Wednesday, January 16, 2019

கணுப் பொங்கல் 16/01/2019 புதன்

நாளை கணுப் பொங்கல்

பொங்கலுக்கு மறுநாள் கணு வைக்கும் வைபவம். இது பெண்கள் செய்யும் சடங்கு. தங்களின் தாலி நிலைக்கவும் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழவும் புகுந்தவீடு கடன் மற்றும் தரித்திரத்தில் இருந்து விலகவும் ஐஸ்வரியம் பெருகி சுபிட்சம் பெருகவும் பிறந்த வீட்டின் சகோதரர்கள் வாழ்வில் உயரவும் பிரார்த்தனை செய்கிற அற்புத வேண்டுதல் இது.

முழுக்க முழுக்க பெண்களுக்கான வைபவம். பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். சிலர், கணவனிடம் மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

   கணுப்பிடி நோன்பு, உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதாக ஐதீகம்! இதை உணர்த்தும் விதமாக, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ எனும் சொலவடை கிராமங்களில் உண்டு.

  அதாவது, கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இதன் விளக்கம்!

 இந்த பண்டிகையையொட்டி, பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். அந்த நாளில், வீடே குதூகலமாகிவிடும்.

  வீட்டில் பிறந்த பெண், புகுந்த வீட்டில் பூஜை புனஸ்காரங்களுடன் வலம் வந்தால், அவள் சௌக்கியமாக இருக்கிறாள் என்று அர்த்தம். அப்படி புகுந்த வீட்டில் இருந்தபடி, உடன்பிறந்தானின் நலனுக்காக, விரதம் மேற்கொண்டால், சீரும் சிறப்புமாக வாழ்கிறாள் என்று பொருள். அப்படி, வீட்டுக்குப் பிறந்த பெண் வாழ்ந்தால்தான், உடன்பிறந்தானும் பிறந்த வீடும் சுபிட்சமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்!

கணுப்பொங்கலை, பெண்கள் சிரத்தையாகச் செய்யச் செய்ய, வீட்டாரின் கண்ணீரெல்லாம் கரைந்து காணாமல் போய்விடும் என்கிறார்கள் குருமார்கள்!

இரு வீட்டாரும் சிறப்புற கொண்டாடுவோம் காணும் பொங்கல்.

பொங்கலோ பொங்கல்!

Sunday, January 6, 2019

தனிஷ்டா பஞ்சமி 6/01/2019 ஞாயிறு

தனிஷ்டா பஞ்சமி
😒
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. .
சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள்.தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது.
சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில்
இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள்.
தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன.

ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள்.
கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேத ஆகம பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.