Saturday, January 11, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் - 30

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை -3*

விக்கிரமாதித்தனைப் பார்த்தவுடன் அந்தக் கபட சன்னியாசி, வரவேற்று அமரச் செய்தான். அமர்ந்தவுடன் விக்கிரமாதித்தன் சுற்றிலும் பார்த்தான். இருட்டில் பூத பைசாச நடமாட்டங்களை அவனால் உணர முடிந்தது. கோரமான உருவங்கள் தென்பட்டன. முனிவருக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு! இருந்தாலும் முனிவரைக் கேட்டான், "முனிவரே, தாங்கள் இடும் கட்டளை யாது? செய்து முடிக்கக் காத்திருக்கிறேன்."

ஞானசீல கபட முனிவனுக்கு விக்கிரமாதித் தனால் ஆகக்கூடிய காரியம் ஒன்றிருக்கிறதே! யாராலும் வீழ்த்த முடியாத வேதாளத்தை வீழ்த்தித் தனக்கு அடிமையாகச் செய்வது. அது விக்கிரமாதித்தனால் மட்டுமே முடியும்!

"ஆமாம், விக்கிரமா! இந்த பூஜை தாந்திரீக சாஸ்திரங்களை உள்ளடக்கியது. அதோ அந்த வழியாகத் தெற்கு நோக்கிச் செல்! இரு யோஜனை தொலைவில் மயானம் ஒன்று தென்படும். உள் நுழைந்தால் முருங்கை மரம் ஒன்று காணப்படும். அதன் உச்சி மரக்கிளையில் பிணம் ஒன்று தலைகீழாயத் தொங்கிக் கொண்டிருக்கும். அதனை இங்குக் கொண்டு வா. "

இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நினைத்தான் விக்கிரமாதித்தன். எந்த முனிவரும் பிணத்தை வைத்து யாகம் செய்வதில்லை. இவன் வேடத்துக்கும் இறைவழிபாட்டு முறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்ன என்று பிறகு கண்டுபிடிப்போம்! முதலில் பிணத்தை எடுத்து வருவோம்! நான் வணங்கும் உஜ்ஜயினி மாகாளி துணையிருப்பாள்…

"அப்படியே ஆகட்டும்."

விக்கிரமாதித்தன் தெற்கு நோக்கிப் புறப்பட்டான்.

எதிரில் எவர் வருவதும் தெரியாத காரிருள். கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்களின் நடமாட்டம்! காளியின் அருளால் அச்சமின்றிச் சென்றான் விக்கிரமாதித்தன். முனிவன் சொன்ன மயானத்தை அடைந்தான்.

ஆங்காங்கே பிணங்கள் எரிவதும் இரவுப் பூச்சிகளின் மயிர்க்கூச்செரியும் சத்தங்களும் அங்கே நிகழ்ந்தன! கபாலங்கள் காற்றில் மிதந்து வந்தன! அவற்றின் பெரிய பற்கள் அசைவதும் சிரிப்பொலி எழுப்புவதுமாக அவனை அச்சப்படுத்த முயன்றன. காற்றில் பிணவாடையும் சுடுகாட்டுச் சாம்பலும் மிதந்து வந்தன. குறளிப் பேய்களும், பைசாசங்களும் ஓலமிட்டன. பிணங்களைத் தின்னும் பூதங்கள் புதைத்த பிணங்களைத் தோண்டி எடுத்துக் கடித்துக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் கண்ணுற்ற விக்கிரமாதித்தன், கொஞ்சமும் மனங்கலங்காமல், முருங்கை மரத்தைத் தேடினான். மரம் தென்பட்டது. காற்றில் அசைந்த காட்சி அவனை அச்சப்படுத்திப் பார்த்தது. அருகில் சென்று அண்ணாந்து பார்த்தான். ஒவ்வொரு கிளையும் அசைந்துகொண்டிருப்பது மனத்தில் திகில் மூட்டுவதாக இருந்தது. அந்த உச்சிக் கிளையில் பிணம் ஒன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

ஆஹா! முனிவன் கேட்ட பிணம் இதுதானா! மரத்தில் வேகமாக ஏறினான். பிணத்தை நெருங்கினான், அது கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துக் கீழே வீசினான். அவனும் கீழே இறங்கினான். இறங்கிப் பார்த்தால் பிணத்தைக் காணவில்லை! பிணம் மறுபடி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது!

மறுபடி மேலேறி அந்தப் பிணத்தைத் தன் முதுகுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டான். கீழே இறங்கினான். பிணத்தைத் தோளில் சுமந்துகொண்டே முனிவனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அந்தப் பிணத்தினுள் புகுந்திருந்த வேதாளம், விக்கிரமாதித்தனை வினவியது.

“யார் நீ? என்னை எதற்காகச் சுமந்து செல்கிறாய்?”

விக்கிரமாதித்தன் பேசும் பிணத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

“உஜ்ஜயினியை ஆளும் விக்கிரமாதித்தன் நான். முனிவனின் உத்தரவின் பேரில் உன்னைத் தூக்கிக் கொண்டுபோக வந்திருக்கிறேன்.”



                                            இன்னும்  வரும் ......

No comments:

Post a Comment