Saturday, May 2, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் -41*. 05/05/2020 ஞாயிறு

*விக்கிரமாதித்தன் கதைகள் -41*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*இரண்டாவது கதை*

 *மந்தாரவதி கதை -2*

அதிர்ச்சியாக இருந்தது துறவிக்கு. என்ன ஒரு கொடூரம்! குழந்தையைக் கொன்றவள் வீட்டிலா எனக்கு உணவு ! மஹா பாவம்! எனக்கு இந்த வீட்டில் உணவு வேண்டா.

துறவி எழுந்தான், கிளம்பினான். அப்போது அந்தப் பெண்ணின் கணவன் வெளியில் வந்தான்.

"துறவியே, ஒரு நிமிஷம் பொறுங்கள். நீங்கள் எதனால்   கிளம்பிச் செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்." என்றவாறே துறவியை உள்ளே அழைத்துக் கொண்டு போனான். துறவியை அமர வைத்து எதிரிலிருந்த மேடையிலிருந்து ஒரு பழைய புத்தகத்தை எடுத்துவைத்தான். வெளியில் சென்று ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்தான். எடுத்து வைத்த புத்தகத்தைத் திறந்து குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள மந்திரத்தைச் சொன்னான். பிறகு அந்த மண்ணை எடுத்துக் குழந்தையின் சாம்பலின் மீது வீசினான். அதனுள்ளிருந்து குழந்தை உயிருடன் வந்தது. துறவி அச்சர்யப்பட்டான்! இது மந்திரப் புத்தகமா !

வாய் விட்டுக் கேட்டான்.

"ஐயா, இது எப்படி சாத்தியம்?"

" இது மந்திரப் புத்தகம்! ஒரு பிடி மண்ணை எடுத்து இந்தப் பக்கத்தில் உள்ள மந்திரத்தை உச்சரித்துச் சாம்பலின் மீது  வீசினால் இறந்து சாம்பலானவர் மீள்வர். " என்றான் அந்தப் பெண்ணின் கணவன்.

‘ஆ! எப்படியாவது நான் அந்தப் புத்தகத்தை எடுத்துக கொண்டு போக வேண்டும். இதை வைத்து மந்தாரவதியைப் பிழைக்கச் செய்ய வேண்டும்.’

ஒரு முடிவுக்கு வந்தவன் அன்றிரவு அங்கேயே தங்கினான். இரவில் அனைவரும் உறங்கிய பின் அந்தப் புத்தகத்தை களவாடிக் கொண்டு வந்தான். இரவு பகலாக நடந்து பிரம்மஸ்தலம் வந்து சேர்ந்தான்.

வேகமாக ஊரின் மயானத்துக்கு வந்தான். அதே நேரம் மந்தாரவதியின் அஸ்தியைக் கரைக்கச் சென்றவனும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரும் மந்தாரவதியை எரித்த இடத்தில் சாம்பல் மேட்டினில் குடிசையைப் போட்டுப் படுத்திருந்தவனைக் குடிசையில் நுழைந்து எழுப்பினான்.

"நண்பர்களே. என் மந்திர வலிமையால் மந்தாரவதியை உயிர்ப்பிக்கப் போகிறேன்." என்று சொன்னான் துறவியாக இருந்தவன். மந்தாரவதியின் சாம்பலின் மேல் மந்திரத்தை உச்சரித்து மண்ணை வீசினான். அதிரூபவதியாக மந்தாரவதி உயிர் பெற்று எழுந்தாள். அவளைப் பார்த்ததும் மறுபடி அவளை யார் திருமணம் செய்து கொள்வது என்று தகராறு ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் தான்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்யத் தகுதியானவன் என்று வாக்குவாதம் செய்தனர். 

விக்கிரமாதித்தனே, மூவரும் அடித்துக்கொள்கிறார்களே, உண்மையில் மந்தாரவதி யாரை மணந்து கொள்ள வேண்டும்? விடை தெரிந்தும் நீ அமைதி காத்தால் உன் தலை வெடித்துச் சிதறிவிடும்…

வேதாளம் கதையை நிறுத்தியது.

......... இன்னும் வரும்

No comments:

Post a Comment