Monday, June 8, 2020

கோவில் கோபுரத்தில் கடவுள் சிலைகள் 8/6/2020 திங்கள்

கோவில்  கோபுரத்தில்  கடவுள் சிலைகள், நாட்டிய மாதர்கள், ஆபாச சிலைகள், ஆன்மீக பெரியோர்சிலைகள் ,  மற்றும்  போர்யகளத்தில் சண்டையிடும்  வீரர்கள்,    விலங்குகள் ,  பரதநாட்டியம்,    என்று  எல்லா சிலைகளும்   வைத்து  இருக்க  காரணம்  என்ன ?
**********************************************

             கடவுள்  எங்கே  இருக்கிறார் ?,  கடவுள்  எப்படி  இருக்கிறார் ?  உண்மையில்  இந்த  உலகம்   எப்படி  இருக்கிறது ?..  போன்ற  பல்வேறு   கேள்விகளுக்கு   பதில்  அளிக்கும்  விதமாக  தான்  கோவில்கள்  கட்டப்பட்டு   இருக்கிறது.

             கடவுள்  ஐந்து  இடங்களில்  இருக்கிறார் .    ஐந்து  விதங்களில்  செயல்படுகிறார் .

         1.  பரம் ,    2. வியூகம்,   3.  விபவம்,
         4.  அர்ச்சை,   5. அந்தர்யாமி .
என்று   ஐந்து  விதங்களில்  செயல்படுகிறார்.

" பரம்  உலகம்  =  உச்சி  முதல்  வரிசை. "
================================

           பரம்  என்பது   உயர்மட்ட  மேல்  உலகம்  ஆகும்.   இங்கு  இருக்கும்  மூர்த்திகள்  :-   நாராயணன்  ,    சதாசிவம்,  லலிதா பரமேஸ்வரி,   போன்றோர்  ஆவர்.

இந்த   பரம்  என்கிற  உலகில்  உள்ள  மூர்த்தி  ஆனவர்  சும்மா  கண்ணை மூடி   கண்ணை  திறக்கிற  சொற்ப  வினாடி  நேரத்திலே   பூமியில்  ஒரு  யுகமே   முடிந்து  விட்டு  இருக்கும்.   அப்படி  ஒரு  காலம்  கணக்குபடி   அங்கு   அவர்   வாழ்கிறார்.

இந்த  பரம்  என்ற  உலகத்தை   நமது   கோவில்  கோபுரத்தில்   உச்சியில்   உள்ள  மேல்  வரிசையில்   அமைத்து  மக்களுக்கு  தெரியப்படுத்தினர்  .

கோவில்  கோபுரம் உச்சியில்  உள்ள  மேல்  வரிசையில்  தான்  நாராயணன்  சிலை , ஐந்து  தலை உள்ள  சதாசிவம்  சிலை,  காயத்ரி  சிலை ,   லலிதா பரமேஸ்வரி  சிலை  போன்றவற்றை   வைக்க  வேண்டும்.

வீட்டில்  நவராத்திரி  அன்று  வைக்கிற  கொலுவிலும்    மேலே  உச்சியில்  மேல்  வரிசையில்  தான்  இந்த  நாராயணன் சிலை,  சதாசிவம்,  லலிதா பரமேஸ்வரி  போன்ற   சிலைகளை வைக்க வேண்டும்.

      1. கோவில்  கோபுரம்  என்பதும்
      2. மேரு  மலை  என்பதும் ,
      3. நவராத்திரி  கொலு  என்பதும்,
      4. ஸ்ரீ  சக்கரம்  என்பதும்,.
         .... எல்லாம்   ஒரே  தத்துவ  ரகசியத்தை   குறிப்பிடுவது   ஆகும்.

          அதாவது   நாம்  வாழும்  இந்த  உலகத்துக்குள்  பல்வேறு  பரிமாண  உலகங்கள் இருக்கிறது.    அவற்றில்  மிக மிக  ஆழத்தில்   கடைசியில்   உச்சியில்   இருப்பது  தான்   பரம்   என்ற  உலகம்  ஆகும்.

       வீட்டில்  விளையாட   பயன்படுத்துகிற     பரமபதம்  என்ற   விளையாட்டு   புகைப்படம்   சார்ட்டிலும்    உச்சியில்  மேல்  வரிசையில்  தான்  பரமபதம்   என்று  குறிப்பிட்டு  இருப்பர்.


மார்கழி  வைகுண்ட  ஏகாதசி  அன்று  இந்த  பரம பதம்  வாசல்  திறக்கும்.   அன்று  உயிர்  விடுகிறவர்கள்  அந்த  உலகிற்கு  செல்வர்   என்று  சாஸ்திரம்  சொல்கிறது.

            இந்த  பரம்  என்ற  உலகிற்கு  அடுத்ததாக  சற்று  வெளியே  இருக்கிற  உலகம்  தான்  " வியுகம் "   என்ற  உலகம்  ஆகும்.

" வியுகம் உலகம்  = இரண்டாவது  வரிசை"
==================================

          இந்த   வியுகம்  உலகத்தில்  தான்   பிரம்மா ,  விஷ்ணு,  சிவன்,   என்கிற  மும்மூர்த்திகள்   இருக்கிறார்கள் .

           இவர்கள்  தான்   வியுகம்  வகுப்பவர்கள்  ஆவர்.    பூமியில்    கிரேதா  யுகம்,   திரேதா யுகம் ,    துவாபர  யுகம் ,  கலி யுகம்,     போன்ற  நான்கு  யுகத்திலும்     அசுரர்களை  அழிக்க  யார்  யார்  அவதாரம்  எடுக்க வேண்டும் ;   யார்  யார்   என்ன என்ன  செயல்கள்  செய்ய வேண்டும்  என்று  திட்டம்  வகுத்து   முடிவு  செய்து   பூமியில்   அவதார  புருஷர்களையும் ,    மகான்களையும்   பிறக்க செய்வது   இவர்கள்  வேலை  ஆகும்.

               இந்த  வியுகம்  உலகத்தை  கோவில்  கோபுரம்  உச்சியில்  உள்ள  மேல்  வரிசைக்கு  அடுத்து   உள்ள  கீழ்  வரிசையில்   அமைத்து   அதற்கு  கீழ்  இந்த  உலகம்   இருக்கிறது   என்ற  உண்மையை   வெளிபடுத்தினர் .

             இந்த  இரண்டாவது   உலக  பரிமாணத்தில்   எந்த  எந்த  தெய்வங்கள்  இருக்கிறார்கள்,  என்ன மாதிரியான  பணிகளை  செய்கிறார்கள்  என்பதை   மக்களுக்கு  தெரியபடுத்தும்   விதத்தில்  அதற்கு  உரிய  சிலைகளை  வைத்தனர்.

             இந்த  இரண்டாவது  வரிசையில்  தான்  இந்த  முப்பெரும்  தெய்வங்கள்  சிலையை  வைக்க  வேண்டும்.

             நவராத்திரி  கொலு  மண்டபத்திலும்  இந்த  இரண்டாவது  வரிசையில்  தான்   முப்பெரும்  தெய்வங்கள்  பொம்மைகளை  வைக்க வேண்டும்.

          ஸ்ரீ  சக்கரம்  வழிபாடு  செய்பவர்கள்   இந்த  இரண்டாவது  வரிசையில்  முப்பெரும்  தெய்வங்கள்  பீஜாட்சரம்  ஜெபித்து   ஆவாஹனம்  செய்து   உபாசித்து  வழிபட  வேண்டும்.

           இதற்கு  அடுத்து    வெளிபக்கமாக   உள்ள  மூன்றாவது   வரிசையில்   தான்  விபவம்  உலகம்    இருக்கிறது.

" விபவம்  உலகம்  =  மூன்றாவது  வரிசை "
==================================

            விபவம்  உலகத்தில்  தான்   அவதார  புருஷர்கள்  வாழ்கிறார்கள்.  மச்சவதாரம்  மூர்த்தி ,  ஹயக்ரிவர் மூர்த்தி,   வராக மூர்த்தி,   நரசிம்மர்  மூர்த்தி,   வாமன  மூர்த்தி,  ஸ்ரீ ராமர் ,  ஸ்ரீ கிருஷ்ணர்,    சோமசுந்தரர்,   ஐயப்பன்,....

            போன்ற   தெய்வங்கள்  எல்லாம்  இந்த  விபவம்  உலகத்தில்   வீற்றிருக்கிறார்கள் .   இந்த  உலகில்  இருக்கிற   இவர்கள்  தான்  பூமிக்கு  வந்து  மக்களுக்கு  நல்வழி காட்டிவிட்டு   மீண்டும்  இந்த   விபவம்  உலகிற்கு  சென்று  விடுகிறார்கள்.

           இந்த  உலகிற்கான   கால கணக்கு   வேறு  ஆகும்.

           இந்த   விபவம்  உலகத்தை  கோவில் கோபுரத்தில்  மூன்றாவது   வரிசையில்   அமைத்து  ;   இந்த  வரிசையில்  இதுவரை  அவதரித்த  தெய்வங்கள்  சிலைகளை   வைத்து  மக்களுக்கு  தெரியப்படுத்தினர்.

            நவராத்திரி  கொலு  மண்டபத்திலும்  மூன்றாவது  வரிசையில்  தான்  வராகர் சிலை ,  ராமர்  சிலை , கிருஷ்ணர்  சிலை ,  ஐயப்பன்  சிலை ,.. போன்றவற்றை  வைக்க வேண்டும்.

            ஆனால்  நிறைய பேர்  வீடுகளில்  நவராத்திரி  கொலுவில்  இந்த   வரிசை  படி  சாமி சிலைகளை   வைப்பது  இல்லை.   தங்கள்  இஷ்டத்திற்கு  எங்கு வைக்கணும்   என்று  தோணுகிறதோ   அங்கு  வைத்து  விடுகிறார்கள்.

             இதற்கு  காரணம்  மக்களுக்கு      கொலு  என்பதே    பல்வேறு  பரிமாண   உலகங்கள்  பற்றிய  அறிவை  போதிக்கிற   ஒன்று   என்று  தெரியாததே  ஆகும்  ;

              அதனால்  தான்   தெய்வங்கள்  பொம்மையை   எங்கு   வைக்கணும்  என்று  தெரியாமல்  மாற்றி  மாற்றி  வைத்து  விடுகிறார்கள்.

           மக்கள்   இந்த  நியமத்தை  அறிந்து  அதற்கு  ஏற்ப   தெய்வ சிலைகளை   வைத்து  வழிபட்டால் ;      உபாசனையானது   முழுமை  பெறும் . முழுபலன்  கிடைக்கும் .

             இதற்கு  அடுத்து  கீழ்  இருக்கிற  உலகம்  தான்   " அர்ச்சை " ஆகும்.

" அர்ச்சை  உலகம்  =  நான்காவது வரிசை"
==================================

            இந்த  அர்ச்சை  உலகம்  தான்  சொர்க்கம்  ஆகும்.   இங்கு  தான்  தேவர்கள்  வாழ்கிறார்கள்.    இவர்கள்  தங்கள்  உலகில்  சிவ லிங்கம்,   நடராஜர்  சிலை  வைத்து   அர்ச்சனை  செய்வார்கள்.    பஜனை ,  கீர்த்தனை என்று   பலவாறாக   வழிபாடு  செய்வார்கள்.

         இந்த   அர்ச்சை  என்ற   சொர்க்கத்தில்  இருந்து  தான்   நடராஜர்  சிலையை  தேவர்களிடம்   கேட்டு  வாங்கி   பூமிக்கு   கொண்டு  வந்தார்  அகத்தியரின்  ராஜ  சீடர்.

             பூமியில்  இருந்து   சொர்க்கம்    சென்ற  பக்தர்கள்   அங்கு  உள்ள  மிக சக்தி வாய்ந்த   இந்த   சிலைகளை   வழிபாடு  செய்து  கொண்டு  இருப்பர்.

           கண்ணகி,   தருமர்,  சுந்தரரின்  நண்பர்  சேர மன்னர் ,   மீரா பாய்,     சித்தர்கள்,...  என்று   நிறைய  பக்தர்கள்  இந்த  அர்ச்சை  என்ற  உலகத்தில்  இருப்பார்கள்.

             இந்த  அர்ச்சை  என்ற   சிலைகளில்   தெய்வம்   உறைந்து  இருக்கும் .   அந்த  சிலை  வழியாக   அங்கு  உள்ள  பக்தர்களுக்கு   அருளுவார்  இறைவன்.

              இந்த  உலகத்தை பற்றிய  தகவலை  கோவில்  கோபுரத்தில்   நான்காவது  வரிசையில்   அமைத்து ;  அதில்  இதற்கு  முன்  முக்தி அடைந்த  சித்தர்கள்,  பக்தர்கள்  சிலைகளை  வைத்து   மக்களுக்கு  உணர்த்தினர்.

         வீட்டில்  நவராத்திரி  கொலு மண்டபத்திலும்   நான்காவது  வரிசையில்  தான்   அவ்வையார்  சிலை ,  நால்வர்  பெருமக்கள்  சிலை ,   சித்தர்கள்  சிலைகளை  வைக்க வேண்டும்.

            இதற்கு  அடுத்து  கீழ்  இருக்கிற  உலகம் தான்   அந்தர்யாமி   என்கிற  நாம்  வாழ்கிற  பூமி  ஆகும்.

" அந்தர்யாமி உலகம் = ஐந்தாவது வரிசை"
==================================

             நாம்  வாழ்கிற  இந்த  பூமியில்  இருக்கிற   புல் பூண்டு  மரம்   முதல்  ஈ எறும்பு  , நாய்  நரி,  பறவைகள்,  மனிதர்கள்  வரை  எல்லாவற்றிலும்   இறைவன்   அந்தர்யாமியாக    உறைந்து  இருக்கிறார்.

            அதனால்  இந்த  பூமியில்   மனிதர்கள்   எல்லா ஜீவராசிகளுக்கும்   செய்கிற  சேவையே    அவற்றின்  உள் உறையும்   இறைவனுக்கு  செய்கிற  சேவையாகிறது.

            மக்கள்  தொண்டே  மகேசன்  தொண்டு  ஆகும்.   இங்கே  கடவுளை  வெளியே  தேட கூடாது.   தனக்குள்ளே  அந்தர்யாமியாக  உள்ள   இருதயாளிஸ்வரரை   அக  பூஜையில்  வழிபட  வேண்டும்.

             தங்கள்  மனதில்  கெட்ட  எண்ணங்களுக்கு  இடம்  தராமல்   சிவனின்  திருவடிக்கு  மட்டுமே  இடம்  தந்து வழிபட்டால்   நிச்சயம்  காணலாம்  கடவுளை.

                இந்த  அந்தர்யாமியான   இறைவன்    உறைந்து  உள்ள  ஜீவராசிகளை  எல்லாம்  கோவில்  கோபுரத்தில்  கீழ்  வரிசையில்   அமைத்து  காட்டினர்   ஆதிகால  சான்றோர்  பெருமக்கள்.

               வீட்டில்   நவராத்திரி  கொலு மண்டபத்திலும்    கடைசி  கீழ்  வரிசையில்  தான்  மனிதர்கள்  பொம்மை,  குரங்கு பொம்மை,   பறவைகள்,  மரம்,  வீடு ,  மாடு ,...  என்று  எல்லாம்  வைக்க வேண்டும்.

               இந்த   அந்தர்யாமி  உள்ள  பூமியில்  மக்கள்  முதல்  மற்ற ஜீவ ராசிகள்  எப்படி  உள்ளன ,   எப்படி  இன பெருக்கம் செய்கின்றன ,   எப்படி  வாழ்கின்றன,..  என்பதைக்  காட்டும்  விதமாக  தான்    இந்த  கீழ்  வரிசையில்  தாம்பத்திய  சிலைகள் ,   ஏர்  உழும்  விவசாயி  சிலை ,    போர்  வீரர்  சிலை , என்று   எல்லாவற்றையும்    வடித்து  வைத்து  உள்ளனர்.

              எவ்வளவோ  பிரபஞ்ச  உண்மைகளை  எல்லாம்    இந்த  கோவில்  கோபுரத்தில்  அமைத்து   காட்டியாச்சு ;

          மீதி  இருக்கிற   இந்த   பூலோக  மக்கள்  வாழ்கை  முறையையும்   வடித்தால்  தான்  மேருமலை   என்கிற  பல்வேறு  பரிமாண உலகம்  பற்றிய  கல்வி போதனை  முழுமை பெறும்  என்பதால்   மனிதர்கள்  சிலைகளும்   கீழ்  வரிசையில்  வடித்து  வைத்தனர்.

               ஆனால்  இந்த  வரிசை நியதிப்படி தான்  கோவில்  கோபுரத்தில்   சிலைகள்  வைக்கப்பட்டு  உள்ளதா ?  என்றால்  இல்லை.   தாறுமாறாக  சிலைகளை  அந்த  அந்த  வரிசையில்  வைக்காமல்  மாறி மாறி  வைத்து  உள்ளனர்.

          இதற்கு  காரணம்   கோவில்   கட்டுபவர்கள்    பல்வேறு   பரிமாணம்   உலகம்  பற்றிய  கல்வியை  போதிக்கிற   பிரம்ம ரிஷிகளிடம்  முழுமையாக   சரணடையாததே  ஆகும்.

           பிரம்ம ரிஷிகளும்   இந்த  சூட்சுமத்தை   எல்லாம்    ரகசியமாக   தங்கள்  சீடர்களுக்கு  மட்டும்  போதித்து  வந்து  இருக்கிறார்கள் .

           இதனை   பிரம்ம வித்தை ,   பர ஆகாய  பிரவேசம்  ,  பரலோக  ரகசியம் ,   என்று   குறிப்பிட்டு   போதித்து  வந்து  இருக்கிறார்கள் .   அதனாலேயே   கோவில்  கட்டுகிறவர்களிடம்  முழு உண்மையையும்   சொல்லாமல்  பாதி  சொல்லியும்,   பாதி மறைத்தும்   இருக்கிறார்கள்.

              அதனால்  எங்கோ  ஒரு  சில கோவில்களில்   மட்டுமே  பரிமாண   டைமன்ஷன்  வரிசைப்படி   சிலைகளை  வைத்து  உள்ளனர்.    அப்படிபட்ட  கோவில்    கோபுரத்தை   தரிசனம்  செய்வது   தான்  கோடி  புண்ணியம்   ஆகும்.

                  எனவே  உலகுக்கே   வெவ்வேறு  டைமன்ஷன்கள்    பற்றிய  கல்வியை  கோவில்  கோபுரத்திலும்,   மேரு மலை  வழிபாட்டிலும் ,    ஸ்ரீசக்கரம்  வழிபாட்டிலும் ,   நவராத்திரி  கொலு  வழிபாட்டிலும்    வைத்து   நமக்கு    போதித்து   உள்ள    இந்து மதத்தை   போற்றுவோம்.

           இந்து  மதம்  சொல்லி  உள்ள  இந்த  உயரிய   உண்மைகளை   அடுத்த  தலைமுறைக்கும்   சொல்வோம்.      எல்லா  நலனும் பெற்று  சிறப்புடன்   வாழ்வோம்.

பொருள் புதைந்த அருள் நிறைந்த மதம்!
அர்த்தமுள்ள இந்து மதம்!

                               

No comments:

Post a Comment