Sunday, December 16, 2018

பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு...*16/12/2018 ஞாயிறு

🌼🌼🌼🌼🍁🌼🌼🌼🌼

*பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு...*

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.

அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். 'பீடு' என்றால் 'பெருமை' என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்றானது.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.

மார்கழி முப்பது நாட்களும்  பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.
விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

*பூ வைப்பது ஏன்?*

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல் யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.

அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு சொல்லும செய்தி.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.

மார்கழி என்றால் அழகிய கோலங்கள், அருமையான காலை வேளைக் குளியல் ,அற்புதக் கடவுள் தரிசனம் எனப் பல சிறப்புகள் கொண்ட மாதம் இது.

மார்கழி மாதம் தக்ஷிணாம்யான  காலம் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

மிருகசீருஷ நக்ஷத்திரம் அடிப்படையில் இதற்கு மார்கழி என்ற பெயர் வந்தது.

இந்த மாதத்திற்கு தனுர் மாதம் எனவும் பெயருண்டு.

மார்கழி பகவான் விஷ்ணுவை போற்றுவதற்காக உண்டான மாதம். மார்கழியை தனக்கு உரிய மாதமாக ஸ்ரீ ஹரியே கூறுகிறார்.

ஆண்டாளைப் போற்றும் விதமாக மார்கழி மாதத்தில் திருப்பாவை சொல்வது வழக்கமாக உள்ளது. ஆண்டாள் ஆழ்வார்களில் ஒருவர்.ரெங்கமன்னார் எனப்படும் மகாவிஷ்ணுவின் கரம் பிடிக்க நோன்பு இருந்தவர்.மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பாவை பாடி பாவை நோன்பு இருந்து கூடாரவல்லி (மார்கழி 27) அன்று இறைவனிடம் கலந்தவர்.

.மாணிக்கவாசகர் இறைவன் சிவபெருமானின் சிறந்த பக்தர். அவர் சிவனை திருவெம்பாவை பாடல்கள் மூலம் துதி செய்கிறார். சிவாலயங்களில் மார்கழி மாதம் அதிகாலை திருவெம்பாவை முழங்குவது வழக்கம்.

மார்கழி தேவர்கள் கடவுளை வணங்கும் நேரம். தேவர்களுக்கு நமது ஒரு வருடம் ஒரு நாள் கணக்காகும். மார்கழி மாதம் அவர்களுக்கு பிரம்ம முஹுர்த்தமாக அமைகிறது.அதிகாலை நான்கரை மணியிலிருந்து  ஆறு மணி வரை அமையும் இந்த நேரம் அவர்கள் கடவுளைப் போற்றும்   நேரமாகும்.

 தூய்மையான ஆக்சிசன் நிறைந்த காற்றை கோலமிடும் போதும், கோயில் செல்லும் போதும் மார்கழியில் மக்கள் சுவாசிக்கிறார்கள். நமது  பூமி ஓஜோன் லேயர் அருகில் இருப்பதுதான் இதற்கு காரணம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

No comments:

Post a Comment