Monday, December 24, 2018

இன்று சங்கடஹர சதுர்த்தி 25/12/2018 செவ்வாய்

இன்று சங்கடஹர சதுர்த்தி. வினை தீர்க்கும் விநாயகரை வணங்கி அவர் அருள் பெறுவோம்.

  இறைவனுக்கு செய்யும் அபிஷேக பலன்கள்:

1) அருகம்புல் ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான  பொருட்கள்
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்
.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்
.
7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.

9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.

13) கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர
ப்ராப்தி கிட்டும்.

14) ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான
தாரித்ரியம் நசிக்கும்.

15) ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப
கிடைக்கும்.

16) வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

17) அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும்
தீர்க்காயுள் கிட்டும்.

18) திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம்
உண்டாகும்.

19) கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள்
இல்லாமல் போவர்.

20) நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி
கிட்டும்.

21) கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.

22) நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம்,
கோவ்ருத்தி கிட்டும்.

23) மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

24) மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

25) இளநீர், எலுமிச்சை சாறு, தயிர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய பலப்பல ஐஸ்வர்யங்களும் பெறலாம்.

பக்தியோடு இறைவனை வழிபட இறையருள் கூடும்.🙏💐👏

Saturday, December 22, 2018

ஆருத்ரா தரிசனம் 23/12/2018 ஞாயிறு

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

 ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

 இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்
திருச்சிற்றம்பலம்... 

வரும் 23.12.2018 ஆருத்ரா தரிசனம்......🙏🌙🔱 சிவசிவசிவ சிவாயநம திருச்சிற்றம்பலம்

Wednesday, December 19, 2018

வாழ்வின் நெறிமுறைகள் 19/12/2018 புதன்

வாழ்வின் நெறிமுறைகள் பற்றி இந்து தர்மசாஸ்திரம் கூறுவது:

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால்இ உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவதும், உடலுறவு கொள்வதும் கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

50.தன்னால் முடிந்த வரை பிறருக்கு நற்சொல்லாலும், செயலாலும் உதவி புரிதல்.

லோகாஸ் ஸமஸ்தான் சுகினோ பவந்து!

Sunday, December 16, 2018

ஆண்டாள் வாழ்க்கைக் குறிப்பு 17/12/2018 திங்கள்


ஆண்டாள் வாழ்க்கைக் குறிப்பு
            ஆண்டாள்
அன்று கலி 98 வது நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம்
சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக் கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை”
என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும்
ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும் வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் துளசி
இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத
நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு
கட்டிய மாலையைச் சூடுவாள்.
கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி பல நாள் நடந்தது.

ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி “இப்படிச் செய்யலாமா? எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கோபத்துடன் கேட்டார்.

அவர் அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை. அன்றிரவு எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி “இன்று நமக்கு மாலை சாத்தாதது ஏன்?” என்றார். ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச் சொல்லி மன்னிக்க வேண்டினார். இறைவனோ “அவள் சூடிய மாலையே
நல்ல மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” என அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப் பூமிப்பிராட்டியாகவே கருதலானார்.
சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும் மார்கழி நீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாய்ச்சியார்
திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினார்.

மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு
மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை
மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண
நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,
திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.  இவற்றுள்
அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக் காணலானாள்.

ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்
திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்
கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப்
பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச்
சொன்னார்கள்.
ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில்
உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.
ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட
பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”
ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை
அடைந்தனர்.

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார்
வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க
மறைந்து போனாள்.
அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில் உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.

கோதை நாச்சியார் ஜாதகம். தங்களது வீட்டில் பூஜையறையில் இதனை வைத்து வழிபாடு செய்து வர திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஐதிகம்.

     கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
     சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால்
     நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர்
     வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

     பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
     வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ்
     ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
     வையம் சுமப்பது வம்பு

     திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
       திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
     பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
       பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
     ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
       உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
     மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
       வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

 ஆண்டாள் திருவடிகளே சரணம்

பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு...*16/12/2018 ஞாயிறு

🌼🌼🌼🌼🍁🌼🌼🌼🌼

*பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு...*

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.

அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். 'பீடு' என்றால் 'பெருமை' என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்றானது.

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.

மார்கழி முப்பது நாட்களும்  பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.
விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

*பூ வைப்பது ஏன்?*

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல் யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள். இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.

அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு சொல்லும செய்தி.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.

மார்கழி என்றால் அழகிய கோலங்கள், அருமையான காலை வேளைக் குளியல் ,அற்புதக் கடவுள் தரிசனம் எனப் பல சிறப்புகள் கொண்ட மாதம் இது.

மார்கழி மாதம் தக்ஷிணாம்யான  காலம் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

மிருகசீருஷ நக்ஷத்திரம் அடிப்படையில் இதற்கு மார்கழி என்ற பெயர் வந்தது.

இந்த மாதத்திற்கு தனுர் மாதம் எனவும் பெயருண்டு.

மார்கழி பகவான் விஷ்ணுவை போற்றுவதற்காக உண்டான மாதம். மார்கழியை தனக்கு உரிய மாதமாக ஸ்ரீ ஹரியே கூறுகிறார்.

ஆண்டாளைப் போற்றும் விதமாக மார்கழி மாதத்தில் திருப்பாவை சொல்வது வழக்கமாக உள்ளது. ஆண்டாள் ஆழ்வார்களில் ஒருவர்.ரெங்கமன்னார் எனப்படும் மகாவிஷ்ணுவின் கரம் பிடிக்க நோன்பு இருந்தவர்.மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பாவை பாடி பாவை நோன்பு இருந்து கூடாரவல்லி (மார்கழி 27) அன்று இறைவனிடம் கலந்தவர்.

.மாணிக்கவாசகர் இறைவன் சிவபெருமானின் சிறந்த பக்தர். அவர் சிவனை திருவெம்பாவை பாடல்கள் மூலம் துதி செய்கிறார். சிவாலயங்களில் மார்கழி மாதம் அதிகாலை திருவெம்பாவை முழங்குவது வழக்கம்.

மார்கழி தேவர்கள் கடவுளை வணங்கும் நேரம். தேவர்களுக்கு நமது ஒரு வருடம் ஒரு நாள் கணக்காகும். மார்கழி மாதம் அவர்களுக்கு பிரம்ம முஹுர்த்தமாக அமைகிறது.அதிகாலை நான்கரை மணியிலிருந்து  ஆறு மணி வரை அமையும் இந்த நேரம் அவர்கள் கடவுளைப் போற்றும்   நேரமாகும்.

 தூய்மையான ஆக்சிசன் நிறைந்த காற்றை கோலமிடும் போதும், கோயில் செல்லும் போதும் மார்கழியில் மக்கள் சுவாசிக்கிறார்கள். நமது  பூமி ஓஜோன் லேயர் அருகில் இருப்பதுதான் இதற்கு காரணம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

Wednesday, December 5, 2018

மூலம் நட்சத்திரம் வரமா… சாபமா..5/12/2018 புதன்

மூலம் நட்சத்திரம் வரமா… சாபமா..

ஆண் மூலம் அரசாளும்,
பெண் மூலம் நிர்மூலம்v

பலர் நினைப்பது என்னவென்றால்

மூலம் நட்சத்திரத்தில் ஆண்கள் பிறந்தால் நல்லது….
பெண்கள் பிறந்தால் சிறப்பானது இல்லை….

இது சரியான பழமொழி அல்ல..

ஆண் மூலம் அல்ல,
ஆனி மூலம்….

இது என்ன புதுக்கதை…

ஆனி மாதம் மற்றும் புரட்டாசி மாதம்
இந்த இரண்டு மாதங்கள் புதன் பகவானுக்கு உரிய மாதங்கள்…

ஆனி மாதத்தை மிதுன மாதம் என்றும்,
புரட்டாசி மாதத்தை கன்யா மாதம் என்றும் குறிப்பிடுவர்.

சரி,
விஷயத்திற்கு வருவோம்..

ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
ஆண்கள் ஆனாலும் சரி
பெண்கள் ஆனாலும் சரி
ஒரு முதலாளியாக இருப்பர்
அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தில் பெரிய பதவிகளில் இருப்பார்கள்.,

இவர்களது பேச்சை கேட்டு
அதற்கு கீழ்ப்படிந்து
பலர் வேலை செய்து வருவார்கள்.

இதையே,
ஆனி மூலம் அரசாளும்…
என்பர்

பெண் மூலம் அல்ல…
பின் மூலம்…
அதாவது,
முற்கூறிய படி…
புதன் பகவானின் அடுத்த மாதம் புரட்டாசி மாதம்…

இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
(நவராத்திரியில் தான் இந்த மூலம் நட்சத்திரம் வரும். இந்த தினத்தில் தான் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் அதாவது எழுந்தருள செய்வார்கள்.)
ஆண்கள் ஆனாலும் சரி
பெண்கள் ஆனாலும் சரி
(துர்கா, லஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அருள் பெற்றவர்கள்)
தமக்கு ஏற்படும் பிரச்சனைகளை முற்றிலுமாக அழித்துவிடுவார்கள்.
அதாவது,
பிரச்சனைகளை
நிர்மூலம் (ஒன்றும் இல்லாமல்) செய்து விடுவார்கள்.

இதையே,
பின் மூலம் நிர்மூலம்…. என்கிறோம்.

ஆனி மூலம் அரசாளும்.,
பின் மூலம் நிர்மூலம்….

சர்வே ஜனா சுகினோ பவந்து!

Tuesday, December 4, 2018

இனிய இரவு
இனிக்கும் நினைவு
நினைக்கும் மனது
காணும் கனவு
நெஞ்சுக்கு நிம்மதி
இறைவன் சன்னதி
நல் உறக்கம்
விடியல் வரைக்கும்
இரவின் மடியில் தவழும் உங்களை இந்த வீடியோ    வைக்கும்.
இரவு வணக்கம்👏🙏😞

Monday, November 12, 2018

ஷஷ்டி விரதம் ஏன் இருக்க வேண்டும்? 12/11/2018 திங்கள்

ஷஷ்டி விரதம்
(08.11.18 - 13.11.18)

ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் !

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.

நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.

இது தான் அந்த மூன்று சக்தி

1 - செரிமான சக்தி
2 - இயக்க சக்தி
3 - நோய் எதிர்ப்பு சக்தி

இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'. கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது 'சஷ்டி விரதம்' தான்.

உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.

'செரிமான சக்தி' தான் 'முருகனின் தாய்'. 'நோய் எதிர்ப்பு சக்தி' தான் 'முருகன்'. 'நோய்' தான் 'அரக்கன்'. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.

இந்த விழாவில் எப்படி 'முருகப்பெருமான்' தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.

எப்படி ஒவ்வொரு நாளும் 'முருகன்' சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்' இருந்தாலும் வதம் செய்துவிடும்.

உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் 'உண்ணா நோன்புடன்' அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.

சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?
-----------------------------------------------------

1 - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.

2 - சமய முறைப்படி இருக்கலாம்.

3 - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.

4 - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.

5 - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.

இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.

பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.

இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.

திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.

இறைவன் சூரிய அடுப்பை கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.

வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.

உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

நோன்பின் போது என்ன நடக்கலாம் ?
--------------------------------------------

ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.

1 - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.

2 - மலம் கருப்பாக வெளியேறலாம்.

3 - சளி வெளியேறலாம்.

4 - உடல் ஓய்வு கேட்கலாம்.

5 - காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)

6 - வலிகளை உணரலாம்.

என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?
----------------------------------------

1 - அதிக உடல் எடை சீராகும்

2 - முகம் பொழிவு பெறும்

3 - கண்ணில் ஒளி வீசும்

4 - சுறுசுறுப்பு அதிகரிக்கும்

5 - இரத்தம் தூய்மை பெறும்

6 - தோலின் நிறம் சீராகும்

7 - மன உளைச்சல் குறையும்

8 - கவலை, பயம், கோபம் குறையும்

9 - புத்துணர்வு கிடைக்கும்

10 - உடல் பலம் பெறும்

11 - மன அமைதி பெறும்

12 - ஆழ்ந்த தூக்கம் வரும்

ஆக மொத்தத்தில்

உடலில் ஆரோக்கியமும் !
எண்ணத்தில் அழகும் !
மனதில் நிம்மதியும் !

கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.

கந்தன், அரக்கனை அழிப்பது போல்
உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.

நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிபினைந்தவை. பினைக்கப்பட்டவை.

உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

உலகில் மிகச்சிறந்த மருந்துவர் - உங்கள் உடல்.

உலகில் மிகச்சிறந்த மருத்துவம் - உண்னாநோன்பு.

உண்ணாநோன்பு இருப்போம்!
ஆரோக்கியமாக வாழ்வோம்!
ஓம் சரவணபவ!

Friday, November 2, 2018

தீபாவளி பூஜை முறை.2/11/2018 வெள்ளி

தீபாவளி பூஜை முறை.
அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் – இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி… அஷ்டலட்சுமியே போற்றி… குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும்.

ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நாணய வழிபாடு:

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார்.

சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வெகு விசேஷம்!
நரக சதுர்த்தசி: மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியை சிவராத்திரி நாளாக எடுத்துக் கொள்கிறோம். கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இவ்வேளை நரக சதுர்த்தசி எனப்படுகிறது. சிவராத்திரி சைவத்திற்கு உரிய நாள். நரக சதுர்த்தசி வைணவத்திற்குரிய நாள். இதனால் சதுர்த்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.

அருளும் பொருளும் அள்ளித் தரும் அன்னபூர்ணா ஸ்தோத்திரம்: அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு.
நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷõம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ
பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷõத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே… அன்னபூரணியே… பிச்சையைக் கொடு.

ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். அனுதினமும்

கிருஷ்ணரை வழிபடுவோம்:

 தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும். பெருமாளுக்கு முராரி என்ற திருநாமமும் ஒரு அசுரனின் பெயரால் ஏற்பட்டது. நரகாசுரனைக் கொல்ல கிருஷ்ணர் சென்ற போது, நரகாசுரனின் தளபதியான முரன் போருக்கு வந்தான். ஐந்து தலை கொண்ட அசுரன் இவன். அவனை அழிக்க கிருஷ்ணர் சக்ராயுதத்தை ஏவினார். சக்கரம் ஐந்து தலைகளையும் அறுத்தெறிந்தது. முரனைக் கொன்றதால் பெருமாளுக்கு முராரி என்ற பெயர் ஏற்பட்டது.

வளம் தரும் குபேரலட்சுமி:

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி.தீபாவளியன்றோ, அதற்கு முந்தியநாளோ குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். தீபாவளி திருநாள் நீங்கலாக வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை சுக்கிரஓரை நேரம் மற்றும் திரிதியை திதிகளில்,குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்தநன்மை தரும். வேதமந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் ஏழாம்பாடலில், லட்சுமி குபேரனோடு வீற்றிருந்து செல்வவளம் அருள்வது பற்றி கூறுவதைப் படிக்கலாம்.

அம்மையப்பனின் அருள் கிடைக்கும்:

சிவபக்தரான பிருங்கி என்ற முனிவர், சக்தியாகிய தன்னை நீக்கி சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றதால், மனம் கலங்கினாள் உமையவள். சிவன் வேறு சக்தி வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பியவள், பூலோகத்தில் கவுதம மகரிஷி ஆசிரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கவுதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கவுதம மகரிஷி. உமையவளும் வெகு சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்து வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி தந்து, தனது திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். உமாதேவி கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கவுரிதேவியாகிய உமையம்மை போற்றிய விரதம் ஆதலால் கேதார கவுரிவிரதம் என்றும் அழைப்பர். இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதை 5 வகையாக அனுஷ்டிப்பார்கள்.

இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பது உத்தமம். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமி துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் ஆகும். அதேபோன்று ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பது உண்டு. இந்த விரதத்தை சுமங்கலிகளே கடைப்பிடிக்க வேண்டும். முற்காலத்தில், நீர்நிலைகளின் கரைகளில் – ஆலமரத்தடியில் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜிப்பார்கள். விரத தினத்தன்று விநாயகரை வழிபட்டு, ஆதி ரிஷிகளான பிருங்கி, கவுதம முனிவர்களையும் வணங்கி சிவபூஜையை துவங்குவர். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்தும், 21 என்ற எண்ணிக்கையில் பட்சணங்கள் படைத்தும் வழிபடுதல் விசேஷம். பூஜையின் முக்கிய அம்சம் நோன்புச்சரடு. லிங்க மூர்த்தத்தின் முன் வைத்து பூஜிக்கப்படும் நோன்புச்சரடை மூத்த சுமங்கலிகள் மற்றவர்களுக்குக் கட்டிவிட வேண்டும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர, தாம்பத்தியம் சிறக்க, மாங்கல்ய பலம் பெருக, நினைத்தது நினைத்தபடி நிறைவேற வரம் அருளும் வல்லமை இந்த விரத பூஜைக்கு உண்டு.

இறுதி நேரத்தில்தான் நரகாசுரனுக்கு அவனுடைய பிறப்பு ரகசியம் உணர்த்தப்பட்டது. அதாவது, ஒரு காலத்தில் கடலுக்குள் பூமி மறைக்கப்பட்டிருந்தபோது மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, கடலுக்குள் புகுந்து பூமியை வெளிக்கொண்டு வந்தார். அச்சமயம் அவருக்கும் பூமாதேவிக்குமான சங்கமத்தில்தான் நரகாசுரன் பிறப்பெடுத்தான்! மகாவிஷ்ணுவின் அவதாரமே கிருஷ்ண பகவான், பூமாதேவியின் அம்சம்தான் சத்யபாமா, இந்த உண்மைகளைத் தன்னுடைய உயிர் பிரியும் தருவாயில் தான் நரகாசுரன் தெரிந்துகொண்டான்.

தன்னுடைய ஜனனத்துக்கு காரணமான பெற்றோர்களாலேயே குறிப்பாக தன்னுடைய தாயின் கையாலேயே நரகாசுரனுக்கு மரணம் என்று விதி அமைப்பு இருந்தது! ஆகவேதான், கிருஷ்ண பகவான் ஒரு மயக்க நாடகத்தை நடத்தி, பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவின் ஆயுத்தாலேயே நரகாசுரனுக்கு உயிரிழப்பு ஏற்படும்படியாகச் செய்தார்.

கிருஷ்ண பகவானினிடமும், சத்யபாமாவிடமும் பாவ மன்னிப்பு வேண்டிய நரகாசுரன், தன்னுடைய மறைவு நாளை உலகத்தில் உள்ள மக்கள் நினைவு நாளாக மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று வரம் வேண்டினான். கிருஷ்ண பகவான் அவ்வாறு வரம் அருளியபடிதான், ஐப்பசி மாதம் சதுர்த்தி திதியில் பின்னிரவு கடந்து நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்து, பொழுது புலர்ந்ததும் தீபாவளி கொண்டாடப்படும் வழக்கம் உண்டாகியது!

கிருஷ்ண பிரான் அவதாரம் செய்தது துவாபர யுகத்தில். அதற்கு முன் யுகமான திரேதா யுகத்திலேயே ராம பிரான் இராவணுடன் போரிட்டு ஜெயித்த நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிற்து. ஆகவே, அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலை நாட்டப்பட்ட வெற்றித் திரு நாளாகவே தீபாவளி விளங்குகிறது!

1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
108 குபேரா போற்றி போற்றி

நன்றி

ஆன்மீக முரசு & ஆன்மீக  வரலாறு  2018 .

Tuesday, October 23, 2018

அன்னாபிஷேகம் ஸ்பெஷல் ! 23.10.18 செவ்வாய்கிழமை

அன்னாபிஷேகம் ஸ்பெஷல் !

24.10.18 புதன்கிழமை

ஐப்பசி பௌர்ணமி - ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 அமுது படைக்கும்அந்தஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

ஆகமத்தில் அன்னாபிஷேகம் :

 ஆலயவழிபாட்டில்பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க  உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரியஅன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

அது என்ன சாபம்?தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள்.

 முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.

அன்னத்தின் சிறப்பு :

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம்
ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள்
என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது..

சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன். இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன். தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி. கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம்.

அன்னாபிஷேகம் செய்யும் முறை:

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு
தடையின்றிக் கிடைக்கும் என்பதை
இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது. நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால்,               பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னம்  சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் .இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

அன்னாபிஷேகப் பலன்கள்:

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் குறித்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னத்தை அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.

வியாபாரத்தில் பிரச்னை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏற்றது இது. சில குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போகும். அந்தக் குழந்தைகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் எல்லாம் நன்றாக நினைவில் நிற்கும்.

வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்யாதவர்கள் இல்லை செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேக தரிசனம் செய்து பிரசாதம் உண்டு, சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

நீண்ட நாடளாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும்.
பொதுவில் சிவப் பிரசாத அன்னத்தை உண்போர்க்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும், தன் நம்பிக்கையும் கை வரப் பெறும். அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அன்னாபிஷேகம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. பாரம்பரியச் சிறப்புடையது என்பது நன்று விளங்குகிறது.!

🐜🐜சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான தவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த
சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் (வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் ) கண்டு தரிசித்து,ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

திருச்சிற்றம்பலம் !!!