Wednesday, January 1, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் - 28

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை - 1*

பராக்கிரமசாலியான விக்கிரமாதித்தன், தனது நாடாறு மாத ஆட்சியைச் சிறப்புடன் நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்த வண்ணம் இருந்தான்.

உஜ்ஜயினி நகரத்துக்கு வெளியே சில காத தூரத்தில் மயானம் ஒன்று இருந்தது. அந்த மயானத்திலிருந்த முருங்க மரத்தில் வேதாளம் ஒன்று தொங்கியவாறு இருந்தது. அந்த வேதாளத்தை வசப்படுத்தியவர்களுக்கு அது வேண்டியன செய்யும். ஆனால் அதை வசப்படுத்த முயன்றோர் உயிருடன் இருப்பதில்லை!

மயானத்தை ஒட்டிய கானகத்தில் இருந்த வனதுர்க்கையம்மன் கோவிலில் மந்திரவாதி ஒருவன் யாகம் வளர்த்துக்கொண்டிருந்தான். ஞானசீலன் என்ற பெயருடைய அந்த மந்திரவாதி, துர்க்கையம்மனையும் வேதாளத்தையும் தன் வயமாக்க விரும்பினான். அதன் முதல்படியாகத் துர்க்கைக்கு யாகம் வளர்க்கத் தொடங்கினான். யாகத்தின் முடிவில் பிரசன்னமான துர்க்கையிடம் ஞானசீலன், இவ்வுலகையே ஆள வேண்டும் என்றும் வேதாளத்தை வசப்படுத்த வேண்டும் என்றும் விக்கிரமாதித்தனின் சிம்மாசனத்தில் அமர்ந்து உலகை ஆள வேண்டும் என்றும் அதற்கு வழி கூறுமாறும் கேட்டான்.

"ஞான சீலா! ஆயிரம் மன்னர்களைக் கொன்று பலியிட்டு யாகம் செய். 999 அரசர்களின் தலையை வெட்டி எனது பலிபீடத்தில் வை. ஆயிரமாவது பலியாக எனக்கு அளிக்க விக்கிரமாதித்தனின் தலையைக் கொடு. அதற்கு முன் அவனைக் கொண்டே வேதாளத்தை உனக்கு வசமாக்கு."

ஞானசீலன் தான் நடத்தும் யாகத்துக்கு அரசர்களை வேட்டையாடத் தொடங்கினான். தந்திரம் செய்தும் மந்திரம் செய்தும் மன்னர்களை வரவழைத்து வனதுர்க்கைப் பலியிட்டான். 1, 2, 3, .... 999 தலைகள் உருண்டன! இனி ஒன்றே ஒன்றுதான்!

விக்கிரமாதித்தன்!

விக்கிரமாதித்தனை எப்படி மடக்கலாம்! யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ஞானசீலன் தவம் செய்யும் முனிவர் வேடம் தரித்தான். அந்த வேடதாரி மந்திரவாதி விக்கிரமாதித்தனின் அரண்மனைக்கு வந்தான். விக்கிரமாதித்தன் அவனை வணங்க, ஆசி வழங்குவது போல மாதுளங்கனி ஒன்றைக் கொடுத்தான். பணிவுடன் விக்கிரமாதித்தன் பெற்றுக்கொண்டான். முனிவன் சென்றுவிட்டான். மன்னன் அந்தக் கனியை பக்கத்திலிருந்த அதிகாரியிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னான்.

மறுநாளும் வேடதாரி முனிவன் வந்தான். கனி கொடுத்துவிட்டுச் சென்றான். விக்கிரமாதித்தன் வணங்கி அந்தக் கனியைப் பெற்று அதிகாரியிடம் கொடுத்தான். தினமும் மந்திரவாதி ஞானசீலன்,  முனிவன் வேடத்தில் வந்து கனி கொடுத்துவிட்டுச் சென்றான்.

ஒரு நாள் அந்த அதிகாரியுடன் விக்கிரமாதித்தன் பேசிக்கொண்டிருந்தபோது அரண்மனை நந்தவனத்தில் வளரும் குரங்கு அந்தப் பக்கமாக வந்தது. முனிவன் கொடுத்த மாதுளங்கனிகள் உணவு மேசையின் மேல் தட்டு ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒன்றை அந்தக் குரங்கு எடுத்துக் கடித்தது. அதிலிருந்து ஜொலிக்கும் நவரத்தினக் கற்கள் விழுந்தன.

விக்கிரமாதித்தன் பிரமித்தான்!

No comments:

Post a Comment