்தேன். என் குடும்பத்துக்கும் நன்மை கிடைத்தது. நல்லார் நட்பு என்றும் கை கொடுக்கும். அதுவே நற்பலன்கள் கிடைக்கும் வழி. 

புனித நதிகளில் நீராடி மனிதன் தன் பாவங்களிலிருந்து விடுபடுகிறான். நல்லார் தொடர்பின்மூலம் தமது எதிர்காலத்தை அறிந்து ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறான்.

உம்மைப் போன்ற புத்திசாலி அமைச்சரினால், இராஜகுரு போன்ற நல்லவர்களின் தொடர்பும் ஆசியும் மீண்டும் வாய்த்தது. அரசானனவன் சிறந்த அமைச்சரைத் தேர்ந்தெடுத்து அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.”

இவ்வாறு நந்தமன்னன் பஹுசுருதனைப் புகழ்ந்து, அரண்மனையில் மேலும் பரிசுகள் தந்து மகிழ்ந்தான்.

*விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் உள்ள பதுமைகள் சிரித்த கதை – 1*

போஜ மன்னன், தனது அமைச்சர் நீதிவாக்கியர் சொன்ன பஹுசுருதன் கதையை கேட்டு மகிழ்ந்து, அவரைக் கட்டித் தழுவிப் பரிசுகள் தந்தான். 

பின் அந்த அழகிய சிம்மாசனத்தை உஜ்ஜயினி நகரத்துக்குக் கொண்டு சென்றான். அங்கு ஒரு சிறப்பான மண்டபத்தைக் கட்டினான். அங்கு அந்த சிம்மாசனத்தை நிறுவினான். 

வேத மந்திரங்கள் முழங்க, தெய்வீக நதிகளின் நீரினால் அந்தச் சிம்மாசனத்திற்கு அபிஷேகம் செய்தான். புரோகிதர்களை வைத்து உரிய சடங்குகள் செய்தான்.
நாடெங்கும் தானதர்மங்கள் செய்தான். பாணர்கள் அரசனின் அருமை, பெருமைகளைப் பாடினர். 

மங்கள வாத்தியங்கள் முழங்க போஜமன்னன் சிம்மாசனத்தில் ஏறமுற்பட்டான்.
சிம்மாசனத்தின் இருபக்கங்களில் உள்ள முப்பத்திரண்டு பதுமைகளும் திடீரென்று சிரிக்கத் தொடங்கின.

போஜமன்னன் சட்டென்று நின்றான்.

Tuesday, November 19, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் – 10*

*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 7*

மகிழ்ச்சி அடைந்த நந்த மன்னன் தன் மகன் ஜெயபாலனை அழைத்துக் கொண்டு அமைச்சர் வீட்டுக்கு வந்தான். பஹூ சுருதன் அவர்களை வரவேற்று பெரியதொரு அறையில் அமரச் செய்தார். மன்னன் மகனுடன் உள்ளே வந்து உட்கார்ந்தான். ஜெயபாலன் உட்காராமல் "ஸஸேமிரா, ஸஸேமிரா" என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு முன் பாதி அறையை மறைத்த வண்ணம் திரைச் சீலை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மன்னனால் திரையின் பின் உள்ளவரைப் பார்க்க முடியவில்லை.

அங்கு மறைவாக சாரதா நந்தனர் உட்கார்ந்திருந்தார். ஜெயபாலனின் பெஸேமிரா புலம்பலைக் கேட்டதும் ஸ என்று தொடங்கும் ஒரு வடமொழிக் கவிதையைச் சொன்னார்.

ஸத்துவ குணமுடையவனை ஏமாற்றுவதில் அறிவு எதுவும் உண்டா? தூங்கும் ஒருவனைக் கொல்வதா வீரம்? - என்பதே அக் கவிதையின் பொருள்.

இதைக் கேட்டவுடன் இளவரசன் ஸ என்னும் எழுத்தை விடுத்து ஸேமிரா, ஸேமிரா என்று புலம்பத் தொடங்கினான்.

இராஜகுரு இப்போது ஸே என்னும் எழுத்தில் தொடங்கும் வடமொழிக் கவிதையைச் சொன்னார். அதன் பொருளையும் விளக்கலானார்.

"கங்கையில் அனைத்துப் பாவங்களும் போகும். ஆனால் நண்பனுக்குக் கெடுதல் செய்வதால் ஏற்பட்ட பாவம் போவதில்லை."

இரண்டாவது கவிதையின் பொருளைக் கேட்ட பின் இளவரசன், ஸே என்னும் எழுத்தையும் விடுத்து, மிரா, மிரா என்று புலம்பத் தொடங்கினான்.

Monday, November 18, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் – 9

நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 6

"அமைச்சரே! என் மகன் ஜெயபாலன் வேட்டைக்குக் கிளம்புகையில் துர்நிமித்தங்கள் தோன்றின. அதைப் பொருட்படுத்தாது வேட்டைக்குச் சென்றான். அவனுடன் சென்றவர்கள் அனைவரும் வந்துவிட்டாலும் ஜெயபாலனைக் காணவில்லை. அவனைத் தேட ஏற்பாடு செய்யுங்கள்." என்றான் நந்த மன்னன்.

பஹூசுருதனும் அவரது மகன் புத்திசாகரனும் மற்றவர்களும் காட்டில் இளவரசனைத் தேடினர். அங்கே ஜெயபாலன் "ஸஸேமிரா, ஸஸேமிரா " என்று கூறியவாறே பிரமை பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை அப்படியே அழைத்து வந்து மன்னன் முன் நிறுத்தினர்.

அவனது நிலையைக் கண்டு கவலைப்பட்ட மன்னன் நாடெங்கிலும் உள்ள வைத்தியர்களையும் நிபுணர்களையும் மந்திரவாதிகளையும் வரவழைத்து மகனுக்கு சிகிச்சை அளித்தான். யாராலும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை.

முதன் முறையாக மன்னன் தனது இராஜகுருவை எண்ணிக் கவலை கொண்டான்.

" என் சந்தேக புத்தியால் இராஜகுரு சாரதாநந்தனர் மறைந்துவிட்டார். அவர் மட்டும் இருந்தால் என் மகனைக் குணப்படுத்தியிருப்பார். தீர ஆராயாமல் செய்யும் செயல் யாவும் கெடுதலில் முடியும். நான் இப்போது என்ன செய்வேன்?"

" மன்னா, எல்லாம் விதிப்படி நடக்கிறது. அவரவர் விதிப்படியே எண்ணங்களும் நிலை தடுமாறுகின்றன. நடக்க வேண்டியவை நடந்தே தீரும். தூய பக்தியும் இறையருளும் மட்டுமே வினைப்பயனை மாற்றக் கூடியவை."

"சரி. என் மகனைக் குணப்படுத்த என்னாலான முயற்சியாக நான் என்ன செய்ய வேண்டும்? குணப்படுத்துபவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுப்பதாக அறிவிக்கட்டுமா?"

"வேண்டாம் அரசே. எனக்கு இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை என்ன செய்யலாம் என்று கூறுகிறேன்."

பஹூசுருதன் யோசனையுடன் வீடு திரும்பினார். யாருமறியாமல் மறைவறையில் இருந்த இராஜகுரு சாரதாநந்தனரைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினார்.

"நாளை அரசரிடம் சென்று நான் சொல்லும் செய்தியைச் சொல்லுங்கள்."

"சொல்லுங்கள் இராஜகுரு"

"என் வீட்டில் சாஸ்திரமும் கலைகளும் பயின்ற அழகிய பெண்ணொருத்தி இருக்கிறாள். அவளிடம் ஜெயபாலனைக் கொண்டு காண்பிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவளால் நிச்சயம் இளவரசனைக் குணப்படுத்த முடியும் என்று மன்னனிடம் சொல்லுங்கள்."
*விக்கிரமாதித்தன் கதைகள் - 8*

*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹூசுருதன் கதை - 5*

" அடைக்கலமானவனைக் கைவிடுதல் பாவமான செயல். அடைக்கலமானவருக்குக் கெடுதல் செய்பவன் நரகத்தில் துன்பப்படுவது நிச்சயம். எனவே இந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்." என்று கரடி பதில் சொன்னது.

நடுயிரவில் இளவரசன் ஜெயபாலன் உறக்கம் கலைந்து விழித்தான். கரடி அவனிடம், "நன்றாகத் தூங்கினாயா?" என்றது.
"ம்" என்றான் கீழே உள்ள புலியைப் பார்த்துக்கொண்டே.
"இப்போது நான் சிறிது நேரம் தூங்குகிறேன். நீ விழிப்புடன் இரு." என்றது.

கரடி நன்கு தூங்கியபின் புலி இளவரசனிடம் பேச்சுக் கொடுத்தது.
"மனிதனே! இந்தக் கரடியை நம்பாதே. வயிறு முட்ட அது உண்டு விட்டதால் அது உன்னை ஒன்றும் செய்யவில்லை. நாளை நீதான் அதற்கு உணவு. கரடியின் புத்தி தடுமாற்றம் உடையது. அதை நம்பி நீயும் நடந்து கொள்கிறாய். கரடியை என்னிடம் உருட்டித் தள்ளு. அதை அடித்துச் சாப்பிட்டு என் பசியை ஆற்றிக் கொள்கிறேன். சீக்கிரம் தள்ளி விடு."

“புலி சொல்வதில் உண்மை இருக்குமோ?”

சற்றும் யோசிக்காமல் கரடியைத் தள்ளி விட்டான் ஜெயபாலன்.

ஆனால், கரடி கீழே விழும்போதே விழித்துக் கொண்டது. குறுக்கிட்ட கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கியது. பின் லாகவமாக மறுபடி மேலேறி வந்தது.

"நன்றி கெட்ட மனிதனே! உன்னை நான் பாதுகாத்ததற்கு இதுதான் பலனா?"

பயந்து நடுங்கினான் ஜெயபாலன்.

"பயப்படாதே! நான் உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆனால் நீ செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கவேண்டும். உன் நினைவுகள் யாவும் அழிந்து "ஸஸேமிரா" என்ற சொல்லை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லியவாறு அலையப் போகிறாய்."

விடிந்துவிட்டது.
புலி அந்த இடத்தை விட்டு நழுவியது.
சாபமிட்ட கரடியும் அந்த இடத்தை விட்டு இறங்கிப் போய்விட்டது. பைத்தியமாகிவிட்ட இளவரசனோ, ‘ஸஸேமிரா, ஸஸேமிரா’ என்று சொல்லிக் கொண்டே அங்கேயே சுற்றத் தொடங்கினான்.

வேட்டைக்குச் சென்ற அனைவரும் திரும்பிய பின்பும் மகன் வராததை எண்ணிக் கவலை கொண்டான் நந்தமன்னன். அமைச்சர் பஹுசுருதனை அழைத்தான்.

Sunday, November 17, 2019

*விக்கிரமாதித்தன் கதைகள் - 8*

*நீதிவாக்கியர் போஜராஜனுக்குச் சொன்ன பஹூசுருதன் கதை - 5*

" அடைக்கலமானவனைக் கைவிடுதல் பாவமான செயல். அடைக்கலமானவருக்குக் கெடுதல் செய்பவன் நரகத்தில் துன்பப்படுவது நிச்சயம். எனவே இந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்." என்று கரடி பதில் சொன்னது.

நடுயிரவில் இளவரசன் ஜெயபாலன் உறக்கம் கலைந்து விழித்தான். கரடி அவனிடம், "நன்றாகத் தூங்கினாயா?" என்றது.
"ம்" என்றான் கீழே உள்ள புலியைப் பார்த்துக்கொண்டே.
"இப்போது நான் சிறிது நேரம் தூங்குகிறேன். நீ விழிப்புடன் இரு." என்றது.

கரடி நன்கு தூங்கியபின் புலி இளவரசனிடம் பேச்சுக் கொடுத்தது.
"மனிதனே! இந்தக் கரடியை நம்பாதே. வயிறு முட்ட அது உண்டு விட்டதால் அது உன்னை ஒன்றும் செய்யவில்லை. நாளை நீதான் அதற்கு உணவு. கரடியின் புத்தி தடுமாற்றம் உடையது. அதை நம்பி நீயும் நடந்து கொள்கிறாய். கரடியை என்னிடம் உருட்டித் தள்ளு. அதை அடித்துச் சாப்பிட்டு என் பசியை ஆற்றிக் கொள்கிறேன். சீக்கிரம் தள்ளி விடு."

“புலி சொல்வதில் உண்மை இருக்குமோ?”

சற்றும் யோசிக்காமல் கரடியைத் தள்ளி விட்டான் ஜெயபாலன்.

ஆனால், கரடி கீழே விழும்போதே விழித்துக் கொண்டது. குறுக்கிட்ட கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கியது. பின் லாகவமாக மறுபடி மேலேறி வந்தது.

"நன்றி கெட்ட மனிதனே! உன்னை நான் பாதுகாத்ததற்கு இதுதான் பலனா?"

பயந்து நடுங்கினான் ஜெயபாலன்.

"பயப்படாதே! நான் உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆனால் நீ செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கவேண்டும். உன் நினைவுகள் யாவும் அழிந்து "ஸஸேமிரா" என்ற சொல்லை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லியவாறு அலையப் போகிறாய்."

விடிந்துவிட்டது.
புலி அந்த இடத்தை விட்டு நழுவியது.
சாபமிட்ட கரடியும் அந்த இடத்தை விட்டு இறங்கிப் போய்விட்டது. பைத்தியமாகிவிட்ட இளவரசனோ, ‘ஸஸேமிரா, ஸஸேமிரா’ என்று சொல்லிக் கொண்டே அங்கேயே சுற்றத் தொடங்கினான்.

வேட்டைக்குச் சென்ற அனைவரும் திரும்பிய பின்பும் மகன் வராததை எண்ணிக் கவலை கொண்டான் நந்தமன்னன். அமைச்சர் பஹுசுருதனை அழைத்தான்.

Sunday, November 10, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் - 4* 11/11/2019 திங்கள்

*விக்கிரமாதித்தன் கதைகள் - 4*

உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்தால் உலகெங்கும் புகழ் பெறலாம்.. இவ்வாறு மகிழ்வுடன் சிந்தித்தான். பணியாள்கள் அதை அந்த இடத்திலிருந்து அரண்மனைக்கு எடுத்துச் செல்ல முயன்றார்கள். அசைக்க முடியவில்லை. போஜராஜன் தன் அமைச்சர் நீதி வாக்கியரிடம் ஆலோசனை செய்தான்.
"அரசே! இது புராண கால அரசர் பயன்படுத்திய சிம்மாசனம் போல் தோன்றுகிறது. வேதியர்களைக் கொண்டு முறைப்படி பூஜைகள் செய்து எடுக்க முயல்வோம்." என்றார்.

அமைச்சரின் யோசனை பலித்தது. சிம்மாசனத்தைத் தூக்க முடிந்தது. நீதி வாக்கியருக்கு நன்றி சொன்னான்.
"மாபெரும் அறிவாளியாக இருந்தாலும் பிறருடைய யோசனைகளைக் கேட்கவில்லையெனில் வீணில் அழிவான். தாங்கள் யோசனைகளைக் கேட்கும் சுபாவம் உடையவர். எனவே உங்களுக்குச் சாதமாகவே அனைத்தும் நிகழ்கின்றன." என்றான்.

போஜன், "வரும் துன்பங்களை ஆய்ந்து அரசனை நெறிப்படுத்துபவனே சிறந்த அமைச்சர்." என்றான்.

"அரசன் அறிவிற் சிறந்த பெரியோர்களை அருகில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கூறும் அறிவுரைகளின்படி நடக்க வேண்டும். நந்த மன்னன் தனது அமைச்சர் பஹூசுருதன் உதவியுடன் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டதை அறிவீரா மன்னா? "என்றார்.

போஜமன்னனும் கதை கேட்க ஆவலானான்.

*நீதிவாக்கியர் போஜ மன்னனுக்குச் சொன்ன பஹுசுருதன் கதை - 1*

விசாலை நகரின் அரசன் நந்தன்.  அவனது அழகான மனைவி பானுமதி. திறமையுள்ள மகன் ஜெயபாலன்.

வயதுக்கு வந்த மகன் இருந்தாலும், மனைவி பானுமதி மேல் அடங்காத மோகம் கொண்டவனாய் இருந்தான். , அமைச்சர் பஹுசுருதன் சொன்னாலும் உணரவில்லை. அரசவைக்கு வரும்போது கூட மனைவியுடன் வருவதும் அவளுடன் கொஞ்சி மகிழ்வதும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.
வளர்ந்த மகனை வைத்துக்கொண்டு அரசர் அடிக்கும் கூத்தைப் பார்க்கச் சகிக்காமல், அமைச்சர் பஹுசுருதன் ஒரு நாள் மன்னன் நந்தனுடன்  தனியாக இருந்தபோது பேசலானார்..
“மோகத்தில் உள்ளவனின் கண் மறைப்பினால் சுற்றிலும் நடப்பதை அறியாமல் இருக்கிறான். கலைகளில் சிறப்பானவர்களையும் மோகமானது வீழ்த்துகிறது. அவனது குடும்பமும் கெடுகிறது.
உங்களுடைய மோக சல்லாபத்தை அரசவை வரை அரங்கேற்றுவது நியாயமில்லை அரசே. அரசகுலப் பெண்கள் அந்தப்புரத்தில்தான் இருக்கவேண்டுமே  தவிர அரசவையில் அல்ல. உங்கள் நோக்கம் கெடுகிறது. எனவே அவளை விட்டுவிட்டு வாருங்கள்.” என்றார்.
“என்ன செய்வது அமைச்சரே! என் மனைவியைப் பார்க்காமல் என்னால் ஒரு கணம் கூட இருக்கமுடியவில்லையே என்ன செய்வேன்!” என்றான்.
“வேண்டுமானால் ஒன்று செய்யலாம். சிறந்த ஓவியன் ஒருவனை வரவழைத்து அரசியைச் சித்திரம் தீட்டச் செய்து அதனை உங்கள் பார்வையில் மட்டும்  படும்படி அரசவையில் வைத்துவிடலாம். பிரச்சினை தீரும்.” என்றார், பஹுசுருதன்.
நந்தனும் ஒப்புக்கொண்டான். அரண்மனையின் மிகச் சிறந்த ஓவியனை வரவழைத்தான்.
“மன்னா! அரசியை உங்கள் விருப்பம்போல் அலங்கரித்து ஒருமுறை மட்டும் பார்க்கும்படி எனக்கு அனுமதி அளியுங்கள். அவரை அப்படியே என்னால் வரைய முடியும்.” என்று ஓவியன் பெருமையடித்துக்கொண்டான்.
அரசனும் ஆச்சரியப்பட்டவாறு மனைவியை நன்கு அலங்கரித்து ஓவியனை ஒருமுறை மட்டும் பார்க்கச் செய்தான்.
ஓவியன் அரசி பானுமதியைக் கண்டதும் அவளது உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டான். பிறகு ஓரிடத்தில் தனது கருவிகளுடன் அவளைச் சித்திரமாகத் தீட்டத் தொடங்கினான்.
நேரம் கடந்தது. பானுமதி ஓவியமாக உருப்பெற்று உயிர்பெற்றாள். நந்த மன்னன் அந்த ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தான்.ஓவியனைப் பாராட்டி வேண்டிய பரிசுகளைத் தந்தான். அந்தச் சமயம் அவனது இராஜகுரு சாரதாநந்தனர் அங்கு வந்தார். அவரும் ஓவியன் வரைந்த ஓவியத்தைப் பார்த்தார்.
அவரிடம் அங்கு நின்றிருந்த ஓவியன், தான் அப்படியே அரசியை வரைந்திருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டான்.
ஆனால், இராஜகுரு சாரதாநந்தனரோ அதை மறுத்துச் சிரித்தார். ஓவியனும் அரசனும் மற்றவர்களும் அதனைக் கண்டு திகைப்புற்றனர்.
இராஜகுரு சொன்னார், “ ஓவியனே! நீ  சாமுத்திரிகா லட்சணப்படி நீ வரைந்திருந்தாலும், அரசியாரின் முக்கிய அடையாளம் ஒன்றைக் குறிப்பிடவில்லை!” என்றார்.
“குருவே! எதனை நான் மறந்துவிட்டேன் என்பதைத் தெரிவியுங்கள்” என்றான் ஓவியன்.
“அரசியாரின் இடத் தொடையில் எள் அளவு மச்சம் ஒன்று உள்ளது. அதனை உன் தத்ரூப ஓவியத்தில் வெளிப்படுத்தத் தவறினாய்”  என்று இராஜகுரு சாரதாநந்தனர் சொன்னார்.
மன்னன் துணுக்குற்றான். தனக்கு இத்தனை நாள்களாகத் தெரியாத விஷயத்தை இராஜகுரு சொல்கிறாரே! உண்மையாக இருக்குமோ! அது உண்மையாக இருந்தால் இவருக்கு எப்படித் தெரிந்தது?
சந்தேககம் கொண்டுத் தன் மனைவியைச் சோதித்தான். இடப் பக்கத் தொடையில் எள்ளளவு மச்சம் இருந்தது! மனைவியின் முகத்தைப் பார்த்தான். அவள் களங்கமற்றவளாகத்தான் தெரிந்தாள். அப்படியெனில் இராஜகுருதான் இராஜதுரோகி. அரண்மனையில் அனைத்து இடங்களிலும் செல்லும் உரிமை படைத்த அவர், மனைவி குளிக்கும்போது மறைந்திருந்து பார்த்திருக்கிறார். வயது மூப்பு அடைந்திருந்தாலும் அடங்காத காமத்தீ அவரது கண்ணை மறைத்தன போலும்!
நந்த மன்னனின் மனத்தில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது!
அமைச்சர் பஹுசுருதனை வரவழைத்தான்.
அவரிடம் நடந்தைக் கூறினான்.
“இராஜகுருவை நான் சந்திக்கக் கூட விரும்பவில்லை. அவருக்கு மரண தண்டனை கொடுத்துவிடுங்கள்!” என்றான்.

Thursday, November 7, 2019

விக்கிரமாதித்தன் கதைகள் – 1* 7/11/2019 வியாழன்

*விக்கிரமாதித்தன் கதைகள் – 1*


ஒரு காலத்தில் உஜ்ஜயினி நகரம் உலகப் பிரசித்தம். இந்தியாவின் சிறந்த நகரங்களுள் ஒன்று. ஆனால் இந்தியாதான் தனித் தனி நாடுகளாகப் பிரிந்து கிடந்ததே. ஐம்பத்தாறு தேசம் என்று சொல்வார்கள்.

சரி உஜ்ஜயினி நகரத்துக்கு வருவோம்.

இந்நகரம் இந்தியாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மால்வா பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். தமிழில் பெருங்கதை என்ற நூலில் உஞ்சை என்ற பெயருடன் இந்நகரம் அழைக்கப்படுகிறது. பிரச்சோதனன் என்ற அரசன் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாகப் பெருங்கதை கூறுகிறது.

இன்றைய நாளில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டமே அக்காலத்தில் உஜ்ஜயினி நகரமாக விளங்கியது. ஷிப்ரா நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.

மஹாபாரதத்தில் அவந்தி நாட்டின் தலைநகரமாக விளங்கிய நகரம் உஜ்ஜயினி.

இந்துக்களின் புனித நகரங்கள் ஏழனுள் இதுவும் ஒன்று.  முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று.
உஜ்ஜயினியில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது.

மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் சிவனுடைய பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று – இந்நகரத்தில் அமைந்துள்ளது.

இந்த உஜ்ஜயினி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு புராண காலத்தில் வாழ்ந்த விக்கிரமாதித்தனின் கதையைத்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

குப்தப் பேரரசின் சந்திரகுப்த விக்கிரமாதித்தனுக்கும் புராண கால விக்கிரமாதித்தனுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை!

இந்தக் கதையில் இன்னொரு பாத்திரத்தையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர் – போஜராஜன்!
அவரைப் பற்றிய கதை ஒன்று உண்டு. முஞ்சன் என்ற சிறிய தந்தையால் வளர்க்கப்பட்ட சிறுவன் போஜன். அச்சிறுவனை அழித்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று எண்ணினான். சில கொலையாளிகளிடம் அச்சிறுவனைக் காட்டில் கொண்டுபோய்க் கொல்லும்படி உத்தரவிட்டான்.
கொலையாளிகள் காட்டுக்குப் போய்ச் சிறுவனுடன் காட்டுக்குப் போனார்கள். அவனைக் கொல்வதற்குக் கத்தியைத் தீட்டினர்.

“உனக்கு அச்சமாக இல்லையா?”

“எதற்கு அச்சப்படவேண்டும்? யாரும் இங்கு நிரந்தரமில்லை. ஸ்ரீராமனும், கிருஷ்ணனும் கூட இங்கிருந்து போகும்போது அவர்கள் ஆண்ட பகுதிகளைக் கொண்டுபோகவில்லை.

சிற்றப்பாவையாவது பூமியிலிருந்து போகும்போது அவர் ஆண்ட பகுதியைக் கையோடு எடுத்துச் செல்லும்படி சொல்லுங்கள்!” என்று பதில் சொன்னான் போஜன்.

அச்சிறுவன்மீது இரக்கப்பட்டுக் கொல்லாமல் விட்ட கொலையாளிகள், முஞ்சனிடம் சென்று கொன்றுவிட்டதாகப் பொய் சொன்னார்கள்.

“சாகும்போது அந்தப் பையன் ஏதாவது சொன்னானா?”

உடனே அந்தக் கொலையாளிகள் அவன் சொன்னதைச் சொன்னார்கள்.

முஞ்சன் கலங்கிவிட்டான்.

“சிறுவனுக்கு என்ன ஒரு ஞானம்! ஐயோ! அவனைக் கொலை செய்யச் சொல்லிவிட்டேனே! அவன் உயிரோடு இருக்கக் கூடாதா!” என்று புலம்பினான்.

கொலையாளிகளுக்குத்தான் இரக்க சுபாவமாயிற்றே! சிறுவன் உயிரோடு இருப்பதைச் சொல்லிவிட்டார்கள்!

சிறுவனை முஞ்சன் காட்டிலிருந்து அழைத்துவரச் செய்தான். அவனைச் சிறப்பாக வளர்த்தான். நாட்டை அவனிடம் ஒப்படைத்து நற்கதி அடைந்தான். அவனுடைய அவையில்தான் காளிதாசன் என்ற மகாகவிஞன் இருந்து இந்தியாவின் சிறந்த காவியங்களைப் படைத்தான்.
இந்த போஜராஜனுக்கும் புராண கால விக்கிரமாதித்தனுக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை!

ஆனால், விக்கிரமாதித்தன் என்ற மன்னனின் கதையில் போஜராஜன் பற்றிய குறிப்பு வருகிறது!
விக்கிரமாதித்தன் கதையும் போஜராஜனிடம்தான் தொடங்குகிறது….

இந்தியாவின் புகழ்பெற்ற அந்த விக்கிரமாதித்தன் கதை…

Friday, November 1, 2019

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம் 2/11/2019 சனி

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்

கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம்.

• வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

• பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

• ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

• திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீங்க மந்திரம் உள்ளது.

ஓம் அனுக்ரகரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ ப்ரசோதயாத்!

• தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம்ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

• காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உறுதியாக தெரிய வந்தால், அதை தீர்க்க எளிய வழி உள்ளது. உங்கள் வீட்டுத் தலைவாசல் நிலையின் நீளம், அகலத்தை அளந்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை நிலையில் மாட்டுங்கள் அதே போல மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருக்க, நீள அளவுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.

நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையும், மகாலட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அறுகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள் விட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.

வீட்டின் வெளிப்புறத்திலும் தெளியுங்கள். பிறகு, அறுகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் ஒரு வெள்ளைத்துணியில் முடித்து ஆற்றில் போட்டு விடுங்கள். வாஸ்து தோஷம் விலகிவிடும். வாஸ்து தோஷத்துக்கு செவலூர் ஆலயத்தில் ஒரே ஒரு கல் வாங்கி மனை போட்டால் போதும் என்கிறார்கள்.

வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு சொம்பில் நீர் ஊற்றி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும். ஜாதகத்தில் குரு 3,6,8,12-ல் மறைந்திருந்தால் வளர்பிறை அல்லது தேய்பிறை பஞ்சமி திதியில் நவகிரகக் குருவுக்கு பால், பன்னீர், அபிஷேகம் செய்து, கஸ்தூரி பொட்டிட்டு மஞ்சள் பட்டுத்துணி சாற்றி, தாமரை பூ மாலை போட்டு, நெய், தீபம் அர்ச்சனை செய்ய வாஸ்து தோஷத்தால் தடைபட்ட தொழில், திருமணம் நடக்கும்.

வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க நலமுண்டாகும்.