Tuesday, May 12, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 45*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*
*நான்காவது கதை*

*வீரன் ஞானி விஞ்ஞானி கதை - 1*

விக்கிரமாதித்தன் தன் முயற்சியில் சற்றும் தளராமல், முருங்கை மரத்தில் ஏறி, வேதாளத்தை வீழ்த்தி, அதைத் தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான்.

"ஈடு இணையற்ற வீரனே! விக்கிரமாதித்தா! எனது அடுத்த புதிர்க் கதையைக் கேள்."

வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.

முன்பொரு காலத்தில் உஜ்ஜயினி நகரத்தைப் புண்ணிய சேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய அரண்மனைப் புரோகிதராக ஹரிஸ்வாமி என்ற அந்தணன் இருந்தான். அவனது மனைவியும் மகன் தேவஸ்வாமியும் மகள் சோமப்பிரபையும் அவனுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர்.

ஹரி ஸ்வாமியின் மகள் சோமப்பிரபை அழகிலும் அறிவிலும் சிறந்தவளாக விளங்கினாள். தன் குடும்பத்தாரிடம், “எனக்கு நீங்கள் பார்க்கும் வரன் வீரம், ஞானம், விஞ்ஞானம் என்னும் மூன்று துறைகளுள் ஒன்றில் நிபுணனாக இருக்க வேண்டும். வேறு யாரையும் என்னால் திருமணம் செய்ய இயலாது." என்று சொன்னாள்.

இல்லத்தின் செல்லப் பெண்ணான சோமப்பிரபையின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தார் நிச்சயித்தனர். 

மன்னன் புண்ணிய சேனன் ஒருமுறை தெற்கிலிருந்த அரசன்  ஒருவனிடம் ஹரி ஸ்வாமியைத் தூதாக அனுப்பினான். அந்த தென்தேசத்து மன்னன் உஜ்ஜயினியின் மேல் படையெடுக்கக் கருதியவன். அவனிடம் ஹரிஸ்வாமி சென்று தன் வாக்கு சாதுரியத்தால் போர் நிகழ்வைத் தவிர்த்தான்.

அந்த நகரத்தில் அந்தணர் வாழும் பகுதியில் சூஸ்திரவான் என்ற அந்தண இளைஞன், ஹரிஸ்வாமியின் கவனத்தைக் கவர்ந்தான்.

அவனை அழைத்து குலம், கோத்திரம் முதலானவற்றை விசாரித்துத் திருப்தி அடைந்தான்.

"சூஸ்திரவான், எனக்கு சோமப்பிரபை என்ற மகள் இருக்கிறாள். கல்வியிலும் அழகிலும் சிறந்தவள். அவளுக்கு நல்ல வரன் தேடிக் கொண்டிருக்கிறேன். ஞானம், விஞ்ஞானம், வீரம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் சிறந்தவனையே மணக்க விரும்புகிறாள். உன்னை எனக்கும் பிடித்திருக்கிறது. உன்னுடைய திறமை என்னவென்று கூறு." என்றான் ஹரி ஸ்வாமி.

" எனக்கு அறிவியற்  கலையில் நல்ல பயிற்சி உண்டு.”

"அப்படியா! உன் திறமையை நிரூபி."

பறக்கும் இயந்திரம் ஒன்றைச் செய்தான் சூஸ்திரவான். அதில் ஹரி ஸ்வாமியை அமர்த்தி நகரத்தின் மேலே பறந்து காண்பித்தான். ஹரிஸ்வாமி மகிழ்ச்சியுடன், “நீயே எனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும். இப்போதே என் மகளுடன் உன் கல்யாணத்துக்கு நேரம் குறித்து விடுகிறேன். ஒரு வாரம் கழித்துக் கல்யாணம். உன் வீட்டிலிருந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு வருவாய்." என்று சொன்னான்.

.                             ............. இன்னும் வரும்

No comments:

Post a Comment