Saturday, January 7, 2017

வைகுண்ட ஏகாதசி 8 ஜனவரி 2017

                பரமபத வாசல் திறப்பு



                  

.ஹரி ஓம்!
மெய்யன்பர்களே!  தாய்மார்களே! 
அன்பு நெஞ்சங்களே! ஆன்மீகச் செம்மல்களே! அனைவருக்கும் அடியவனின் அன்பு வணக்கங்கள்!
நாம் பிறந்த இப்புண்ணியபூமியை கர்மபூமி என அழைப்பர். இங்கு பிறந்த
உயிர்கள்,ஜீவர்கள்,தாவரங்கள்அனைத்தும்தாம் பெற்றுவந்தகர்மவினைக்கு
ஏற்ப பிறப்பெடுக்கின்றன என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து இப்பதிவை விட்டு விலகவும்.சாதாரண பிறப்பெடுத்த ஜீவன்கள் உய்யும்பொருட்டு விரதங்கள்,விசேஷங்கள், வழிபாடுகள் ஆகியவற்றை ஏற்படுத்தினர் நம் முன்னோர்களும், ஆன்மீகப் பெரியோர்களும்.
    அவ்வகையில் சில முக்கிய தினங்களை இறைவனோடு ஒன்றியிருப்பதற்குரியவைகளாக மார்கழி மாதம் தெய்வீகத்திற்கு உகந்ததாக உள்ளது. தேவர்களின் உதயகாலமாகவும் இருப்பதாலும், பூமியின் இயக்கமும் சூரிய சந்திரர்களின் கதிர்வீச்சும் ஒத்து வருவதாலும், தெய்வ வழிபாடும், யோக சாதனைகளும் அதிக அளவில் நடைபெறுகின்றன.
    மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன் என பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறியுள்ளதும் அதனாலே தான். இந்த மாதத்தை தனூர் மாதம் என அழைப்பர். ஜோதிடத்தில் இந்த மாதம் தனுசு இராசி யாக உள்ளது. காலபுருஷ தத்துவத்தில் இப்பிரபஞ்சம் தோன்றியதற்கும் மூலமாக இருந்ததும் இந்த ராசியே. மூல நட்சத்திரமும் இங்குதான் உண்டு.
     இம்மாதத்தில் தான் வைணவர்கள் சிறப்பாகக் கொண்டாடும் வைகுண்ட ஏகாதசியும், சைவர்கள் சிறப்பாகக் கொண்டாடும் ஆருத்திர அபிஷேகமும் நிகழ்ந்து வருகின்றன.

                          
      மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று  ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் வகுத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக
ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.


                    

ஏகாதசி விரதம்
   ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால்ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது. உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.                        
   மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி என்பர்.
    எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.

                      
:    வைகுண்டத்திற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.


                                    

சொர்க்கவாசல்வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் பரமபதம் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது.
   ஏகாதசி விரதமிருந்து பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவோம்! பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் அற்று பக்தி பரசவநிலை அடைவோம்! பேரானந்தத்தில் மூழ்கி திளைப்போம்!
   யோக சாதனையில் துரியம் என்னும் நிலைதான் பரம்பொருளோடு ஒன்றி இருப்பதற்குரிய வாசல் ஆகும். இவ்வாயில் திறப்பு தீட்சை எனப்படும்.
  எனவே ஏகாதசி விரதமிருப்போம்! யோக சாதனை புரிவோம்! பரமபதம் வாசல் வழி சென்று பேரின்பத்தில் திளைப்போம்!


No comments:

Post a Comment