Saturday, May 29, 2021

 ஶ்ரீராமஜெயம் 🙏


*நமது  ஆன்மீக குழுவில் இருந்து திருப்பதி பற்றி பலரும் அறிந்திராத செய்திகள்*


*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*


*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*


*2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.*


*3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.*


*4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல்,பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில்தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.*


*5.திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீபகாலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது.*


*6. திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.*


*7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.*


*9.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனிமாதம்,தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவு−செலவுக்கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.*


*10. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.*


*11. சென்னை ஆளுநராக இருந்த சர்.தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும்,தயிர்ச்சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக்கட்டளை ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோவில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.*


*12. திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்.*


*12. ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.*


*13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.*


*14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.*


*15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டுவிட்டன.*


*16. ஏழுமலையான் கோவிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோவில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.*


*17. தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்.*


*18. ஏழுமலையான் கோவிலில், மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப்படுபவை. இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்.*


*19. திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.*


*20. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பரஞ்செய்து ஏலம் விடுகிறார்கள்.*


*21. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.*


*22. ஏழுமலையான் கோவிலின் தலமரம் புளியமரம்.*


*23. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.*


*24. ஏழுமலையான் கோவிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.*


*25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோவிலே ஆகும். (எ.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.*


*26. ஏழுமலையானுக்குத் தினசரி , ஒருமுறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்.*


Shared as received.


*ஸர்வம்_ஸ்ரீ_கிருஷ்ணார்ப்பணம்*


ஓம் நமோ நாராயணாய 🙏

Thursday, May 27, 2021

 *மேஷ லக்கனச் சிறப்பு* 


மேஷ லக்கனம் சர லக்கனம்.


 இதன் லக்கனாதிபதி செவ்வாய். அவரே அட்டமாதிபதியும் ஆகிறார்.  செவ்வாயும் ஒரு சரக்கிரகமே. செவ்வாய்க்கு அட்டமாதிபத்தியம் உண்டு. அது அசுபஸ்தானமாகும்.


 லக்கனாதிபதியே ஆயுள் ஸ்தானாதிபதியாவதால் தீர்க்க ஆயுள் கொடுக்கிறார்.  அதனால் அட்டமாதிபத்தியம் பின் தள்ளப்பட்டு சுபக்கிரகமாகிறார் செவ்வாய்.


இந்த லக்கனத்திற்கு பஞ்சமாதிபதியான சூரியன் நட்பு கிரகம் முதல் திரிகோணமான பூர்வபுண்ணியஸ்தானம் மட்டும் பெற்று சுபகிரகமாகிறார். சூரியனுக்கு வேறு ஆதிபத்தியம் இல்லை


அடுத்த பலமிக்க திரிகோணமான பாக்கியஸ்தானத்தின் ஆதிபத்தியம் பெற்றவர் குரு , விரயமாகிய 12 - ம் ராசிக்கும் ஆதிபத்தியம் பெறுகிறார்.


 இதனால் விரயத்தையும் கலந்து கொடுக்கக் கடமைப்  படுகிறார்  என்றாலும் இயற்கையில் சுபக்கிரகமான குரு,  செவ்வாய்க்கும்  சூரியனுக்கும் நட்பு கிரகமானதாலும் பலத்த திரிகோணம் பெற்றுள்ளாதாலும் ஒரு விஷேச. சலுகைமூலம் துர்ஸ்தானாதிபத்தியம் பின் தள்ளப்பட்டு,  முழுச் சுபராக யோகாதிபதியாகிறார்.


சூரியனும் குருவும் பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது 1, 5 ,9 - ம் ராசிகளில் சேர்ந்து  நின்று,  லக்கனாதிபதி செவ்வாய் பார்வை ஏற்பட்டாலோ பலத்த யோகத்தை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.


சூரியன் 7 ,10,  ராசிகளில் சஞ்சரித்தால் களத்திர வழியிலும்,  ஜீவன வழியிலும் நல்ல சிறப்பான பலனைக் கொடுப்பார்.


 சூரியனோடு,  செவ்வாய்,  குரு  சேர்ந்து 7 ,9 ,10 ராசிகளில் இருப்பது ராஜயோகமாகும். புதன் - சனியோடு மட்டும் எவ்விதத் தொடர்பும் இல்லாமலிருக்க வேண்டும்


3 , 6 - ம்  ராசிகளான துர்ஸ்தானங்களுக்கு அதிபதியாகிய *புதனும்* சரலக்கனத்திற்கு  11- ம் ராசிக்குடைய. *சனியும்* ,  இந்த லக்கனத்திற்கு *மாரகாதிபதிகளாவார்கள்* . சனிக்கு 11 -ம் ராசி பாதகாதிபத்தியமாகும்.


 இவ்விருவரும்  மறைந்து பலம் குன்றுவதே நலமாகும்.


சுக்கிரன் 2 , 7 ம் ராசிகளுக்கு குடும்பம்,  களத்திரம்,  என இரு ஆதிபத்தியம் பெறுவதாலும். களத்திரகாரகரே களத்திரஸ்தானாதிபத்தியம் பெற்றதாலும். குடும்பம், தனம், திருமணம் போன்ற வற்றிக்குச் சிறப்பான பலனைக் கொடுக்கிறார்.


மேஷ லக்கனகாரர்களின் திருமண வாழ்க்கை பெரும்பாலானோருக்கு காதல் வயப்பட்டு விடுகிறது. இதனால் பலர் தோல்வியைத் தழுவுகின்றனர் எனலாம். இவர்களால் காதலில் வெற்றி பெற பல நிலையான நண்பர்கள் இருப்பார்கள்.


சுக்கிரன் + சந்திரன் 4,7,10 ராசிகளின் ஆதிபத்திய பலமும் பெற்று இருந்து குருவின் பார்வை பெறுவது நல்லதாகும்.


செவ்வாய், சனி, சூரியன் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருப்பது விஷேமாகும்.


லக்கன கேந்திரமாகிய கடகத்தில் குரு உச்சம் பெறுவது தவறில்லை. அதனால் ஹம்சயோகம் ஏற்படும். அதனால் குரு பலத்த யோககாரகராகி விடுவார்


புதனும் , சனியும் பலம் குறைந்திருப்து லக்கனத்திற்கு நலம்


தேய்பிறை சந்திரன் சுபப்பலன்களை கொடுப்பார்.


லக்கனத்திற்கு ராகு கேது பகைவர்கள்.


நாளை ரிஷப லக்னத்தை பார்போம்


Tuesday, May 25, 2021

 அர்த்தமுள்ள ஜோதிடம் – 13


கொரோன கர்மாவும், மரணங்களும்..


அர்த்தமுள்ள ஜோதிடம்    இந்த முறை கதை வடிவில்,


கொரோன பாசிட்டிவ் என்ற ரிசல்ட்டுடன் ஆம்புலன்சில் ஏறிய அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது.


 அவரது மகன் முன்னால் ஏறி கவலையோடு தலை தாழ்த்தி அமர்ந்தார்.

பின்னால் அவரோடு மனைவி இருக்க, நர்ஸ் லக்ஷ்மி ஆக்சிஜன் குடுவையை திருகி  அந்த அமில காற்றை அவருக்கு செலுத்தினாள்..


“ஜி.எச் ல பெட் லாம் ஃபுல்ல்லா இருக்கு சார். 10000 கொடு, முடிச்சி தர்றேன்” மகனிடம் கேட்டேன்.


“அவ்ளோ பணம் இல்லப்பா, நீ ஜி.எச் க்கு போ, பாத்துக்கலாம்”


“ஆம்புலன்சு க்கு 2500 இருக்குல்ல..?” நக்கலாக கேட்டேன்.


“ம்ம்” ஒற்றை எழுத்தில் பதில் வந்த்து..


ஜி.எச் அடைந்து, பின் பக்க கதவினை திறந்து விடும் போது தான் அவரது முகத்தை முழுதாய் பார்த்தேன்.. இவர் ஜோதிடர் அய்யப்பன் தானே.. பத்து வருடம் முன் பார்த்து இவரிடம் ஜாதகம் பார்த்து இருந்தேன்..


மகனின் தோளை தொட்டு “ எனக்கு மாரக தசை நடக்கல, உனக்கு கர்ம தசையும் நடக்கல, கவலை படாதே, திரும்பி வந்துருவேன்..” சொல்லிவிட்டு மனைவியோடு உள்ளேறி போனார்..


அவரது மகன் என்னிடம் 2500 நீட்ட , “ வேணாம் சார், வெச்சுக்கோ.. தேவைப்படும். உள்ள யாராவது கேட்டா என் பேரு சொல்லு சார், டிரைவர் கணேசன்னு சொல்லு சார், எல்லாருக்கும் நல்லா தெரியும், எவனும் காசு கேக்க மாட்டான்.. உங்க அப்பாவ நான் முன்னாடி பாத்துருக்கேன், நல்ல மனுஷன் சார், சீக்கிரம் சரியாயிடும், நான் வரேன் சார்..” என்று புறப்பட்டேன்..


அடுத்த பயணம் ஒரு இறந்த உடலை சுமந்து வீடு வரை செல்வதாக அமைந்தது..


அய்யப்பன் அய்யா சொன்ன ஒரு வார்த்தை.. என்ன அது? மாரக தசை, கர்ம தசை.. ஒன்றும் புரியவில்லை,, ஆனால் அவர் சொன்ன விதமும், அந்த தன்னம்பிக்கையும் என்னை ஏதோ செய்தது.. தினமும் பல பேரை பார்க்கிறென். பீதியும், பயமும் பார்த்து பழகிய எனக்கு இந்த அனுபவம் புதுசு…


10 நாள் கழித்து,


 படிகள்  இறங்கி வரும் ஜோதிடர் அய்யப்பனை தூரத்தில் இருந்தே கண்டு கொண்டேன்.

ஓடி போய், நலன் விசாரித்து என்னுடைய ஆம்புலன்சில் ஏற்றி கொண்டேன்.. 


இந்த முறை மனிதர் மிக தெம்பாயிருந்தார்.. முன் சீட்டில் தான் உட்கார்ந்தார்.. வண்டி புறப்பட்டது..


“ சார், ஒரு சந்தேகம் கேக்கலாமா?”


“கேளுப்பா, உன்னை எங்கேயோ பார்த்து இருக்கேன்.. ஆனா சட்டுனு ஞாபகம் வரல”


“பத்து வருஷம் முன்ன, குழந்தை விஷயமா உங்க கிட்ட ஜாதகம் பாத்தேனுங்க, நீங்க சொன்னா மாறியே, எனக்கு 5 வருஷம் முன்னாடி புள்ள பொறந்துச்சிங்க, சொல்லலாம் னு வூட்டாண்ட வந்தேன், நீங்க வீடு காலி பண்ணீட்டிங்க, “


“அப்படியா.. சந்தோசம்.. உன் சந்தேகம் கேளு”


“ நீங்க அன்னைக்கு ஆஸ்பத்திக்குள்ள போகும் போது மாரக, கர்ம தசை னு ஏதோ சொன்னீங்க, தைரியமா போனீங்க, அப்படி னா என்னங்க?”


“ அதுவா, சிம்பிளா சொன்னா, எனக்கு மண்டைய போடுற டைம் இன்னும் வரல, எம் புள்ளைக்கு எனக்கு கொள்ளி வைக்கிற டைம் வரல,  மரண காலம் மாரக தசை, கர்ம காரியம் பண்ற காலம் கர்ம தசை அவ்ளோ தான், எல்லாமே டைம் தான்“ சிரித்தபடி சொன்னார்..


“அது எப்படி சார் உனக்கு தெரியும், நீ என்னா கடவுளா?”


பலமாக சிரித்தார்..


“உனக்கு எத்தனை வருஷம் கழிச்சி குழந்தை பொறந்துச்சி?”


“கல்யாணம் ஆகி 10 வருஷம் கழிச்சி, அதுவும் நீங்க சொன்ன மாதிரி சரியா அதே 2015 ல”


“ ட்ரீட்மெண்ட் பாத்தியா?”


“நிறைய பார்த்தேன்,  10 வருஷம்.. நிறைய பணம் போச்சி”


“ ஏன் உனக்கு ட்ரீட்மென்ட் பாத்த உடனே குழந்தை பொறக்கல. எல்லாருக்குமே ஒரே மாதிரி மருந்து தானே, சிலருக்கு உடனே கேக்குது, பலருக்கு லேட் ஆகுது.. பலருக்கு கேக்கறதே இல்ல.. ”


“அது வந்து , அது வந்து”


“அந்த ‘அது’ தான் விதி, அந்த விதி தான் டைம், அந்த அத கடவுள் தான் எழுதுறான், அந்த விதி சம்பவம் நடத்தறதுக்கு தேவைப்படுறது ஒண்ணே ஒண்ணு தான் அது டைம்.. ‘அத’  ஒரு அளவுக்கு தெரிஞ்சிக்கற வழி தான் ஜோதிடம்.. “


“கடவுள் நல்லவர் தான, அப்போ எல்லாருக்கும் ஒரே மாதிரி நல்ல விதி எழுத வேண்டியது தானே..”


மீண்டும் மிக பலமாக சிரித்தார்..


“ உன் விதியை கடவுள் எழுதறாரு, அவரு வெறும் டைப்பிஸ்ட் தான், அதுக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் உருவாக்கி கொடுக்கறது யாரு தெரியுமா?”


“யாரு?”


“நீ தான்.. ஒரு உதாரணத்துக்கு உன் கதைக்கே வரேன்,, உன் ஜாதகத்த பாத்துட்டு உனக்கு நான் என்ன பரிகாரம் பண்ண சொன்னேன்..”


“ 5 வருஷம் யார் கிட்டயும் எந்த எக்ஸ்ட்ரா காசும் வாங்காம ஆம்புலன்ஸ் ஓட்ட சொன்னீங்க.. முடிஞ்ச அளவுக்கு உதவ சொன்னீங்க..”


“ஏன் அப்படி சொன்னேன்னு என்னைக்காவது யோசிச்சியா?”


“இல்ல” 


“நீ பாவத்த சம்பாதிச்ச வழியிலயே, அத தீர்க்கணும்.. அதுக்குதான், “


“எப்படி? எல்லாரும் வாங்கற மாதிரி தான நானும் வாழறேன், இதுல என்ன பாவம் இருக்கு.”


“நோயோட  நடந்து கூட வர்ற முடியாத அவசர கண்டிஷன் ல இல்லாதவங்க தான் ஆம்புலன்ஸ் ல வருவாங்க, அவங்க இயலாமை ய வெச்சு தான பாவ  காசு சம்பாதிச்ச,  உன்னோட இயலாமை ய பயன்படுத்தி, நீ சம்பாதிச்ச பாவ காசு செலவாகும்..  அது தான் கர்மா”


“அப்ப இந்த கொரனோ ல பாதிச்ச எல்லாரும் பாவம் பண்ணவங்க அப்படி தான சொல்ல வர்றீங்க”


“மனுஷன் மனுஷனுக்கு பண்றது தான் பாவம் னு இல்ல, இயற்கை க்கு எதிரா செயல்படுறதும் பாவம் தான், மனுசனும், மத்த உயிரினங்களும் வாழறதுக்கு தேவையான அத்தனையும் இயற்கை படைச்சிருக்கு, ஆனா மனுஷன் தான் மட்டும் சுகமா வாழணும் னு, இருக்குற அத்தனை வளத்தையும் அழிக்கும் போது, இயற்கை தன்னை பாதுக்காக்க நடத்துற போராட்டம் தான் இந்த பேரழிவு,,. இருக்கும் மீதி வளங்களை நல்லவங்களுக்கு எடுத்து வெக்கிற வேலைய தான் இயற்கை இப்போது செய்யுது… இந்த பாடத்த இயற்கை அடிக்கடி நடத்த வேண்டிய சூழ்நிலை மனுஷனால தான் ஏற்படுது, 

எந்த விலங்கும் தனக்காக காற்றை மாசுப்படுத்தல.. காலாற நடந்து போகுது, தண்ணிக்காக சண்டை போடல, ஞாயித்து கிழமை பிரியாணி வேணும் னு அடம் பிடிச்சு கறிக்கடையில் நடக்கற புனித கொலைகளுக்கு முன்னால கூட்டம் போடல….”


“புரியுது சார்”


“சக மனுசனுக்கும், இயற்கைக்கும் எந்த விதமான கெடுதலும் செய்யாதவன் இதை பத்தி கவலை பட வேண்டியதில்லை…”


“நோய் வந்தவன் என்ன பண்றது சார்? வராம இருக்க என்ன பண்றது? அதுக்கு உங்க ஜோதிடத்துல ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க...”


“புரியுமா னு தெரியல, சொல்றேன்..

1, ஜாதகப்படி மிதுன துலா கும்ப லக்னமா இருந்தா ரொம்ப கவனமா இருக்கணும்.

2, 6ம், 8ம், 12ம் அதிபதி தசா நடந்தா, அல்லது அந்த அதிபதி கடக வீடு, விருச்சிக வீடு, மீன வீட்டில் இருந்து தசா நடந்தா கவனம் அதிகம்,

3, மிதுன லக்னமா இருந்தா பெற்றோர் உடல் நிலையிலும், கடக லக்னமா இருந்தா கணவன்/மனைவி உடல் நிலையிலும், சிம்ம லக்னமா இருந்தா, குழந்தைகள் உடல் நிலையிலும் ரொம்ப கவனம் வேணும்.

4, 6ம் அதிபதி புதனோடோ, கடகத்துல கன்னியில இருந்தா ரொம்ப கவனம்.

5, இன்னும் நிறைய விதிகள் இருக்கு, ஆனா நல்லா மருத்துவ ஜோதிடம் தெரிஞ்சவங்களுக்கு தான் அது புரியும்.. "


“கொஞ்சம் புரியுது சார்..”


“ கொரனோ எப்ப முடியும் சார்”


“சுயக்கட்டுபாடு அதிகம் இருக்கற நாடுகள் ல சீக்கிரம் முடிவுக்கு வந்துடுச்சி, இங்க என்னைக்கு அது வருதோ அன்னைக்கு தான் முடியும், , ஏன்னா வைரஸ்க்கு ஜாதகமும் கிடையாது.. பாகுபாடும் கிடையாது.. பரப்பறதும் நாம தான், பாதிக்கபடுறதும் நாம தான்.. தெரிஞ்சோ தெரியாமலும் செய்த எல்லா தப்புக்கும் மனப்பூர்வமாக சரி பண்ணனும், குறைந்த பட்சம் ஒரு மரமாவது வளர்க்கணும்”


அவர் வீட்டு தெருவில் ஆம்புலன்ஸ் நுழைந்த போது மனசு குழைந்தது..


இறங்கி இரண்டடி நடந்தவர், திரும்பி வந்தார்..

“நல்லா இரு,, முன்னாடி எல்லாம் வயசுல பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கினோம், நல்லா இருந்தோம், இன்னைக்கு பெரியவங்க எல்லாம் அனாதை ஆசிரமத்துல இருக்காங்க. அவங்க புண்ணியத்துல ஆசிரமங்கள் நல்லா வளருது போல…” சொல்லி விட்டு நிதானமாக நடந்து உள்ளே போய் விட்டார்..


மகன் வந்து 2500 ரூபாய் நீட்ட, 

“வேணா சார், எம் பேர சொல்லி 50 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடு சார்.. கணேசன் சார்”


ஆம்புலன்ஸ் அடுத்த நோயாளியை தேடி அதிகப்பட்ச கருணையோடு புறப்பட்டது……


வேறென்ன…


நல்ல மழை பொழியட்டும். கொடிய நோய் சீக்கிரம் விலக இறைவனை கூட்டாக பிரார்த்திப்போம்...


குறிப்பு: யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை, ஜோதிடம் உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று ஒரு சக மனிதனாகவும், ஜோதிடனாகவும் எழுதுகிறேன்..


உங்கள் feedback க்கிற்காக என் வாட்ஸ் அப்பின் வாசல் 9444860460 எப்போதும் திறந்தே இருக்கிறது..

நன்றி


ஹரிஹரன்

ஸ்ரீ ஆதிஷங்கரா ஜோதிட மையம்.

பெரம்பூர், சென்னை

9444860460

Tuesday, May 18, 2021

 சிதம்பர   ரகசியம் !!


பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?


இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிரூபித்துக்  காட்டிவிட்டது.

ஓம் நமசிவாய

*யார் தருவார் இந்த அரியாசனம்?*

 🌹 *சிம்மாசனம்* 

--------------------------

 *யார் தருவார் இந்த அரியாசனம்?* 


காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார் குமரகுருபரர்.


சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.


"கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.


எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்" சொல்லிவிட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.


ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள். கோபமில்லாதவர்கள். எதிரே இருப்பவன் அரசனோ, அசுரனோ, அறிவிலியோ, ஆராய்ந்து அறிந்த பண்டிதனோ யாராயினும் தரக்குறைவாகப் பேசமாட்டார்கள்.


எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை. ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும். ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும்.


ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது. பல செல்வந்தர்களுக்கு இந்த எளிமை புரியாத விஷயமாக இருக்கிறது.


சற்று உயரமாக மேடை போட்டு... உலகமே தன் கீழ் என்கிற மமதை வந்துவிடுகிறது. ஆட்சியாளர் பலருக்கு இதுவே வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.


ஆட்சியில் அமர்வது என்பது இடையறாது தந்திரம், கணக்கில்லாத துரோகங்கள், கலவரம் ஊட்டும் வன்முறைகளால் நிகழ்வது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு இருந்தால்கூட அவனுக்கு நல்ல தூக்கம் என்பதில்லை. மூன்றையும் கொண்டவனுக்கு எவ்விதம் தூக்கம் வரும்.


ஆழ்ந்து தூங்காதவனிடம் அமைதி எப்படி குடிகொண்டு இருக்கும். அமைதியில்லாத எவனும் பிறரை எளிதில் அவமதிப்பான். ஆட்சியாளர்கள் சகலரையும் அவமானப்படுத்த இந்த அமைதியின்மையே காரணம்.


மறுநாள் விடிந்தது. காசி தேசத்துச் சான்றோர்கள் அவையில் கூடினார்கள். பாட்டுப் பாடுகிற வித்வான்களும், ஆடல் மகளிரும், அரபியில் கவிதை சொல்கிறவர்களும், அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்றுகூடினார்கள்.


"எங்கே அந்த மதுரைக் கிழவர்...?" நவாப் விசாரித்தார்.


"அவர் அரபி படிக்க போயிருக்கிறார்." யாரோ சொல்ல, சபை சிரித்தது.


"அப்படியா... ஆயுஸுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்..." மறுபடி சபை சிரித்தது.


"அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்." யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.


"அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே... வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."


"இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில் நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்.." ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.


"சில சவுக்கடிகள்..." ஒரு உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.


"ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."


"வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார். உம்முடைய அழுக்குத் துணிகளைச் சுமப்பார். அதுவரை பொறுத்திருங்கள்.


நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா..."


"ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.


வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது.


குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார்.


அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின.


அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான்.


"என்ன இது..." கத்தினான்.


"நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்."


"இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."


"இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிம்மம் இருக்கிறது. ஆனால், பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா..."


காலியான ஒரு ஆசனத்தில் உட்காரும் பொருட்டு அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான்.


ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. சிறுநீர் விட்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று. உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.


குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.


குமரகுருபரர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. முகச் சுருக்கங்கள் சிரித்தன. இதழ்க் கடைகள் சிரித்தன. காது வளையங்கள் சிரித்தன. அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.


நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம் செய்தான்.


"தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"


"காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும்."


"நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே."


"நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..."


"ஆமாம். பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று?"


"இறையருள்."


"எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."


"உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு."


"ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"


"ஒரு நொடியில் கொடுத்தான்."


"நீங்கள் மண்டியிட்டு வேண்டினீர்களா..."


'சகலகலாவல்லி மாலை' என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.


"மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.


கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..." நவாப் பணிவாகப் பேசினார்.


(எழுத்துச்சித்தர் பாலகுமாரன்)


🙏நன்றி கு. பண்பரசு

Thursday, May 13, 2021

 ""'குலதெய்வமே உன்னை கொண்டாடுவோம்.”””


உந்தன் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்லாட்டா

எனக்கு இந்த ஜென்மம் எடுத்து என்ன பயன் சொல்லாத்தா


நாடும் பக்தர் இடர்களைந்து, இன்னல் நீக்கி, துயர் துடைத்து, துன்பம் போக்கி, மனத்தில் இன்பம் அளிப்பவராம் ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியuவா திவ்ய திருவடிச் சரண் வேண்டுவது அன்றி வேறு ஒன்றில்லையே


குலதெய்வம் குறித்து காஞ்சி மகாபெரியவா விளக்கியுள்ளர். மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, விவசாயி ஒருவர், மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது.


வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ‘‘சாமி. ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

மகா பெரியவா அவரிடம், ‘‘குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். குலதெய்வமா. அப்படின்னா?” திருப்பிக் கேட்டார் அவர். ‘‘சரிதான். உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” என்றார்.

‘‘ஆமாம் சாமி. வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

‘‘உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?” என்று கேட்டார் பெரியவா.

‘‘ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

‘‘அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

‘‘ஏன் சாமி. அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

‘‘அப்படித்தான் வெச்சுக்கோயேன்” என்றார் பெரியவா.

‘‘என்ன சாமி நீங்க. ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?” என்றார் விவசாயி.

‘‘நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

‘‘அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!” என்று வெள்ளந்தியாய்க் கேட்டார்.

‘‘காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்னை மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத்தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

‘‘அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா. அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?” என்று குழப்பத்துடன் கேட்டார் விவசாயி.

‘‘நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, ‘‘சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

‘‘சபாஷ். அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவா!

‘‘சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே. எதுவுமே சொல்லலியே?”

‘‘அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே. பேச்சாயியை விட்டுடாதே!” என அருளினார் பெரியவா.

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காணத் திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

‘‘சாமி. நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க. இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார்.

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்கார விவசாயியிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து மகா பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வம். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ எனும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை

பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத் திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட!

ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் எனும் தெய்வ சாந்நித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள்.

காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சந்நிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

- மகா பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

“ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்ஞ் நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.”

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே. நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

காஞ்சி- மகா பெரியவா விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது