Wednesday, January 16, 2019

கணுப் பொங்கல் 16/01/2019 புதன்

நாளை கணுப் பொங்கல்

பொங்கலுக்கு மறுநாள் கணு வைக்கும் வைபவம். இது பெண்கள் செய்யும் சடங்கு. தங்களின் தாலி நிலைக்கவும் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழவும் புகுந்தவீடு கடன் மற்றும் தரித்திரத்தில் இருந்து விலகவும் ஐஸ்வரியம் பெருகி சுபிட்சம் பெருகவும் பிறந்த வீட்டின் சகோதரர்கள் வாழ்வில் உயரவும் பிரார்த்தனை செய்கிற அற்புத வேண்டுதல் இது.

முழுக்க முழுக்க பெண்களுக்கான வைபவம். பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். சிலர், கணவனிடம் மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

   கணுப்பிடி நோன்பு, உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதாக ஐதீகம்! இதை உணர்த்தும் விதமாக, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ எனும் சொலவடை கிராமங்களில் உண்டு.

  அதாவது, கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இதன் விளக்கம்!

 இந்த பண்டிகையையொட்டி, பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். அந்த நாளில், வீடே குதூகலமாகிவிடும்.

  வீட்டில் பிறந்த பெண், புகுந்த வீட்டில் பூஜை புனஸ்காரங்களுடன் வலம் வந்தால், அவள் சௌக்கியமாக இருக்கிறாள் என்று அர்த்தம். அப்படி புகுந்த வீட்டில் இருந்தபடி, உடன்பிறந்தானின் நலனுக்காக, விரதம் மேற்கொண்டால், சீரும் சிறப்புமாக வாழ்கிறாள் என்று பொருள். அப்படி, வீட்டுக்குப் பிறந்த பெண் வாழ்ந்தால்தான், உடன்பிறந்தானும் பிறந்த வீடும் சுபிட்சமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்!

கணுப்பொங்கலை, பெண்கள் சிரத்தையாகச் செய்யச் செய்ய, வீட்டாரின் கண்ணீரெல்லாம் கரைந்து காணாமல் போய்விடும் என்கிறார்கள் குருமார்கள்!

இரு வீட்டாரும் சிறப்புற கொண்டாடுவோம் காணும் பொங்கல்.

பொங்கலோ பொங்கல்!

No comments:

Post a Comment