Monday, March 9, 2020

*விக்கிரமாதித்தன் கதைகள் - 36*



*இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்*

*விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடித்த கதை*

*வேதாளம் சொன்ன கதைகள்*

*முதல் கதை*

*பத்மாவதி கதை -6*

நாய் செத்ததைப் பார்த்ததும் இராஜகுமாரன் திகைத்தான்! மந்திரி குமாரன் நகைத்தான்.

"புத்தி சரீரா ! எதனால் இப்படி ஆகிவிட்டது?"

"இளவரசே! என் புத்திசாலித்தனம் அவளுக்குப் புரிந்து போயிற்று! உங்கள் இருவரின் இரகசியம் என்னால் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறாள்! மேலும் உனது அன்பை முழுமையாக அவள் மட்டுமே பெற வேண்டும் என்று விரும்புகிறாள்! அதற்கு நான் இடைஞ்சல் என்று கருதியே கொல்லவும் துணிந்தாள்!”

"என்ன !”

"அவசரப்படாதே! அவளைச் சொல்லிக் குற்றமில்லை! அவளை அவள் உறவுகளிலிருந்தும் ஊரிலிருந்தும் பிரித்து அழைத்துச் செல்ல வேண்டும்! அப்போது நம்முடன் பழகுவாள்! எல்லாம் சரியாகிவிடும். அதற்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள்."

"நண்பா! புத்திசரீரன் என்ற பெயர் உனக்கு வெகு பொருத்தம்!”

வெளியே போயிருந்த பாட்டி அவசரமாய் உள்ளே வந்து இருவரிடமும் சொன்னாள், "இந்த ஊர் அரசனின் ஆண் குழந்தை செத்துப் போனதாம்.”

"இளவரசே, வஜ்ரமகுடா! இந்தச் செய்தியையும் நாம் பயன்படுத்திக் கொள்வோம்! இன்றிரவும் நீ எதுவும் அறியாத மாதிரி பத்மாவதி வீட்டுக்குச் செல். அவளுக்கு உணவில் இந்த மருந்தைக் கலந்து மயங்கச் செய்துவிடு. அவள் மதிமயங்கிக் கிடக்கும்போது அவள் இடுப்புப் பகுதியில் உன் நகங்களினால் அருகருகே மூன்று கீறல்களை இட்டு விடு. பிறகு அவளது நகைகளை அவிழ்த்துக்கொண்டு இங்கே வந்து விடு. அடுத்துச் செய்யவேண்டுவதை நான் பார்த்துக்கொள்கிறேன்."

வஜ்ரமகுடன், பத்மாவதியின் மாளிகைக்கு இரவு நேரத்தில் சென்றான். அவளுடன் இன்பமாகப் பேசிக் கிடந்தான். அவளுக்குத் தெரியாமல் அவள் உணவில் மயக்க மருந்தைக் கலந்து மயங்கச் செய்தான். பத்மாவதி மயங்கிச் சாய்ந்தாள். படுக்கையில் அவளைப் படுக்க வைத்து, சூலாயுதத்தால் கோடு போட்டாற் போல, அவள் இடுப்பில் நகத்தால் மூன்று கோடு இழுத்தான். அவளது நகைகளை அவிழ்த்துக்கொண்டு புத்திசரீரனிடம் வந்து கொடுத்தான்.

புத்திசரீரன் இனி என்ன செய்ய வேண்டும் எனத் திட்டம் இட்டு, அதனை வஜ்ரமகுடனுக்கு விளக்கினான். மறுநாள் திட்டத்தைச் செயல்படுத்தினர்.

அமைச்சர் மகன் புத்திசரீரன் முனிவரைப் போல வேடம் தரித்து ஊருக்கு வெளியில் அமர்ந்து கொண்டான். இராஜகுமாரன் வஜ்ரமகுடன் அவனது சீடனைப் போல வேடம் தரித்தான். பத்மாவதியின் நகைகளுள் முத்துமாலை ஒன்றை எடுத்துக்கொண்டு நகரின் கடைவீதிக்கு வந்தான் சீடனாக வேடமிட்ட இளவரசன். முத்துமாலையை எல்லாரும் பார்க்கும்படியாகத் தூக்கிப் பிடித்தபடி விலை பேசினான். விலை கேட்டவர்களுக்கு அவர்கள் வாங்க முடியாத கூடுதல் விலையைச் சொன்னான். அரண்மனைக் காவலர்கள் சிலர் அந்த வழியாக, பத்மாவதியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நகையைத் தேடி வந்தனர். இளவரசன் மீது சந்தேகம் வரவே அவனைப் பிடித்துத் தலைமைக் காவலரிடம் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தலைமைக்காவலர் இளவரசனிடம், "மரியாதையாகச் சொல்! பார்த்தால் சந்நியாசி மாதிரி இருக்கிறாய்! இந்த முத்துமாலை உனக்கு எப்படிக் கிடைத்தது?

*ஹரி

No comments:

Post a Comment