Saturday, April 22, 2017

ராஜ ராஜ சோழன் தஞ்சைப்பெரிய கோவில்

#தஞ்சை_பிரகதீஸ்வரர்_அறிந்திராத_சில_அதிசய _தகவல்கள்..!!!
               

படிக்கும்போது நாம் உணர்ந்து இருந்த பிரம்மாண்டத்தை விட - நேரில் பார்க்கும்போது , இன்னும் பிரமாதமாக இருக்கும் ஒரு அற்புதம் தான் , இந்த பிரகதீஸ்வரர் . தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படும் சோழர் காலத்து மாபெரும் சக்கரவர்த்தி.

டிஸ்கவரி சானலில் , கோவில் எப்படி அந்த காலத்தில் கட்டி இருந்து இருப்பார்கள் என்று டாக்குமெண்டரி அடிக்கடி காட்டுகின்றனர். அதைப் பார்த்த பிறகுதான், நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன.
எப்படிய்யா, அவ்வளவு பெரிய கல்லை , தூக்கி மேல வைச்சாங்க..? எங்கே கிடைச்சு இருக்கும்,?எப்படி அங்கே இருந்து தூக்கி வந்து இருப்பாங்க..? அதோட எடை இவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிக்கிறாங்க? அதுக்கு என்ன வழி ?

எதற்கு வேலை மெனக்கெட்டு இப்படி செய்யனும்? இவ்ளோ பெரிய விஷயம் பண்ணனும்னா, அப்போ உள்ள இருக்கிற கர்ப்பகிரகம் எவ்வளவு சக்தி வாய்ந்த கதிர்களையும் ஈர்க்க கூடியதா இருக்கணுமே! முகத்தில் அறையும் பிரமாண்டத்தையும் தாண்டி, காலம் காலமாக அருள் பாலித்து வரும் அந்த இறைவனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதையும் மனப்பூர்வமாக உணர முடிகிறது.

எண்பது ஆயிரம் கிலோ எடையுள்ள கல்லை, தற்போது உள்ள எந்த தொழில் நுட்பமும் இருந்து இருக்க வாய்ப்பில்லாத அந்த காலத்தில் , எப்படி கோபுரத்தின் உச்சியில் வைத்து இருக்க கூடும்? அதை தாங்கும் அளவுக்கு கோபுரம் வடிவமைக்கப்பட்டது? இவையெல்லாம், தற்போது இருக்கும் பொறியியல் வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தும் அதிசயங்கள்...

கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஒன்றுகூடி - உடல் உழைப்பு , பொருள் உதவி எல்லாம் செய்து எழுப்பிய மகத்தான ஆலயம் இது. ராஜ ராஜ சோழன் என்னும் அரசன், ஒரு தனிமனிதன் தன் பெருமையை காலம் காலமாக நிலைக்க செய்த ஒரு செயல் , என்று நினைத்து , இங்கு நிலவும் தெய்வ சாந்நித்தியத்தை மறந்துவிட போகிறீர்கள்...

இங்கு உள்ள வராஹி - ஒரு மாபெரும் வரப்பிரசாதி. சோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனுக்கு போர்படைத் தளபதி. கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு இங்கு இவளுக்கே என்னும்போது - நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது. அடுத்து நந்தி எம்பெருமான். பிரதோஷ நேரத்தில் , ஒருமுறை சென்று பாருங்கள்...

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் - ராஜ ராஜ சோழனின் காலத்தில் , அரசருக்கு பலவிதங்களில் இந்த ஆலயம் அமைக்கும்போது வழி காட்டி இருந்து இருக்கிறார். சிவலிங்கம் மட்டும் 25 ,000 கிலோ எடையுள்ளது என்கிறார்கள்..... இப்போது புரிகிறதா? இது மனிதமுயற்சியையும் தாண்டி, தன் செல்லப் பிள்ளைகளான சித்தர்களையும் உடன் வைத்துக்கொண்டு - அருண்மொழி என்னும் கருவியின் மூலம் , சிவம் தன் சித்து விளையாட்டை நிகழ்த்தி இருப்பதை!

அருண்மொழித் தேவருக்கு, சிவம் எப்பேர்பட்ட பேறை அளித்து இருக்கிறது தெரியுமா? அவர் மூலமாக , சிவம் தான் உறைய , தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மாபெரும் அதிசயம் தான் , இந்த ஆலயம்.

மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பாருங்கள்...

புராதனக் கல்வெட்டு சாசனங்களையும் ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தையும் பற்பல தெய்வீக ரகசியங்களையும் உள்ளடக்கியது, தஞ்சை பெருவுடையார் கோயில். சுந்தர சோழர் வம்சத்தில் வந்த சக்ரவர்த்தி ராஜராஜ சோழனால் கோயில் எழுப்பப்பட்ட வரலாறு, நாடிச் சுவடியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் காவிரியின் கரையில் கம்பீரமான 216 அடி விமான உயரமும், அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட 80 டன் எடையுள்ள கலசத்தையும் பொருத்தி 9 அடி உயரமும், 23.5 அடி சுற்றளவும், 25 டன் எடையும் கொண்ட ஒரே கல்லால் ஆன பெருவுடையார் லிங்கத்தையும் தனது குருவான ‘ஹரதத்தர்’ ஆலோசனை பேரில் உருவாக்கினார் ராஜராஜ சோழன். நந்தி தேவனார் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர். கோயிலுக்கு வாஸ்து சாந்தி செய்த பின்னரே நந்தி தேவரை நிறுவினார், சோமன் வர்மா என்ற தலைமை சிற்பி. 12 அடி உயரமும் 19.5 அடி நீளமும் கொண்டவர் நந்தி. ஆதலால், வாஸ்து புருஷன் தன் அருளாசியை பக்தர்களுக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சொந்த வீடு, கடை, நிலம் போன்ற அசையா சொத்துகளை வாங்க எண்ணுபவரும், வாங்கிய சொத்துகள் விருத்தி ஆகவும் அமாவாசை திதியில் உச்சி வேளையில் நந்தியின் வால்புறத்தில் நின்று நந்தி சகஸ்ரநாமம் சொல்ல சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.

பெருவுடையார், பஞ்ச பூதங்களின் அம்சம். இவரை தொழுவது பஞ்ச பூத லிங்கங்களை தொழுவதற்கு சமம். சரும நோயினால் அவஸ்தைப்பட்ட சோழ மன்னர், நோயின் கொடுமை தீர ஆலய யாத்திரையை மேற்கொண்டார். அருணகிரிநாதருக்கு வந்த நோய்க்குச் சமமான நோயால் பீடிக்கப்பட்ட சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனைத் தொழச் சென்றார்.

அப்போது மன்னரின் குலகுருவும் உடன் இருக்க, கருவறையின் உள்ளிருந்து அசரீரி ஒலித்தது: ‘‘ராஜராஜனே, எமக்கொரு கோ இல் சமை.” இம்மொழி கேட்ட மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் தியாகராசரைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது அகஸ்திய மகரிஷியே வானில் தோன்றி ஆசி கூற, ஓலைச்சுவடி படிக்கப்பட்டது.

அதில் தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. சிவனே நாடி படித்ததாக கூறுகிறார், சிவ வாக்கியர். நர்மதை தீரத்திலிருந்து மூலவருக்கு கற்களை கொணர்ந்து, அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்தது. இந்தக் கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் இந்த லிங்க மூர்த்திக்கு ‘பெருவுடையார்’ என்ற பெயர் வழங்கி வருகிறது.


கோபுரத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலேயரின் உருவம் காணலாம். இது பின்னர் இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆள்வர் என்பதன் குறிப்பாகும். மேலும் பற்பல ரகசிய கல்வெட்டுக்கள் தேசத்தை ஆள்பவரின் பெயரையும் காட்டுகின்றன. ராஜராஜ சோழ மன்னரின் படமும், அவரது குரு ஹரி தத்தர் ஓவியமும் உள்ளது உள்ளபடியே வரையப்பட்டுள்ளன. நாடிச் சுவடிகளை படித்த முனிவர், ராஜராஜனின் நோய் நீங்கும், வம்சம் தழைக்கும் என்றெல்லாம் கூறி வந்தவர், காலத்தால் கோயில் சிதிலம் அடையாது இருக்க, ‘‘திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு” என்ற யாகத்தை செய்யச் சொன்னார்.

இந்த யாகம் 288 நாட்கள் நடைபெற்றது. சுமார் ஆறு மண்டல காலம். கோவிலை கைப்பற்றும் எண்ணத்தில் - மாற்று அரசர்கள், அமைச்சர்கள், அரசு பிரதானிகர்கள் யாரும், ஆலயத்துள் எவ்வகையில் நுழைந்தாலும் அவர்கள் சிம்மாசனத்தை இழப்பர்; குலம் நசியும் என்று நந்தி மண்டபத்திலிருந்து அசரீரி ஒலித்தது. இதனாலேயே, பிரகதீஸ்வரன் சந்நதியுடைய தஞ்சை பெருங்கோயிலுக்கு அரசரோ, அவர் குடும்பத்தவரோ நுழைவது தீமை பயக்கும் என்கிறது, நாடி. இதனாலேயே மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களிடமிருந்து இந்தக் கோயில் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
                 

இங்கே, அஷ்டதிக் பாலகர்கள் அமர்ந்து வழிபாடு செய்கின்றனர். ஆறு அடி உயரம் கொண்ட இந்திரன், வருணன், அக்னி, ஈசானன், வாயு, நிருதி, யமன், குபேரன் போன்ற விக்ரகங்களைக் காணலாம். இவை ஜீவன் உடையவை. கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 தேய்பிறை பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது நாடி.

வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:
                 
‘‘பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே.’’

பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி,நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.

நடந்தவை எல்லாம், கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்ட ராஜ ராஜ சோழன் திரைப்படம் போன்று இருக்கிறது என்று சாதாரணமாக நினைத்துவிடப் போகிறீர்கள். நம் கண் முன்னே நிகழ்ந்த நிஜம் என்பதற்கு - கம்பீரமாக நிற்கும் இந்த பிரகதீஸ்வரர் சாட்சியாக நிற்கிறார்.

ஓம்  சிவாய நம

Friday, April 21, 2017



#உனக்குள்ளும்_உண்டு_ஓர்_பாம்பு

பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார். அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சட்டைமுனி சித்தர் நின்றார். “இங்கு எதைத் தேடுகிறீர்கள்?” என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை” என்றார். இதைக் கேட்ட சட்டைமுனி சிரித்தார். “நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே” என்றார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.
சட்டை முனி சித்தர் கனிவோடு பாம்பாட்டியைப் பார்த்து விளக்க மளிக்கத் தொடங்கினார். “அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதி யிலி ருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டு இருக்கிறது. ‘குண்டலினி’ என்று அதற்கு பெயர். தூங்கிக் கொண்டு இருக்கும் அந்தப் பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்த மூலாதாரப் பாம்பின் உறக்கம் தான். இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது ‘குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும். அதனால் தியானம் சித்திக்கும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் இரகசியம் இதுவே” என்று சொல்லி முடித்தார். “குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்!” என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார். பாம்பாட்டியார் செய்த தொடர்யோக சாதனையால் குண்டலினி யோகம் கைகூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. இரவு பகலாக பல நாடுகளையும் சுற்றினார். மக்களின் வியாதிகளை மூலிகைகளால் குணமாக்கினார்...
             

Tuesday, April 4, 2017

நாளை ஸ்ரீ ராமநவமி 5/04/2017 புதன்

தோஷம் விலகி ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ
ராமன் வழிபாடு: புதன்கிழமை  ஸ்ரீராமநவமி
                          

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது.அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. ஆனால் நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது அவருக்கு பெரும் மனக்குறை. வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார்.

அந்த யாகத்தில் கிடைத்த பாயாசத்தை தசரதர் தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர். பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதி லையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் செய்தார்.

பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார். சீதையை தீக்குளிக்க செய்து புஷ்ப விமானத்தில் அழைத்து கொண்டு, அயோத்தி சென்று முடிசூடி நல்ல முறையில் அரசாண்டார்.ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.    ‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின் பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.

ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்ற போதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார்.

கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம். ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.
                         
  • 😁