Monday, June 17, 2019

மழையே! மழையே!வா!வா! 17/06/2019 திங்கள்

நீ வருவாய் என!

தமிழ்நாட்டுக்கு மழை வருமா!

நீரின்றி அமையாது உலகு என்பர் திருவள்ளுவர். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ நீர்  அத்தியாவசியம்.
அந்த நீரை வான்மேகங்களே மழையாக பொழிந்து பூமியை வளப்படுத்துகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் மழைக்கு உரிய கிரகம் சுக்கிரன்.இவர் ஜூனில் ரிசபத்தில் ஆட்சி பெறும் காலம் தென் மேற்கு பருவமழை காலமாகவும்,அக்டோபரில் துலாமில் ஆட்சி பெறும் காலம் வடகிழக்கு பருவமழை காலமாகவும் இருக்கிறது!

இப்போது சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். வழக்கம்போல தென்மேற்கு பருவ மழையும் ஆரம்பித்துவிட்டது.

நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் இந்த மாதம் 24 ல் கடகத்தில் நீசமாகி பலம் இழக்கிறார் இதனால் சுட்டெறிக்கும் வெயில் குறையும்!

இதன் பிறகு மழை பொழிவு ஆங்காங்கே அதிகரிக்கும்!

மழை நன்றாக பொழிய சூரியன்,சுக்கிரன்,புதன் ஒன்றாக இருக்க வேண்டும்.

29 தேதி இந்த மூன்று கிரகங்களும் ஒன்று சேர்கின்றன.. இந்த காலகட்டங்களில் தமிழகத்தில்  மழை பொழிவு அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

மழையே! வருக!வருக! என இறைவனை வேண்டுவோம்.

நீ வருவாய் என!

Friday, June 7, 2019

சரணாகதி தத்துவம். 07/06/2019 வெள்ளிக்கிழமை


சரணாகதி தத்துவம்

பட்டர், ஸ்ரீராமாநுஜரின் முதன்மைச் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வானின் திருமகன் ஆவார்.

ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள்.

அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார்.

திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால், அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.

அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.

“ஒன்றுமே இல்லை! நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர்.

 “என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள்.

“ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான்.

இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர்.

“இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

 “என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? அதற்கும் வாய்ப்பில்லை. ஆனாலும், அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து, அது கேட்டதைத் தந்து விட்டான் அல்லவா?
         
சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால், சரணாகத வத்சலனான எம்பெருமான், அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்?!!

அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனத்தில் உதிக்கவில்லையே என ஏங்கினேன்.

அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன்!” என்று விடையளித்தார் பட்டர்.

பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள்.

வடமொழியில் ‘ச்யுத’ என்றால் நழுவ விடுதல் என்று பொருள்.

‘அச்யுத:’ என்றால் நழுவ விடாதவன் என்று பொருள்.

சரணம் என்று தன்னை அண்டியவர்களை நழுவ விடாமல் கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘அச்யுத:’ என்றழைக்கப்படுகிறார்.

இந்தத் திருநாமத்தின் பொருளை விளக்கும் விதமாகவே திருமலையப்பன் எழுந்தருளியுள்ளார்.

 அவர் தனது வலது திருக்கையைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, அந்தத் திருவடிகளில் சரணாகதி செய்யச் சொல்கிறார்.

 இடது திருக்கையைத் தொடையில் வைத்துக் கொண்டு, “நீ அவ்வாறு சரணாகதி செய்தால் பிறவிப் பெருங்கடலையே தொடையளவு வற்றச் செய்வேன். உன்னைக் கைவிடாமல் காப்பேன்!” என உறுதி அளிக்கிறார். 
       
அடியார்களை  எந்நிலையிலும் திருமால் கைவிடாமல் காத்தருளுவார்..

Tuesday, June 4, 2019

இன்று மூன்றாம் பிறை தரிசனம் 04/06/2019 செவ்வாய்

இன்று மூன்றாம் பிறை தரிசனம் : ஆயுளை அதிகரிக்கும்!!*

*சந்திர தரிசனம் !!*

🌛 மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

🌛 மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

*மூன்றாம் பிறை பிறந்த கதை :*

🌛 ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.

🌛 இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனம் ஆகும்.

*மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :*

🌛 சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌛 மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

🌛 மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

🌛 சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

Saturday, June 1, 2019

முக்திகள் -4. 1/06/2019 சனிக்கிழமை

முக்திகள் -4- வகைப்படும்.

1. #ஸாலோக_முக்தி : இறைவன் இருக்கும் அதே இடத்தில், தானும் இருக்கும் தன்மை.

2. #ஸாமீப_முக்தி :
இறைவனுக்கு மிக அருகில் இருக்கும் தன்மை.

3. #ஸாரூப_முக்தி :
இறைவனை மீண்டும் மீண்டும் தியானித்ததன் பயனாக, "யத் பாவம் தத் பவதி" (நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்) என்ற முறையில், தானே இறை வடிவத்தை அடைதல்.

4. #ஸாயுஜ்ய_முக்தி :
நாம, ரூபங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில், இறைவனுடன் 'இரண்டறக்' கலக்கும் தன்மை.

                   
                           ஈஸ்வரார்ப்பணம்!