Sunday, May 17, 2020

படித்ததில் ரசித்தது 🙏


ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.

தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.

 ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யோசித்தார். ஒரு யோசனை வந்தது.

 சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.

 கெடுத்தது எது? *தான்* என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான், தான், தனது, நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
மீண்டும் ஒரு நல்ல கருத்துடன் சந்திப்போம்.

Tuesday, May 12, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 45*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*
*நான்காவது கதை*

*வீரன் ஞானி விஞ்ஞானி கதை - 1*

விக்கிரமாதித்தன் தன் முயற்சியில் சற்றும் தளராமல், முருங்கை மரத்தில் ஏறி, வேதாளத்தை வீழ்த்தி, அதைத் தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான்.

"ஈடு இணையற்ற வீரனே! விக்கிரமாதித்தா! எனது அடுத்த புதிர்க் கதையைக் கேள்."

வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.

முன்பொரு காலத்தில் உஜ்ஜயினி நகரத்தைப் புண்ணிய சேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய அரண்மனைப் புரோகிதராக ஹரிஸ்வாமி என்ற அந்தணன் இருந்தான். அவனது மனைவியும் மகன் தேவஸ்வாமியும் மகள் சோமப்பிரபையும் அவனுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர்.

ஹரி ஸ்வாமியின் மகள் சோமப்பிரபை அழகிலும் அறிவிலும் சிறந்தவளாக விளங்கினாள். தன் குடும்பத்தாரிடம், “எனக்கு நீங்கள் பார்க்கும் வரன் வீரம், ஞானம், விஞ்ஞானம் என்னும் மூன்று துறைகளுள் ஒன்றில் நிபுணனாக இருக்க வேண்டும். வேறு யாரையும் என்னால் திருமணம் செய்ய இயலாது." என்று சொன்னாள்.

இல்லத்தின் செல்லப் பெண்ணான சோமப்பிரபையின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தார் நிச்சயித்தனர். 

மன்னன் புண்ணிய சேனன் ஒருமுறை தெற்கிலிருந்த அரசன்  ஒருவனிடம் ஹரி ஸ்வாமியைத் தூதாக அனுப்பினான். அந்த தென்தேசத்து மன்னன் உஜ்ஜயினியின் மேல் படையெடுக்கக் கருதியவன். அவனிடம் ஹரிஸ்வாமி சென்று தன் வாக்கு சாதுரியத்தால் போர் நிகழ்வைத் தவிர்த்தான்.

அந்த நகரத்தில் அந்தணர் வாழும் பகுதியில் சூஸ்திரவான் என்ற அந்தண இளைஞன், ஹரிஸ்வாமியின் கவனத்தைக் கவர்ந்தான்.

அவனை அழைத்து குலம், கோத்திரம் முதலானவற்றை விசாரித்துத் திருப்தி அடைந்தான்.

"சூஸ்திரவான், எனக்கு சோமப்பிரபை என்ற மகள் இருக்கிறாள். கல்வியிலும் அழகிலும் சிறந்தவள். அவளுக்கு நல்ல வரன் தேடிக் கொண்டிருக்கிறேன். ஞானம், விஞ்ஞானம், வீரம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் சிறந்தவனையே மணக்க விரும்புகிறாள். உன்னை எனக்கும் பிடித்திருக்கிறது. உன்னுடைய திறமை என்னவென்று கூறு." என்றான் ஹரி ஸ்வாமி.

" எனக்கு அறிவியற்  கலையில் நல்ல பயிற்சி உண்டு.”

"அப்படியா! உன் திறமையை நிரூபி."

பறக்கும் இயந்திரம் ஒன்றைச் செய்தான் சூஸ்திரவான். அதில் ஹரி ஸ்வாமியை அமர்த்தி நகரத்தின் மேலே பறந்து காண்பித்தான். ஹரிஸ்வாமி மகிழ்ச்சியுடன், “நீயே எனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும். இப்போதே என் மகளுடன் உன் கல்யாணத்துக்கு நேரம் குறித்து விடுகிறேன். ஒரு வாரம் கழித்துக் கல்யாணம். உன் வீட்டிலிருந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு வருவாய்." என்று சொன்னான்.

.                             ............. இன்னும் வரும்

Sunday, May 10, 2020

தெரிந்து கொள்வோம்....
தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!

அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்

தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!

தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!

5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)

6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்
ஆறு பருவங்களையும்
(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!

12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்

இந்த 1, 5, 6, 12 க்குறிய  மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்

அதேபோல் 2ம் எண்
இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)

3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்

4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்

எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்!

Saturday, May 2, 2020

விக்கிரமாதித்தன் கதைகள் -41*. 05/05/2020 ஞாயிறு

*விக்கிரமாதித்தன் கதைகள் -41*

*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*இரண்டாவது கதை*

 *மந்தாரவதி கதை -2*

அதிர்ச்சியாக இருந்தது துறவிக்கு. என்ன ஒரு கொடூரம்! குழந்தையைக் கொன்றவள் வீட்டிலா எனக்கு உணவு ! மஹா பாவம்! எனக்கு இந்த வீட்டில் உணவு வேண்டா.

துறவி எழுந்தான், கிளம்பினான். அப்போது அந்தப் பெண்ணின் கணவன் வெளியில் வந்தான்.

"துறவியே, ஒரு நிமிஷம் பொறுங்கள். நீங்கள் எதனால்   கிளம்பிச் செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்." என்றவாறே துறவியை உள்ளே அழைத்துக் கொண்டு போனான். துறவியை அமர வைத்து எதிரிலிருந்த மேடையிலிருந்து ஒரு பழைய புத்தகத்தை எடுத்துவைத்தான். வெளியில் சென்று ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்தான். எடுத்து வைத்த புத்தகத்தைத் திறந்து குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள மந்திரத்தைச் சொன்னான். பிறகு அந்த மண்ணை எடுத்துக் குழந்தையின் சாம்பலின் மீது வீசினான். அதனுள்ளிருந்து குழந்தை உயிருடன் வந்தது. துறவி அச்சர்யப்பட்டான்! இது மந்திரப் புத்தகமா !

வாய் விட்டுக் கேட்டான்.

"ஐயா, இது எப்படி சாத்தியம்?"

" இது மந்திரப் புத்தகம்! ஒரு பிடி மண்ணை எடுத்து இந்தப் பக்கத்தில் உள்ள மந்திரத்தை உச்சரித்துச் சாம்பலின் மீது  வீசினால் இறந்து சாம்பலானவர் மீள்வர். " என்றான் அந்தப் பெண்ணின் கணவன்.

‘ஆ! எப்படியாவது நான் அந்தப் புத்தகத்தை எடுத்துக கொண்டு போக வேண்டும். இதை வைத்து மந்தாரவதியைப் பிழைக்கச் செய்ய வேண்டும்.’

ஒரு முடிவுக்கு வந்தவன் அன்றிரவு அங்கேயே தங்கினான். இரவில் அனைவரும் உறங்கிய பின் அந்தப் புத்தகத்தை களவாடிக் கொண்டு வந்தான். இரவு பகலாக நடந்து பிரம்மஸ்தலம் வந்து சேர்ந்தான்.

வேகமாக ஊரின் மயானத்துக்கு வந்தான். அதே நேரம் மந்தாரவதியின் அஸ்தியைக் கரைக்கச் சென்றவனும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரும் மந்தாரவதியை எரித்த இடத்தில் சாம்பல் மேட்டினில் குடிசையைப் போட்டுப் படுத்திருந்தவனைக் குடிசையில் நுழைந்து எழுப்பினான்.

"நண்பர்களே. என் மந்திர வலிமையால் மந்தாரவதியை உயிர்ப்பிக்கப் போகிறேன்." என்று சொன்னான் துறவியாக இருந்தவன். மந்தாரவதியின் சாம்பலின் மேல் மந்திரத்தை உச்சரித்து மண்ணை வீசினான். அதிரூபவதியாக மந்தாரவதி உயிர் பெற்று எழுந்தாள். அவளைப் பார்த்ததும் மறுபடி அவளை யார் திருமணம் செய்து கொள்வது என்று தகராறு ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் தான்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்யத் தகுதியானவன் என்று வாக்குவாதம் செய்தனர். 

விக்கிரமாதித்தனே, மூவரும் அடித்துக்கொள்கிறார்களே, உண்மையில் மந்தாரவதி யாரை மணந்து கொள்ள வேண்டும்? விடை தெரிந்தும் நீ அமைதி காத்தால் உன் தலை வெடித்துச் சிதறிவிடும்…

வேதாளம் கதையை நிறுத்தியது.

......... இன்னும் வரும்

விக்கிரமாதித்தன் கதைகள் -40*. 02/05/2020 சனிக்கிழமை

*விக்கிரமாதித்தன் கதைகள் -40*


*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*இரண்டாவது கதை*

 *மந்தாரவதி கதை - 1*

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளத்தை வீழ்த்தி, அதைத் தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் பேசத் தொடங்கியது.

"பராக்கிரமசாலியான விக்கிரமாதித்த இந்த இருண்ட பொழுதில் உனது நடைப் பயணம் களைப்பாகாமல் இருக்க கதை சொல்லுகிறேன். கேள்.”

அக்னிஸ்வாமி என்ற அந்தணன் பிரம்மஸ்தலம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். யமுனை ஆற்றங்கரையில் உள்ள அழகான ஊர் அது. வேதம் படித்தவன், ஊரில் நல்ல பெயர் எடுத்தவனாகையால் வாழ்க்கை சுகமாகப் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த அழகுடைய மந்தாரவதி என்ற மகள் இருந்தாள். பல பேர் அவளை மணக்க முன் வந்தும் அக்னிஸ்வாமி அவர்களுள் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்தான். அந்த மூன்று பிராமண இளைஞர்களும் வேத விற்பன்னர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தனர். மூவரில் யாரை மருமகனாகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியவில்லை. மூவருமே தனித்தனியே மந்தாரவதியைப் பார்த்தார்கள். மூவருமே தனக்குத்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். அக்னிஸ்வாமியாலும் ஒரு முடிவுக்கு வரவியலவில்லை. இப்படியே நாள்கள் சென்றன.

திடீரென்று மந்தாரவதிக்குக் காய்ச்சல் நோய் வந்தது. எவ்வளவோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் அவளது காய்ச்சல் குறையவில்லை. அக்னி ஸ்வாமியுடன் அந்த மூன்று இளைஞர்களும் அவள் குணமாவதற்காகக் காத்துக்கிடந்தனர். ஆனால் நாளாக நாளாக மந்தாரவதியின் காய்ச்சல்  குறையவில்லை. கண் திறக்காமலே உலகை விட்டு மறைந்தாள். அக்னிஸ்வாமியுடன் மூன்று இளைஞர்களும் அழுது தீர்த்தனர்.

மந்தாரவதியின் உடலை மயானத்தில் வைத்து எரித்தனர். முதல் இளைஞன் அங்கேயே அவளை எரித்த இடத்திலேயே குடிசை போட்டுத் தங்கினான். அவளது சாம்பலையே தனது படுக்கையாகக் கொண்டான். இரண்டாவது இளைஞன் அவளது அஸ்தியைக் கலசத்தில் எழுத்துக்கொண்டு கங்கையில் கரைத்து விடச் சென்றான். மூன்றாவது இளைஞன் காலியுடையணிந்து சன்னியாசி ஆனான். ஊர் ஊராகச் சென்று கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தான்.

அந்த சன்னியாசி இளைஞன் வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவரும்போது வஜ்ர லோகம் என்ற சிற்றுரை அடைந்தான். அந்த ஊரிலுள்ள அக்ரஹாரத்தில் ஒரு வீட்டின் முன் நின்று  “பவதி பிட்சாந் தேஹி” என்று யாசகம் கேட்டான். அந்த வீட்டிலிருந்து வந்த பிராமணப் பெண் உணவு சமைத்துக் கொண்டிருப்பதாகவும், சற்று நேரம் பொறுத்தால் வேண்டிய மட்டும் உண்டுவிட்டுச் செல்லலாம் என்றும் கூறினாள். இவனும் சரியென்று அந்த வீட்டின் திண்ணையிலேயே தங்கினான்.

வீட்டின் உள்ளேயிருந்து சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது. எட்டி உள்ளே பார்த்தான். அந்தப் பெண் சமைத்துக்கொண்டிருந்தாள். அருகில் அவளுடைய குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்தது. அவள் குழந்தையைச் சமாதானப்படுத்தினாள். ஆனாலும் அது பிரவாதமாக அழுதவாறு இருந்தது. மறுபடி சமாதானப்படுத்த முயன்றாள். அக்குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. கோபம் தலைக்கேறிய அந்தப் பெண் குழந்தையைத் தூக்கு எரியும் அடுப்பினுள் செருகி விட்டாள்! குழந்தை எரிந்து சாம்பலானது!

*ஹரிகுமார்*

திருசெந்தூர் முருகன் கோயில் 02/05/2020 சனிக்கிழமை

திருசெந்தூர் முருகன் கோயில்...
3000 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று, இன்னும் அப்படியே நிக்குது..!! என்ன தொழில்நுட்பத்தை கையாண்டு இருப்பார்கள்??


தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள சுனாமியை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.
அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.
ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
137 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.
எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது..
திருச்செந்தூர் விவரங்கள்:
தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால்,
இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது,
நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது!