Sunday, November 23, 2025

ஒரு கிரகத்தோட சைஸை முதன்முதலா கணிச்சவன்

 ஒரு கிரகத்தோட சைஸை முதன்முதலா கணிச்சவன்



சுமார் 2,200 வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு மனுஷன் ஒரு குச்சியையும் நிழலையும் வச்சு பூமியோட சைஸை அளந்தான் பாருங்க!

மூணாம் நூற்றாண்டுல, எகிப்துல இருந்த அலெக்சாண்டிரியான்னு ஒரு ஊர்ல எரடோஸ்தனிஸ்ன்னு ஒருத்தன் இருந்தான்.

சில பேரு அவனை "பீட்டா"ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கலாம். ஏன்னா அவன் எதுலயுமே ரெண்டாவதா இருப்பானாம். ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் அவன் தான் நம்பர் ஒன்!

வான சாஸ்திரி,
பூகோள சாஸ்திரி, தத்துவவாதி,
கவிஞன்,
சரித்திர ஆசிரியர்,
கணித மேதை, அலெக்சாண்டிரியாவுல இருந்த பெரிய நூலகத்தோட தலைவன்...
அடேங்கப்பா! ஒரு மனுஷன் இவ்வளவு விஷயத்துல கெட்டிக்காரனா?

நம்ம மறுமலர்ச்சிக் காலத்துக்கு எத்தனையோ வருஷம் முன்னாடியே இப்படி ஒருத்தன் இருந்திருக்கான் பாருங்க.

ஒரு நாள், ஒரு சுருள்ல அவன் படிச்சான்: சியென்னேன்னு (இப்போதைய அஸ்வான்) ஒரு ஊர்ல, ஜூன் 21ஆம் தேதி, அதாவது வெயில் காலம் ஆரம்பிக்கிற அன்னிக்கு, மத்தியானம் ஒரு குச்சியை நேரா நட்டு வச்சா நிழலே விழுகாதாம். சூரியன் அப்படியே நேருக்கு நேரா மேல இருக்குமாம்.

ஆனா, அதே நாளுலயும் அதே நேரத்துலயும், அலெக்சாண்டிரியாவுல ஒரு குச்சியை நட்டு வச்சா நிழல் விழுந்துச்சாம்.

மத்தவங்க இத பெருசா எடுத்துக்கலை. ஆனா எரடோஸ்தனிஸ் இதுல ஒரு பெரிய ரகசியத்தை கண்டுபிடிச்சுட்டான்!
அவன் யோசிச்சான்:
பூமி தட்டையா இருந்தா, சூரிய வெளிச்சம் ரெண்டு குச்சியிலயும் ஒரே மாதிரிதானே விழுகும்? அப்போ நிழலும் ஒரே மாதிரிதானே இருக்கணும்? ஆனா அது வேற வேற மாதிரி இருக்கே!

இதுக்கு என்ன காரணம்?
பூமி வளைஞ்சிருக்கறது மட்டும்தான் காரணம்!

அலெக்சாண்டிரியாவுல விழுந்த நிழலோட கோணத்தை அவன் அளந்தான்.

அது சரியா 7 டிகிரியாம். அதாவது ஒரு வட்டத்துல 1/50 பங்கு!

சியென்னேவுக்கும் அலெக்சாண்டிரியாவுக்கும் நடுவுல இருக்கற தூரத்தை அளக்க ஒருத்தரை அனுப்பினான்:
அது கிட்டத்திட்ட 800 கிலோமீட்டர் இருந்துச்சாம்.

அப்புறம் அவன் கணக்குப் போட்டான்:
800 கி.மீ. × 50 = 40,000 கி.மீ. – இதுதான் பூமியோட சுற்றளவு!
ஆச்சரியமா இருக்குல்ல? அவன் போட்ட கணக்கு எவ்வளவு துல்லியமா இருந்துச்சுன்னு பாருங்க!

அவன் கிட்ட செயற்கைக்கோள் இல்ல. டெலஸ்கோப் இல்ல. கால்குலேட்டர் இல்ல.
ஆனா அவன்கிட்ட இருந்தது என்ன?

நல்லா கவனிச்சான், ஏன் ஏதுன்னு கேள்வி கேட்டான். அவ்வளவுதான்!

ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட சைஸை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்!

©️ Carl Sagan
#பூமி #அறிவியல் #வரலாறு #ஆச்சரியம் #தமிழ்தேசம் #சயின்ஸ் #அலெக்சாண்டிரியா #எரடோஸ்தனிஸ் #நிழல் #குச்சி #கணிதம் #வானியல் #புவியியல் #தத்துவம் #கவிதை #நூலகம் #அறிவு #முயற்சி #வெற்றி #சாதனை










Friday, November 14, 2025

தனிஷ்டா பஞ்சமி'

 தனிஷ்டா என்பது ஜோதிடத்தில் "அவிட்டம்" நட்சத்திரத்தைக் குறிக்கிறது, 




மேலும் 'தனிஷ்டா பஞ்சமி' என்பது அவிட்டம், சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நட்சத்திரங்களில் ஏற்படும் மரணத்தைக் குறிக்கிறது. இந்த ஐந்து நட்சத்திரங்களையும் 'தனிஷ்டா பஞ்சமி' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நட்சத்திரங்களில் ஒரு மரணம் நிகழ்ந்தால், அது இறந்த ஆன்மா மேலுலகம் செல்வதற்கான தடையை ஏற்படுத்தும் 'அடைப்பு' எனும் தோஷத்தை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது. 

தனிஷ்டா: "அவிட்டம்" நட்சத்திரத்தைக் குறிக்கும்.

தனிஷ்டா பஞ்சமி: தனிஷ்டாவுடன் மற்ற நான்கு நட்சத்திரங்களான சதயம், பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவற்றையும் சேர்த்து குறிப்பிடுவது.

அடைப்பு (தனிஷ்டா பஞ்சமி): இந்த நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் மரணம் ஏற்பட்டால், அது இறந்த ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் செல்லும் வழியை அடைத்துவிடும் என்று நம்பப்படுகிறது.

விளைவுகள்: இந்த அடைப்பு தோஷம், அந்த வீட்டில் அடுத்த ஒரு வருடத்திற்குள் தொடர் மரணங்களையோ அல்லது மரணத்திற்கு சமமான கண்டங்களையோ ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

பரிகாரங்கள்: இந்த தோஷத்திற்கான பரிகாரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

*தனிஷ்டா பஞ்சமி*


*தனிஷ்டா பஞ்சமி என்றால்* 13நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் மேலுலகம் செல்ல ஏற்படும் தடை ஆகும்.

அதற்காக முன்பு வீட்டை பூட்டி வைப்பார்கள்.சிலர் உடலை பின்புறம் வழியே எடுத்து செல்வார்கள்.சிலர் கூறையை பிரித்து எடுத்து செல்வார்கள்.

இப்போது அது அவ்வளவாக நடைமுறையில் இல்லை

அவிட்டம்,சத்யம்,பூரட்டாதி,உத்திரட்டாதி---6மாதம்

ரோகிணி,4மாதம்

கார்த்திகை,உத்திரம். 3மாதம்

மிருகசீரிஷம்,புனர்பூசம்,சித்திரை,விசாகம்,உத்ராடம். 2மாதம்

மேற்கூறிய நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு(தடை) அதன்படி இருக்கும்.


அதற்கு பரிகாரம் வெங்கலகிண்ணத்தில் நல்லெண்ணெய் தானம் செய்து அந்த அடைப்பு காலம் வரை தினமும் இறைவனுக்கு தீபம் காட் டி நிவேதனம் செய்யவேண்டும்.

சில சமயங்களில் ஆவிஉருவில் பயம் காட்டுவார்கள்.என கூறப்படுகிறது.


கருடபுராணத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது.

சூரியன் 3 நட்சத்திரங்கள் 

செவ்வாயின் 3 நட்சத்திரங்கள்

குருவின் 3 நட்சத்திரங்கள்

சத்யம் உத்ரட்டாதி ரேவதி ரோகிணி ஆகியன 

ஆக 13 நட்சத்திரங்கள் இதில் சேரும்.


மேலும்  அடைப்பு நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் அந்த ஆத்மாக்கு நிறைவேறா ஆசை ஒன்று இருக்கும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை...

Saturday, November 8, 2025

கிரக லீலா டிவி

 

*ஜோதிடம் மற்றும் ஜாமக்கோள் பிரசன்னம் சார்ந்த வீடியோக்கள் எமது கிரக லீலா டிவி யூடியூப் சானலில் பார்க்கலாம்*

https://youtube.com/@grahaleela5195?si=LLq7tc2iVR17X0Ea



இரண்டாம் திருமண அமைப்பு* யாருக்கு?

 *இரண்டாம் திருமண அமைப்பு*



 ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் ராகு கேதுக்கள் போன்றவைகள் இருந்து. பதினோராம் இடம் குரு அல்லது சுக்கிரனின் பார்வை பதினோராம் அதிபதி ஆட்சி இது போன்ற அமைப்புகள் இரண்டாம் திருமணம் அமைப்பை கொடுக்கும்.


கணவனை இழந்த பெண்ணிற்கு இரண்டாம் திருமண அமைப்பு ஏழாம் இடம் கெட்டு பதினோராம் இடம் பலமாக இருக்கும்.


 பொதுவான விதிகளில் ஏழாம் அதிபதி பதினோராம் இடத்திலும் 


 பதினோராம் அதிபதி ஏழாம் இடத்திலோ 


 இரண்டாம் அதிபதி பதினோராம் இடத்திலோ அல்லது 


 பதினோராம் அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தாலோ இரண்டாம் திருமண அமைப்பு உண்டாகும்.

Wednesday, November 5, 2025

ஐப்பசி அன்னாபிஷேகம் 5/11/2025 புதன்

 



ஐப்பசி அன்னாபிஷேகம் என இன்று கொண்டாடப்படும் வழிபாட்டின் தாத்பரியம் ஆழமானது, மிக மிக ஞானமானது..

அது வெறுமனே சோற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு மகிழும் உணவுப் பண்டிகை அல்ல, அன்னதானம் என கொடுக்கும் அன்றாட மரபும் அல்ல‌.

அதன் தாத்பரியமும் ஆழ்ந்த போதனையும் நுணுக்கமானது.

அன்னமய கோசம் எனும் உணவால் வாழும் இவ்வுடலைத் தாண்டி ஆத்மத்தை உணர்ந்து, இதர நான்கு நிலைகளைக் கடந்து ஆனந்தமய கோசம் எனும் இறைநிலைக்கு, இறைவனோடு கலக்கும் நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இப்பண்டிகையின் போதனை.

சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை, அதாவது பக்குவப்பட்ட நிலை. உண்பதற்கு தயாரான பக்குவத்துக்கு வந்துவிட்ட அரிசியினை சோறு என்கின்றோம், அது அரிசி பக்குவமாக வெந்த நிலை என்பதையே குறிக்கும்.

பழந்தமிழரிடம் சோறு எனும் வார்த்தை பக்குவப்பட்டதை அல்லது மென்மையாகிவிட்டதைக் குறிக்கும், தமிழரிடம் அரிசி சாதத்துக்கு அடிசில் எனும் பெயர்தான் இருந்ததே தவிர சோறு எனும் வார்த்தை இல்லை.


"நெய்பட அடிசில்" என சொல்லும் வரியும் "அக்கார அடிசில்" என சொல்லும் வரியும் இங்கே சோற்றுக்கு அடிசில் எனும் பெயர் இருந்ததைத்தான் சொல்கின்றன‌.

ஆம் சோறு என்பது அரிசிசோற்றை மட்டும் குறிக்கும் என்பதும் தவறான வாதமாகும், அடிசில் என்பதுதான் சரியான வாதமாகும்.

அது அன்னம் போல் வெண்மை நிறத்துக்கு வருவதால் அன்னம் என்றும் அழைக்கப்பட்டது.

நெல்லுச்சோறு, கம்பஞ்சோறு, வரகு சோறு மூங்கில் சோறு என எல்லா தானியனங்களின் பக்குவப்பட்ட நிலையே சோறு.

மென்மையான பகுதி, அல்லது பக்குவமான நிலை சோறு எனப்படும் என்பதற்கு சோற்றுக்கற்றாழை சிறந்த உதாரணம்.

ஆம், கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, யானை கற்றாழை என பலவகை உண்டு. சோற்று கற்றாழையின் உட்பகுதி சோறு போல மென்மையானது என்பதால் அது சோற்றுக்கற்றாழை என்றாயிற்று.


இன்னும் கிராமங்களின் வார்த்தைகளில் கூட பனைமரத்தின் மென்மையான பகுதி பனஞ்சோறு என்று அழைக்கப்படும் வார்த்தை, சோறு என்பது அரிசி சாதம் அல்ல, அது மென்மையான பதநிலை என்பதை சொல்கின்றது.

இப்பொழுது முக்கியமான விஷயத்துக்கு வரலாம்..., "சோறு கண்ட இடம் சொர்க்கம்" என ஏன் சொன்னார்கள்?

எங்கே இறைவன் இருப்பானோ அந்த மனதில் ஞானம் இருக்கும், ஞானம் இருக்கும் இடத்தில் கடினத்தன்மை இராது, மாறாக அன்பும் கருணையும் மிகுந்திருக்கும், அந்த மனம் இளகிய மனமாக "சோறு" எனும் பக்குவ நிலையினை அடைந்திருக்கும்.

இதைத்தான் "சோறு கண்ட இடம்" அதவாது ஞானமிக்க இளகிய மனம் இருக்குமிடம் சொர்க்கம் என்றார்கள் இந்துக்கள்.

இன்னும் அவர்களிடம் இதை விளக்கும் வாக்கியம் உண்டு, "ஆத்துக்குள் நின்று அரோகரகா அரோகரா என கத்தினாலும் சோற்றில் உண்டாம் சுகம்" என்பது சித்தர் வாக்கு.

இது "அகத்துக்குள் இருந்து அரோகரோ என கத்தினாலும் சோற்றுக்குள் உண்டாம் சுகம்" என்ற வரியின் திரிபு.

அகம் என்றால் வீடு அல்லது இறைவன் இருக்கும் ஆலயத்தில் நின்று அரோகரா என சொல்லிக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு பக்குவ நிலை அதாவது சோறு போன்ற பதநிலையினை அடைந்தால்தான் நிம்மதி கிட்டும் என்பதே சித்தர் சொன்ன பொருள்.

ஆம், சோறு என்பது அரிசியினை பொங்கிவைக்கும் விஷயம் அல்ல, சோறு என்றால் பதம் எனப் பொருள்.

சாறு, சேறு, சோறு என மூன்றும் தொடர்புடைய வார்த்தைகள், சாறு என்றால் நீர், சேறு என்றால் கூழ், சோறு என்றால் மிருதுவான திரவநிலை, மிதமான பக்குவம்.

ஆம் அந்த சரியான பக்குவ நிலைதான் "சோறு".

இன்னும் கொஞ்சம் ஆழமாக செல்லலாம்..


சமஸ்கிருததில் சாதம் என்றால் அது மூலப்பொருள்.


"சாத்" என்பது பரம்பொருளை குறிக்கும் ஒரு வார்த்தை. சாத்வீகம், சாக்தம் என்பதெல்லாம் அதன் சாயலான பொருளே. சாத்+அம் என்பது ஒரு பக்குவ நிலையினைக் குறிக்கும் வார்த்தை.


ப்ரசாத் அல்லது பிரசாதம் என்பது இறைவனுக்கு இடும் படையலாயிற்று, இன்றும் கோவில்களில் கொடுக்கும் பிரசாதம் என்பதன் பொருள் "இறைவனுக்கு படைக்கப்பட்டது" என்பதே.


(வரப்பிரசாதம் எனும் வார்த்தை இறைவன் வழங்கிய வரம் என்று பொருளானதும் இப்படித்தான், ப்ரசன்னம் எனும் தோன்றுதலை குறிக்கும் வார்த்தை, வெளிப்படுவதை குறிக்கும் வார்த்தை பிரசவம் என்றானதும் இப்படிதான்.


பிரசவம் எனும் வடமொழி சொல்லுக்கு புறம்தருவித்தல் எனும் அழகான தமிழ் சொல் உண்டு, அது கடல் கடந்த தமிழரிடம் இன்றும் உண்டு)


ஆம், சாதம் என்பது அரிசி சோற்றை குறிக்கும் என்பது தவறான வார்த்தை.


சாத்துதல், படைத்தல் எனும் பொருளில் வரும் வார்த்தை அது, இன்றும் வைணவர்கள் இறைவனுக்கு சாற்றிய அமுதமான அடிசிலை இறைவனுக்கு "சாற்றிச் சொன்ன அமுது' என்பதாக 'சாத்தமுது' என தமிழில் சொல்வார்கள்.


சாத்திய அமுது என்பது திரிந்து சாதம் ஆகியிருக்க சில வாய்ப்புகள் உண்டு.


இதனால் ஆழ சிந்தித்தால் இன்னும் விஷயம் விளங்கும்..


ஏன் எத்தனையோ தானியங்கள் இருந்தபொழுது சோறு படைத்தார்கள்? சிவனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் இதர அரிசிகள் படைக்காமல் ஏன் சோற்றால் அபிஷேகம் செய்தார்கள்?


அதுவும் புழுங்கல் அரிசியில் செய்யாமல் ஏன் பச்சரிசியில் செய்தார்கள்?


இரு விஷயம் முக்கியமானது, முதலில் அரிசி அன்று அபூர்வ பொருள், அதிகம் விளையாது, அன்றாட உணவில் கம்பும் கூழும் உண்டே தவிர அரிசி அதிகம் இல்லை, அந்த நாள் இறைவனுக்கு சாத்துதல் எனும் பெயரில் மக்களெல்லாம் வயிறாற உண்ண வைக்க நோக்கம் இருந்தது.


வெண்மை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துமதம், உடை, திருநீறு போல அரிசி அன்னமே வெண்மையாக இருப்பதைக் கண்டது, ஆம் அரிசி அன்னம் போல் மனம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதும் தத்துவம்.


இரண்டாவது கண்டிப்பாக பச்சரிதான் வைப்பார்கள், காரணம் அவித்த நெல் முளைக்காது. அதாவது அதில் உயிர் இல்லை, அதை அவித்தால் இறந்ததை அவித்ததாகின்றது, உயிர் இல்லாததை இறைவனுக்கு படைக்காமல் பச்சரிசி எனும் அவிக்காத அரிசியினை முதல் பொங்கலாக படையலாக இட்டார்கள்.


சோறு எனும் நிலைக்கு அரிசி பக்குவப்பட்டு மானிடருக்கு பயனாவது போல, மனம் பக்குவப்பட்டு மானிடருக்கும் இறைவனுக்கும் மனிதன் பயனுற வாழவேண்டும், பக்குவப்படா அரிசி பசியாற்ற உதவாது, பக்குவப்படா மனித மனம் இறைவனை அடையாது.


இதுதான் சிவலிங்கத்துக்கு அன்னம் சாற்றும் தத்துவம்.


(இறந்தோருக்கு பிண்டம் வைப்பதிலும் இந்த அர்த்தம் உண்டு, நான் பக்குவப்பட்டுவிட்டேன், இறப்பு இயல்பானது தவிர்க்க முடியாதது என அதை தாங்கும் பக்குவத்தை அடைந்து விட்டேன் என பொருள்.

மூன்று பிண்டம் என்பது முக்காலமும் சாவு உண்டு என மனதை பக்குவப்படுத்தும் ஒரு தத்துவம் )


சரி, ஐப்பசியில் ஏன் சரியாக வைத்தார்கள்? எத்தனையோ காலம் இருந்தும் ஐப்பசி மாத பவுர்ணமிக்கு ஏன் அன்னமிட்டார்கள்?


ஆடியில் விதைப்பது புரட்டாசி இறுதியில் அறுவடையாகும், மறுபடி ஐப்பசியில் விதைப்பது தைமாதம் அறுவடையாகும்.


ஆடிமாத காவேரி பொங்கி அதன் விளைச்சலின் முதல் படையல் சிவனுக்கு இடுதல் விஷேஷம், தஞ்சை பெரிய கோவிலின் பிரமாண்ட லிங்கத்துக்கு பிரமாண்ட அன்னம் சாத்தப்பட்டது இதனாலேதான்.


எல்லா பவுர்ணமியும் விஷேஷமானது என்றாலும் ஐப்பசி எனும் துலா மாத பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உண்டு.


இதனை ஒரு புராணக் கதையோடு சொன்னார்கள் இந்துக்கள், அங்கே வாழ்வியல் நெறி சொல்லி மக்களுக்கு போதித்து அப்படியே பிரபஞ்ச அருளைப் பெற வழி செய்த மதம் இந்துமதம்.


ஆம் , இந்த பவுர்ணமி அன்றுதான் சந்திரன் தன் சாபம் தீர்ந்து பதினாறு கலைகளுடன் பூரண சந்திரனாக ஜொலிக்கும் நாள்.


என்ன சாபம் அது?


வானியலை என்றோ ஆழமாக மிக நுணுக்கமாக கற்றிருந்த இந்துமதம், சந்திரனின் இயக்கமும் சுழற்சியும் பலனும் சொல்ல மானிடருக்கு அவரின் சுபாவப்படி சொல்ல மானிட உறவுகளை சுட்டிக்காட்டி புரியவைக்க முயன்றார்கள்.


அதன்படி 27 நட்சத்திரங்களுக்கும் சந்திரனுக்குமான தொடர்பை மண உறவு என்றார்கள்.


அத்திரி முனிவர் அனுசுயா தம்பதியர் மகனான சந்திரனுக்கு மகா தபஸ்வியான தட்சனின் மகள்கள் 27 பேரை திருமணம் செய்து வைத்தான் தட்சன்.


"எல்லா பெண்களையும் ஒன்றுபோல் சமமாக நடத்த வேண்டும்" என்பது அவன் விதித்த நிபந்தனை, சந்திரனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.


எனினும் சந்திரனுக்கு நெருக்கமான மனைவியான ரோகினி நட்சத்திரத்திடம் மட்டும் அவன் தனி அன்பு காட்டியதால் மாமனார் தட்சன் அவனுக்கு தேய்ந்து போக சாபமிட்டான்.


அவனின் கலைகள் ஒவ்வொன்றாய் அகன்றன‌.


அவன் 16 கலைகளில் தேர்ச்சி பெற்று அதிபதியாய் இருந்தான்.


மேதைக்கலை, அருக்கீசக்கலை, விடக்கலை, விந்துக்கலை, அர்த்தசந்திரக் கலை, நிரோதினிக் கலை, நாதக்கலை, நாதாந்தக்கலை, சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை, . வியோமரூபினிக்கலை, அனந்தைக்கலை, அனாதைக்கலை, அனாசிருதைக்கலை என பதினாறு.


இவைதான் பதினாறு வகை செல்வங்களின் அடிப்படை.


பின் சிவனை நோக்கி அவன் தவமிருக்க, அவன் சாபம் தீர்த்த சிவன், அவன் மேலும் தேயாதவாறு தலையில் அணிந்து கொண்டு சொன்னார்...


"சந்திரனே! நான் உன்னை அழியாமல் பார்த்துக் கொண்டேன், ஆனால் தட்சன் பெரிய தபஸ்வி என்பதால் அவன் சாபமும் பலிக்கும்.


அதன்படி ஒருமுறை தேய்ந்து ஒருமுறை எழுந்து வருவாய், துலா ராசியில் சூரியன் வரும் நாளில் உன் பதினாறு கலைகளுடன் பூரணமாகி ஜொலிப்பாய்" என வரமருளினார்.


சோமனுக்கு வரமருளியதால் அவர் சோமநாதர் என்றானார்.


இந்நாளில் இந்துக்களுக்கு போதிக்கப்பட்ட தத்துவம் இங்கிருந்துதான் வருகின்றது.


சந்திரன் என்பது மனம் சம்பந்தப்பட்ட கிரஹம் ஒருவரின் மனோநிலை ஜாதகத்தில் சந்திரன் இருப்பதை பொறுத்துத்தான் அமையும்.


சந்திரனே தன் குறை தீர சிவனை சரணடைந்தது போல், அவன் 16 கலைகளுடன் ஜொலிக்கும் இந்நாளில் சிவனை சரணடைந்தால் மனதின் எல்லா கவலையும் தீரும், மனோபலம் அதிகரிக்கும் என்பதை சொல்லும் நாள் இது.


இன்று சிவவழிபாடு அவசியம், மகா அவசியம். அதனாலே இந்நாள் மிக மிக முக்கியம்.


ஜாதக ரீதியாக துலாராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது எதிரே மேஷ ராசியில் சந்திரன் வருவதால் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பார்கள். அப்போது சந்திரன் ஒளி பூரணமாகும்.


இந்த பூரணமான நாளில் சிவன் அருளில் சந்திரனின் பலன்களை பெற்றுக்கொள்ளுதல் நன்று.


இன்று சிவாலயத்தில் வழிபாடுகள் முக்கியம், அன்னதானம் முக்கியம். தானம் கொடுத்தலும் பெறுதலும் நன்று.


அப்படியே இரவில் இன்றைய பவுர்ணமி ஒளியில் நனைதல் நன்று, இந்து மரபில் நிலாச்சோறு என்பது தொடங்கி, பவுர்ணமி இரவில் வழிபாடு என்பதெல்லாம், சந்திரன் அருள் கிடைப்பதற்கான வழிமுறையே.


சூரிய வெளிச்சம் உடலில் படுவது போல் சந்திரன் ஒளியும் உடலில் படுதல் அவசியம், இன்றைய நாகரீக உலகில் அது இல்லை, மனரீதியாக பலர் சந்திக்கும் நெருக்கடிக்கு அதுதான் முதல் காரணம்.


இன்று சிவனை வழிபட்டு இரவில் சந்திரனில் முழுக்க நனைய ஏகப்பட்ட பலன்களை பெற்றுக்கொள்ள முடியும், இரவு நிலவொளி வழிபாடு தியானம் போன்றவை இன்னும் கைகொடுக்கும்.


இந்த புனிதமான நாளில் சிவவழிபாடும் பவுர்ணமி பூஜையும் செய்து, பூரண சந்திரன் அருளோடு, எல்லோர் மனமும் பெரும் நிறைவு பெற பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்...